செய்திகள்

உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு

Published On 2017-09-11 15:53 IST   |   Update On 2017-09-11 15:53:00 IST
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டது.



அதன்படி முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அணி கடந்த சில தினங்களாக துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்தனர். பாகிஸ்தான் சென்றடைந்த அவர்கள் வரலாறு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.

Similar News