செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: இறுதிப் போட்டியில் 4-வது இடம்பிடித்து அபினவ் பிந்த்ரா பதக்கம் வாய்ப்பை இழந்தார்

Published On 2016-08-08 21:16 IST   |   Update On 2016-08-08 21:16:00 IST
இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். 6 சுற்றுகள் கொண்ட இதில் அபினவ் பிந்த்ரா 625.7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் அபினவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தகுதிச் சுற்றில் இத்தாலி வீரர் நிக்கோலா சம்ப்ரியானி 630.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையையும் பதிவு செய்தார். ரஷிய வீரர் 629 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், குரோஷிய வீரர் 628 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், உக்ரைன் வீரர் 627 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், 626.2 புள்ளிகளுடன் மற்றொரு உக்ரைன் வீரர் 5-வது இடத்தையும், ஹங்கேரி வீரர் 625.9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், பல்கேரிய வீரர் 625.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர். ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் தகுதிப்பெற்ற 8 வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் அபினவ் பிந்த்ரா 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இத்தாலி வீரர் நிக்கோலா கேம்ப்ரியானி 206.1 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 204.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். ரஷ்யா வீரர் விளாடிமிர் மாஸ்லென்னிகோவ் 184.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தது.

Similar News