செய்திகள்

ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பதக்கம் வெல்வாரா?

Published On 2016-08-21 13:30 IST   |   Update On 2016-08-21 13:30:00 IST
ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் இந்தியாவுக்கு 3-வது பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, துடுப்பு படகு, ஜூடோ, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், கோல்ப், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு இரண்டு பதக்கமே கிடைத்துள்ளது. பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.பெண்கள் பெற்ற 2 பதக்கம் மூலமே இந்தியாவின் மானம் காக்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் இந்தியாவுக்கு 3-வது பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பங்கேற்கும் 65 கிலோ பிரிவு பிரீஸ்டைல் இன்று நடக்கிறது. லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்று முத்திரை பதித்த அவர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை பெற்று கொடுப்பாரா? என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவர் தகுதி சுற்றில் மங்கோலிய வீரர் கான் ஜோரிக்கை சந்திக்கிறார். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இந்த போட்டி இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. கடைசி நாளில் யோகேஷ்வர்தத் தங்கம் வென்றால் மட்டுமே ஈடு செய்ய இயலும். நிறைவு நாளில் எல்லோரது எதிர்பார்ப்பும் அவர் மீதே இருக்கிறது.

Similar News