செய்திகள்

பிரேசில் கால்பந்தில் சிறந்தவர் நெய்மாரா? மார்டாவா?

Published On 2016-08-08 10:02 IST   |   Update On 2016-08-08 10:02:00 IST
ஆண்களுக்கான கால்பந்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் ஒரு கோல் கூட அடிக்காமல் டிரா கண்டது. இதனால் உள்ளூர் ரசிகர்கள் பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் போது, ‘நெய்மாரை விட மார்டாவே சிறந்தவர்’ என்று கோஷம் எழுப்பினர்.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக்கில் 12 அணிகள் இடையிலான பெண்கள் கால்பந்து போட்டியில், பிரேசில் அணி (இ பிரிவு) தனது 2-வது லீக்கில் சுவீடனை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் கால்இறுதியை உறுதி செய்தது. பிரேசில் நட்சத்திர வீராங்கனை மார்டா 2 கோல்கள் அடித்தார். இந்த வெற்றியை குழுமியிருந்த 43 ஆயிரம் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆண்களுக்கான கால்பந்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் ஒரு கோல் கூட அடிக்காமல் டிரா கண்டது. எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நெய்மாரும் சோடை போனார். இதனால் எரிச்சல் அடைந்த உள்ளூர் ரசிகர்கள் பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் போது, ‘நெய்மாரை விட மார்டாவே சிறந்தவர்’ என்று கோஷம் எழுப்பினர். 5 முறை உலகின் சிறந்த வீராங்கனை விருது பெற்றவரான மார்டா இது பற்றி கூறுகையில், ‘எங்களது மிகச்சிறந்த வீரர் நெய்மார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் அற்புதமான வீரர். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இந்த மாதிரி ஒப்பிடுவதை ரசிகர்களிடமே விட்டு விட வேண்டும்’ என்றார்.

Similar News