சிறப்புக் கட்டுரைகள்

ஐராவதம் மகாதேவன்!

Published On 2025-04-17 17:45 IST   |   Update On 2025-04-17 17:45:00 IST
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி நிதி ஆலோசகராகப் பணியாற்றினார்.
  • மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

உலகின் மூத்த குடி தமிழ்க் குடி என நிரூபித்த பெருமை தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு உரியது. தொன்மையான சிந்து சமவெளி கலாசாரம், திராவிட கலாசாரமே என உறுதி செய்த பெருமையும் அவருக்குரியதுதான்.

சிந்து சமவெளிக் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது இந்த முடிவை உலகிற்கு அறிவித்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார் ஐராவதம் மகாதேவன். சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் பண்டைய தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் சான்றாதாரங்கள் ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டியல் ஆராய்ச்சிகளால்தான் கிடைத்தன.

அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமது கடும் நேர்மை காரணமாக பணிவாழ்வில் பெரும் புகழ் பெற்றவரும் கூட.

அவரிடம் தொல்லியல் துறையில் ஆர்வம் தோன்றக் காரணமாக இருந்தவர் வரலாற்று ஆய்வாளரான அமரர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. நேரில் நீலகண்ட சாஸ்திரி சொன்ன அறிவுரைகளாலும் தொடர்ந்து பல்லாண்டுகள் நீலகண்ட சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துப் படித்துக் குறிப்பெடுத்தும் தமது தொல்லியல் ஆர்வம் வளர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 27 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி நிதி ஆலோசகராகப் பணியாற்றினார். கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

திருப்பூர் கிருஷ்ணன்

அதன்பின் தொல்லியல் ஆர்வத்தாலேயே 51 வயதில் விருப்ப ஓய்வு பெற்று, கல்வெட்டியல் ஆய்வில் முழுமையாக இறங்கினார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, பலப்பல கல்வெட்டுகளை ஆராய்ந்து பண்டைத் தமிழர் சரித்திரத்தை நூல்களாக வெளியிட்டார்.

சிந்து எழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மீதான ஆர்வம்தான் அவரைக் கல்வெட்டு எழுத்தியலுக்கு ஈர்த்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார். கரூர் அருகே புகலூரில் உள்ள குகைகளில் தென்பட்ட குகை எழுத்துக்களில் கூறப்பட்டிருந்த செய்தியை அவர் வெளிக்கொண்டு வந்திருந்த தருணம் அது. அதையொட்டியே அவர் உலகத் தமிழ் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தொல்லியல், பழந்தமிழ் இலக்கியம், இதழியல் என்ற மூன்று துறைகளுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். ஏடு தேடி நடந்து பழந்தமிழ்ச் செல்வத்தை நமக்குக் கொண்டுவந்து சேர்த்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் மேல் அளவற்ற மதிப்புடையவர். சரியாகச் சொல்லப் போனால், அவரைப் பொறுத்தவரை தமிழ்த் தாத்தா அவரது தெய்வம்.

உ.வே.சா. 1937இல் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையை ஆராய்ச்சிக் குறிப்புகளோடு பதிப்பித்தார். பல்லாண்டுகள் கழித்து, 2017இல் உ.வே.சா.வின் அதே ஆய்வுக் குறிப்புகளோடு குறுந்தொகையை மீண்டும் பதிப்பித்தது சென்னையில் இயங்கும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்.

கிரியா எஸ். ராமகிருஷ்ணனின் அச்சு மேற்பார்வையோடு மிகச் சிறப்பாக அந்த மாபெரும் ஆய்வுப் பதிப்பு, மறுபடி வெளிவரக் காரணமாக இருந்தவர் ஐராவதம்தான்.

`குறுந்தொகைப் பதிப்பிற்குப் பெருந்தொகை நல்கியவர்` என்று அவரை அந்நூலின் முன்னுரையில் போற்றுகிறார் உ.வே.சா. நூல் நிலையத் துணைத் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மேனாள் துணைவேந்தருமான தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி. நூலின் முதல் பிரதி தம் வீட்டுக்கு வந்தபோது, உ.வே.சா. படத்தின்முன் அந்தப் பிரதியை வைத்து தியானம் செய்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அதன்பின்னர்தான் பிரதியைத் திறந்து பார்த்தார் ஐராவதம்.

தமிழ்த் தாத்தாவுக்கும் ஐராவதம் மகாதேவனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அவர் ஏடுதேடி நடந்தார் என்றால், இவர் கல்வெட்டுகளைத் தேடித்தேடி நடந்தார்.

ஐராவதம் மகாதேவனுக்கு ஆன்மிக நம்பிக்கை உண்டு. காஞ்சி மகாசுவாமிகள் மீது பெரும் மதிப்புண்டு. இளம் வயதில் தாம் மகாசுவாமிகளைச் சந்தித்தது பற்றி ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆனால் சடங்குகளில் அறவே நம்பிக்கையற்றவர் ஐராவதம். அவரது அன்பு மனைவி கவுரி அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகள் முன் காலமானார். சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட முதல் சடலம் கவுரி அவர்களுடையதுதான்.

அப்போதும் மனைவியின் மரணம் தொடர்பான எந்தச் சடங்கிற்கும் அவர் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை. சடலம் எரியும்வரை அங்கிருந்த அவர், `என் மனைவி இந்த மின்மயானத்தைத் தன் உயிரைக் கொடுத்துத் தொடங்கி வைத்திருக்கிறாள்!` எனச் சொல்லிவிட்டு தம் இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவர் இருக்கும்போதே ஒரு விபத்தில் காலமானான் அவரது மகன் வித்யாசாகர். மகன் பெயரில் வித்யாசாகர் அறக்கட்டளை என்ற ஓர் அறக்கட்டளையை நிறுவினார் ஐராவதம். அந்த அறக்கட்டளை மூலம், பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் நன்கொடை வழங்கிவந்தார்.

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சென்னை சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி, சங்கர நேத்ராலயா போன்ற சேவை நிறுவனங்கள் அந்த அறக்கட்டளையால் பயன் பெற்றன.

தாம் காலமான பிறகு, அந்த அறக்கட்டளைத் தொகை முழுவதையும் சென்னை ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்லத்திற்கு வழங்கி விட வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அந்த விருப்பத்தின் படியே எஞ்சிய தொகை முழுவதும் ராமகிருஷ்ண மடத்தின் மாணவர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.

தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் நான்கு ஆண்டுகள் (1987 - 1991) பணிபுரிந்தார். தமிழ்மணி என்ற எட்டுப் பக்க இலவச இணைப்பைத் தோற்றுவித்து, மொழியியல், தொல்லியல், பழந்தமிழ் இலக்கிய ஆய்வு உள்ளிட்ட துறைகளை வளர்த்தார். தமிழ் இதழியல் துறையில் தடம் பதித்த முக்கியமான இதழ்களில் ஒன்று தமிழ்மணி.

நாணயவியல் அறிஞரான இரா. கிருஷ்ணமூர்த்தி இவரின் நெருங்கிய நண்பர். தொடக்கத்தில் ஐராவதம் மகாதேவனும் பழங்கால நாணயங்களைப் பற்றித்தான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

இயன்றவரை தமிழ்ச் சொற்களையே தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடுடையவர் ஐராவதம் மகாதேவன். அந்தச் சொற்கள் பண்டிதத் தமிழாக இல்லாமல் பழகுதமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

கவர் ஸ்டோரி என்ற தலைப்புடன் வெளியிடப்படும் கட்டுரையை முகப்புக் கட்டுரை என்று குறிப்பிட்டு வெளியிடச் சொல்வார். தமிழில் கலந்த பல அன்னிய மொழிச் சொற்களை நீக்கித் தமிழைத் தமிழாகவே இயங்கச் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.

1930ஆம் ஆண்டு காந்தி ஜயந்தியன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்த அவர், அப்பழுக்கில்லாத நேர்மையாளர். ஒருசிறிதும் வளைந்து கொடுக்காத அவரது நேர்மை வியக்க வைக்கும் அளவு கண்டிப்பு நிறைந்தது.

அவரின் கீழ் பணிபுரிந்த நேர்மையாளர்களை அவர் மனமாரப் பாராட்டினார். அதே நேரம், சற்றேனும் நேர்மைக் குறைவு தென்பட்டால் அத்தகையவர்களைக் கடுமையாய்த் தண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை.

அரசியல் தொடர்பான அவரது தலையங்கங்கள் நெஞ்சுரம் நிறைந்தவை. வெட்டொன்று துண்டிரண்டு என்று தமக்குச் சரி என்று பட்டதைப் பட்டவர்த்தனமாக எழுதும் இயல்புடையவர்.

இட ஒதுக்கீடு பற்றிய அவரது முற்றிலும் நடுநிலையான தலையங்கம் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அந்தத் தலையங்கம் அதன் பெருமை கருதி நாளிதழின் முதல் பக்கத்திலேயே வெளியிடப் பட்டது. ஜெயந்தி என எழுதுவது தவறு, ஜயந்தி என்றே எழுதவேண்டும் என்பார். அந்த சமஸ்கிருதச் சொல் ஜயந்தி தானே தவிர ஜெயந்தி அல்ல. ஐராவதம் ஆசிரியரானவுடன் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வை ஜயலலிதா என வெளியிடச் செய்தார்.

பின்னர் அந்தப் பெயருக்குரியவர் `தன் பெயரைத் தன் விருப்பம்போல் எழுதத் தனக்கு உரிமையில்லையா?` என வினா எழுப்பியதும் ஜயலலிதா பெயர் மட்டும் மாற்றமில்லாமல் ஜெயலலிதா என்றே வெளியிடப் பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்துக்கு மதிப்பளித்தாலும், பெயரளவில் மட்டுமே தம் கருத்தை மாற்றிக் கொண்டார் ஐராவதம். மற்ற இடங்களில் ஜயம் என்றே குறிப்பிட்டார்.

தாம் பணிபுரிந்த நாளிதழில் சீர்திருத்த எழுத்துக்களை இடம்பெறச் செய்தார். தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் போன்றோர் சீர்திருத்த எழுத்துகளை எதிர்த்து வந்த காலகட்டம் அது.

ஆனாலும் கணிப்பொறிக் காலத்தில் சீர்திருத்த எழுத்துக்களே தமிழை வளர்க்கும் எனக் கூறிய ஐராவதம் மகாதேவன், தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழங்கிய தொல்காப்பியர் விருது உள்ளிட்ட இன்னும் பற்பல பெருமைகளைப் பெற்றவர். அவரது ஆய்வுகள் பல்கலைக் கழகங்களில் பாடங்களாக உள்ளன. ஐராவதம் மகாதேவன் என்பதைத் தமிழ்ப் படுத்திக் கொண்டு, `வெள்ளை யானை பெரிய சாமி` என்ற பெயரிலும் அவர் சிற்சில கட்டுரைகளை எழுதியதுண்டு. 2018 நவம்பர் 26-ந் தேதியன்று தம் எண்பத்து எட்டாம் வயதில் காலமானார் ஐராவதம் மகாதேவன். தம் சேகரிப்பில் இருந்த ஏராளமான அரிய நூல்களைச் சென்னை தரமணியில் இயங்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கிவிட்டார்.

ஐராவதம் மகாதேவனின் வெண்கல மார்பளவு சிலை சிற்பக் கலைஞர் ஜி. சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழன்பர்களும் சிந்தனையாளர்களும் கற்றுக் கொள்வதற்கு ஐராவதம் மகாதேவனின் வாழ்க்கையில் நிறையப் பாடங்கள் உண்டு.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

Tags:    

Similar News