செய்திகள்

2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி

Published On 2017-03-30 00:35 GMT   |   Update On 2017-03-30 00:35 GMT
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது
சாவ்பாலோ:

32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும். 5-வது இடம் பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

சாவ்பாலோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில், பராகுவேயை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடியது. பிரேசில் அணியில் பிலிப் கவ்டினோ, நெய்மார், மார்செலோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா 0-2 என்ற கோல் கணக்கில் பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. தடை காரணமாக லயோனல் மெஸ்சி ஆடாதது அர்ஜென்டினாவுக்கு பலத்த பின்னடைவாகிப் போனது. இதே போல் சிலி 3-1 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவையும், பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும், கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரையும் தோற்கடித்தன.

இந்த பிரிவில் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. 14 ஆட்டங்களில் விளையாடி அதில் 10 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 33 புள்ளிகள் சேர்த்து முதலிடம் வகிக்கும் பிரேசில் அணி 2018-ம் ஆண்டு உலக கோப்பைக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலக கோப்பையிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் தான் என்பது நினைவு கூரத்தக்கது. கொலம்பியா 24 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், உருகுவே 23 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சிலி 23 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா 22 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. 

Similar News