செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சமீர் வர்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

Published On 2016-11-26 13:17 GMT   |   Update On 2016-11-26 13:17 GMT
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சமீர் வர்மா டென்மார்க் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவின் சமீர் வர்மா டென்மார்க்கின் ஜான் ஜார்கென்சனை எதிர்கொண்டார்.

சமீர் வெர்மாவின் ஆட்டத்திற்கு டென்மார்க் வீரர் கடும் சவாலாக விளங்கினார். இதனால் சமீரால் எளிதாக புள்ளிகள் பெற இயலவில்லை. ஆட்டம் பரபரப்பாகவே சென்றுக் கொண்டிருந்தது. இறுதியில் முதல் செட்டை 21-19 என சமீர் கைப்பற்றினார்.

2-வது செட்டும் அப்படியே சென்றது. இந்த செட்டை 21 புள்ளிகளுக்குள் சமீரால் முடிக்க முடியவில்லை. இறுதியில் கடும் போராட்டத்திற்குப் பின் 24-22 என 2-வது செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 என நேர்செட் கணக்கில் சமீர் வர்மா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சூப்பர் சீரிஸ் அளவிலான தொடரில் சமீர் வர்மா தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Similar News