திருச்செந்தூர் அகவல் பாடிய திருச்சிற்றம்பல நாடிகள் சித்தர்!
- திருச்செந்தூர் அகவல் பாடல் மொத்தம் 428 வரிகளை கொண்டது.
- சித்தராக மாறுவதற்கு திருச்செந்தூர் முருகன் அருள்தான் முக்கிய காரணம் என்று சொல்வார்கள்.
திருச்செந்தூர் முருகன் மீது அளவில்லாத பக்தி கொண்டவராக திருச்சிற்றம்பல நாடிகள் என்ற சித்தர் இருந்தார். இவர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
சீர்காழி அருகே உள்ள புள்ளிருக்கு வேலூர் என்ற ஊரில் பிறந்த இவர் தில்லை நடராஜரை நாடி துடிப்பாக கொண்டு வாழ்ந்ததால் சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்ற பெயர் பெற்றார். இவருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இவர்களுடன் தல யாத்திரை செல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தார் சிற்றம்பல நாடிகள் சித்தர்.
திருச்செந்தூர் முருகன் மீது கொண்ட பற்று காரணமாக இவர் ஒரு தடவை அங்கு சென்று அந்த ஆலயத்தில் நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். முருகன் மீது பல்வேறு பாடல்களை எழுதினார். முருகனை போற்றி இவர் எழுதிய நூல் திருச்செந்தூர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் அகவல் பாடல் மொத்தம் 428 வரிகளை கொண்டது. அதில் திருச்செந்தூர் முருகனை பல வழிகளில் அவர் புகழ்ந்து பாடி உள்ளார். உதாரணத்திற்கு ஒன்றை பார்க்கலாம்.
ஓம் எனும் தாரக ஒண்பொருள் சிவனுக்கு
ஆம் என மொழிந்தே அருள்குரு ஆனோன்;
பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு
நற்பொருள் விளக்கும் ஞானதேசிகன்;
பொய்வழிச் சமணப் புலைஇருள் நீக்கிச்
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி
முருகன்; குமரன் ; மூவிரு முகன் மால்
மருகன்; சிவன் அருள் மைந்தன் ; கந்தன்;
மலைமகள் பாலன் வயங்கிளர் வேலன்:
கலைபயில் புலவன்; கார்த்திகேயன்
வளை ஒரு மருப்பு வாரண முகவற்கு
இளையவன் குகன்; மயில் ஏறும் பெருமாள்
சூரசங்காரன்; சுப்பிரமணியன்;
வீரருள் வீரன்; விரைகமழ் கடம்பன்:
சேந்தன்; வள்ளி தெய்வயானை
காந்தன்; செவ்வேள் காங்கெயன்; சிலம்பன்
ஆயிர நாமத்து ஐயன்: துய்யன்;
சேய்; அருள் கோமான்; சேவத்துவசன்
வரங்கிளர் கருணைப் பரங்கிரி உறைவோன்
மாவினம் விளங்கும் ஆவினன் குடியோன்;
நந்தூர் அலைவாய்ச் செந்தூர்க் கடவுள்;
பாரகம் விளக்கும் ஏரகத்து அமர்வோன்
மாலயன் இறைஞ்சும் சோலைமாமலையோன்
குன்றுதோறாடல் நன்றென மகிழ்ந்தோன்;
குமரவேள் சரணம் குறித்து மாதவத்தீர்
நிமல மெய்ஞானம் நீவிரும் பெறுவீர்
கருத்துரை : 'ஓம்' என்ற பிரணவப்பொருளைச் சிவபெருமானுக்கு உபதேசம் செய்து குருமூர்த்தி ஆனவன். பொதிகை மலையிலே உள்ள அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்த ஞான தேசிகன். பொய் வழியாகிய சமணவழி எனும் இருளைப் போக்கிச் சைவம் வளர்த்த சம்பந்த மூர்த்தி யாகிய ஞான சூரியன், முருகன், குமரன், ஆறு முகத்தோன், திருமால் மருகன், சிவபெருமானின் மைந்தன், கந்தன்; பார்வதியின் பாலன், ஒளி பொருந்திய வேலாயுதம் ஏந்தியவன், பல்கலைப் பண்டிதன், கார்த்திகேயன்; குகன், மயில் ஏறும் பெருமாள், சூரனை சம்ஹாரம் செய்தவன்; சுப்பிரமணியன்: வீரருள் வீரன்; மணம் வீசும் கடம்பமாலை அணிந்தவன்; சேந்தன், வள்ளி தெய்வயானை மணாளன்; செய்வேள்; காங்கேயன், சிலம்பன். ஆயிரம் பெயர் கொண்ட ஐயன் தூயவன், சேய், அன்பர்க்கு அருளும் அரசு; சேவல் கொடியோன், திருப்பரங்கிரியிலே எழுந்தருளி இருப்பவன்; திருவாவினன் குடி எனும் பழநியில் வாழ்வோன்; திருச்செந்தூரன்; திருவோகம் எனும் சுவாமிமலையில் இருப்பவன், திருமாலும் பிரமனும் துதிக்கப் பழமுதிர் சோலை எனும் அழகர் மலையில் அமர்ந்திருப்பவன், குன்றுகள் தோறும் எழுந்தருளித் திருவிளையாடல் புரியோன்.
இத்தகைய குமரப் பெருமானைத்துதி செய்தால் நீங்களும் மாயை ஒழித்து மெய்ஞான அருள் பெறுவீர்கள்.
-இப்படி திருச்செந்தூர் அகவலில் திருசிற்றம்பல நாடிகள் சித்தர் பல இடங்களில் திருச்செந்தூர் முருகனை பாடி உள்ளார். இதனால் திருச்செந்தூர் முருகனின் அருள் அவருக்கு நிரம்ப கிடைத்தது.
அவர் சித்தராக மாறுவதற்கு திருச்செந்தூர் முருகன் அருள்தான் முக்கிய காரணம் என்று சொல்வார்கள். திருச்செந்தூரில் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீர்காழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.
இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீர்காழி சிற்றம்பல நாடிகள், 'நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்' என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடுதுறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.
பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.
அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.
இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீர்காழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லோருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.
கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீர்காழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.
இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன.
கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீர்காழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது.
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.
திருச்சிற்றம்பல நாடிகள் சித்தருக்கு அருள் பாலித்தது போல திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.