செய்திகள்

தென்ஆப்பிரிக்கா கேப்டனுக்கு 20 சதவீதமும் வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம்

Published On 2018-02-11 10:50 GMT   |   Update On 2018-02-11 10:50 GMT
ஜோகன்னஸ்பர்க் 4-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvIND #PINKODI
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தவான் 109 ரன்களும், விராட் கோலி 75 ரன்களும், டோனி 42 ரன்களும் எடுக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்தது.

தென்ஆப்பிரிக்கா மோர்னே மோர்கல், ரபாடா, கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலுக்வாயோ ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இந்த ஐந்து பேரும் இணைந்து 46 ஓவர்கள் வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர் டுமினி நான்கு ஓவர்கள் வீசினார்.



ஐந்து வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியதால் போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்கா கேப்டன் மார்கிராமிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார்.

இன்னும் 12 மாதத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால், மார்கிராம் கேப்டனாக செயல்பட்டால் தடைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது போட்டி நாளைமறுநாள் (13-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News