செய்திகள்
பயிற்சி ஆட்டம்: இலங்கை முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவிப்பு
இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இலங்கை அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட தீர்மானித்தது.
இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான அந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் யுனிவர்சிட்டி கேம்பஸில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய பிரசிடென்ட் லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமரவிக்ரமா 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கருணாரத்னே 50 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
அடுத்து வந்த திரிமன்னே 17 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மேத்யூஸ் 54 ரன்னும், டிக்வெல்லா அவுட்டாகாமல் 73 ரன்களும் எடுத்தனர். பெரேரா 44 பந்தில் 48 ரன்களும், சில்வா 36 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் நாளில் 88 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்துள்ளது.