செய்திகள்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் கோலி ஆடுவது சந்தேகம்

Published On 2017-11-29 05:17 GMT   |   Update On 2017-11-29 05:17 GMT
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது.

இதை தொடர்ந்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டியும், மூன்று 20 ஓவர் ஆட்டமும் நடக்கிறது. டிசம்பர் 10, 13 மற்றும் 17-ந்தேதிகளில் ஒருநாள் போட்டியும், டிசம்பர் 20, 22 மற்றும் 24-ந்தேதிகளில் இருபது ஓவர் போட்டியும் நடக்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 20 ஓவருக்கு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் கேப்டன் விராட் கோலி அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் ஒருநாள் போட்டியில் இருந்து அவர் ஓய்வு கேட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் விராட் கோலி ஆடுவது சந்தேகமே. சொந்த காரணங்களுக்காக அவர் 20 ஓவர் தொடரில் ஆடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால் தான் 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் தேர்வு தாமதமாகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

விராட் கோலி 20 ஓவர் தொடரில் இருந்து ஓய்வு கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அணி டிசம்பர் கடைசியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதும் போது அதிகமான ஓய்வு தேவை என்று விராட் கோலி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து போட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
Tags:    

Similar News