- சிலர் வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளையும் சிறப்பாகத் திட்டமிடுவதிலேயே சிந்தனைப் புலிகளாக இருப்பார்கள்.
- வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு பொழுதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காகவே வரமாக வந்திருக்கின்றன.
வாழ்க்கையில் 'எப்' பொழுது இனிக்கும் என்று எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும் இனிய நண்பர்களே! வணக்கம்.
எப்பொழுதையும் விட இப்பொழுதே இன்பப் பொழுது என்பதை எப்பொழுதும் உணர்ந்து வைத்திருப்பதே காலம் நமக்குக் கற்றுத்தருகிற பாடமாக இருக்கட்டும். கைநிறைய நாள்களையும் வாய்ப்புகளை அள்ளி வழங்கும் பொழுதுகளையும் வைத்துக்கொண்டு, 'அப்பொழுது பார்த்துக் கொள்வோம்!' 'அந்த நாளில் செய்து கொள்ளலாம்!; என்று நாளையும் பொழுதுகளையும் தள்ளிக் கொடுப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் சோம்பேறிகளாகச் சிலர் இருப்பர். இவர்களால் எந்தப் பொழுதையும் இன்பப் பொழுதாகக் கழிக்க முடியாது.
சிலர் வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளையும் சிறப்பாகத் திட்டமிடுவதிலேயே சிந்தனைப் புலிகளாக இருப்பார்கள். ஆனால் செயல்படுத்துவது என்று வந்துவிடும்போது செயலற்ற சோம்பேறிகளாய்த் தேங்கிப் போவார்கள். நாளை பார்த்துக் கொள்வோம்!; அடுத்தாண்டில் அவசியம் நிறைவேற்றிக் கொள்வோம்!; இப்போதைக்கு இளமையில்தானே இருக்கிறோம்!, நடுத்தர வயதில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; முதுமை வரும்போது செயல்படுத்திக் கொள்வோம்! என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். மாயாத கவலைகள், தீராத சோம்பல்கள், விலகாத அச்சங்கள் ஆகியவை இப்படிச் செயல்களை ஒத்திபோட்டுக் கொண்டே போவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.
ஓர் எண்ணம் நம்மில் தோன்றும்போதே, அது அப்பொழுதே செயல்வடிவம் பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தோடேயே தோற்றம் பெற வேண்டும். திட்டமிடுதலின் முடிவு செலாற்றுதலின் தொடக்கமாக அமைந்தால் மட்டுமே வள்ளுவர் குறிப்பிடும், 'நெடுநீர்' (தள்ளிப்போடுதல்) 'மறவி' (மறதி) ' மடி' (சோம்பல்) 'துயில்' (தூக்கம்) ஆகிய நான்குவகைக் கேடுகளுக்கும் மனித ஆற்றல் ஆட்படாமல் இருக்கும். தீராத கவலைகளும், ஆறாத ஆசைகளும், குறையாத எதிர்பார்ப்புகளும் நம்மைக் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடைநில்லாப் பேருந்தாய் அலைக்கழித்து, நிகழ்காலத்தில் காலூன்றி இறங்க முடியாத அவல நிலைக்குத் தள்ளி விடுகின்றன.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், நாளின் ஒவ்வொரு பொழுதும் வாழ்ந்தே கழிக்கப்படுவதற்காகவே வழங்கப் பட்டிருக்கின்றன. வாழ்தல் என்றால் செயல்படுதல்; அறத்தின் வழியிலும் அன்பின் வழியிலும் செயல்படுதல். நேர்மையான நெறியில், தனக்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும், தான் வாழும் சமூகத்திற்காகவும், சக உயிரினங்களுக்காகவும், ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு மகிழ்ச்சியாகச் செயல்படுதலே உண்மையான வாழ்தல். அந்தச் செயல்படுதலில் சுணக்கமில்லாமல், வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், வாய்த்த பொழுதிலேயே முழு ஈடுபாட்டோடு ஆழ்ந்துவிடுதலே நிலைத்த இன்பம் நிலையாகத் தொடர இனிய வழி.
'நாளை' 'நாளை' என்று நாளைக் கடத்துவதால் பல 'நாளைகள்' நம்மைக் கடந்து போகலாம். ஆனால் ஒரு 'நாளை' கூட நமக்கானதாக அமையால் போய்விடலாம்; காரணம், 'இன்று' 'இப்பொழுது' என்கிற உடன்நிகழ் தாரக மந்திரம் நமக்கு எட்டாக்கனியாய் எட்டிப்போய் விடுவதே ஆகும். நாளை என்ன நடக்குமோ என்று அஞ்சி, இன்று வாய்த்திருக்கிற பொழுதையும் அச்சத்திலேயே கழித்துவிட்டால் பிறகு திட்டமிட்ட செயலை எப்போது எட்டிப்பிடிப்பது?. நாளை வரப்போகும் துன்பத்திற்காக இன்றே வருத்தப்படத் தொடங்கிவிட்டால், இன்றைய பொழுது முழுவதும் வருத்தப் பொழுதாகவே மாறிவிடும். மேலும் இன்றே நாம் வருந்திவிட்டதால், நாளை வருகிற துன்பப் பொழுது, நமக்காக இன்பப் பொழுதாகவும் மாறாது. அதற்காக நாளை வரப்போகிற துன்பத்திற்காக எதற்காக இன்றே வருந்தத் தொடங்கி இன்றைய பொழுதையும் கண்ணீர்ப் பொழுதாகத் தத்தளிக்கச் செய்ய வேண்டும்?.
மேல்நாட்டில் ஒரு தம்பதியினர், அவர்களுக்குத் திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேன்நிலவுச் சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். செல்வது தேன்நிலவாக இருப்பதால், பிள்ளைகள் இருவரையும் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சுற்றுலா புறப்பட்டனர். பத்து நாட்கள் கப்பலிலேயே சென்று சில நாடுகளைப் பார்த்துவரத் திட்டம்.
புறப்பட்ட ஐந்து நாட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவே கழிந்தன. குடும்பம், பிள்ளைகள், வீடு எல்லாவற்றையும் மறந்து தேன்நிலவுச் சுற்றுலாவை நன்கு அனுபவித்தனர். ஆறாவது நாள் அதிகாலையில்தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
திடீரெனத் தாக்கிய கடல்புயலால் கப்பல் உடைந்து ஒருபக்கமாக மூழ்கத் தொடங்கியது; ' உயிர்காக்கும் படகுகள் இருக்கின்ற பக்கத்திற்குச் சென்று, கப்பலிலிருந்து, படகுக்கு மாறித் தப்பித்துக்கொள்ளுங்கள்' என்று கப்பலின் கேப்டன் அறிவிப்புச் செய்தார். உயிர்காக்கும் படகு இருக்கும் திசைநோக்கி எல்லாருடனும் இந்தத் தம்பதியரும் ஓடினர். படகில் நெருக்கியடித்துக்கொண்டு எல்லாரும் ஏறிவிட்டனர். படகில் இனி ஒரே ஒருவருக்கு மட்டும் இடம் காலியாக இருந்தது. ஆனால் கப்பலில் காத்திருந்ததோ அந்தக் கணவன் மனைவி இரண்டு பேர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசிக்கொள்ள நேரமில்லை; கணவன் மளாரென்று படகுக்குள் குதித்து அந்த காலியிடத்தில் அமர்ந்து கொண்டான்.
படகு கிளம்பி விட்டது; மூழ்கிக்கொண்டிருந்த கப்பலின் மேலே தனித்து நின்றிருந்த மனைவி ஏதோ சத்தம்போட்டுக் கணவனைப் பார்த்துச் சொன்னாள். இந்தக் கதையை ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த இடம் வந்ததும் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வியை ஆசிரியர் கேட்டார். ' படகில் தனித்து ஏறிக்கொண்டு தன்னை விட்டுப் பிரியும் கணவனைப் பார்த்து, அந்த மனைவி கப்பலிலிருந்து சத்தம்போட்டு என்ன சொல்லியிருப்பாள்?' என்பதே கேள்வி. ஏறத்தாழ எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி பதிலைத்தான் சொன்னார்கள், " நான் உன்னை வெறுக்கிறேன்! உன்னை நம்பி தேன்நிலவுக்கு வந்தேனே! என்னை நீ ஏமாற்றிவிடாய்!" என்று மனைவி கணவனைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சொல்லியிருப்பாள் என்றனர்.
சுந்தர ஆவுடையப்பன்
அந்த வகுப்பறையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். 'நீ மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறாய்?. அந்தக் கணவனைப் பார்த்து, அந்த மனைவி என்ன சொல்லியிருப்பாள்?' ஆசிரியர் அவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமைதியாக எழுந்து சொன்னான், "நமது குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறியிருப்பார்" என்று. ஆசிரியருக்கு ஆச்சரியம். பதில் வித்தியாசமாக இருக்கிறதே! என்பதற்காக அல்ல; உண்மையான பதிலும் அதுவாகவே இருக்கிறது என்பதனால் ஆச்சரியம்.
"இதற்குமுன் இந்தக் கதையை வேறு எங்காவது கேட்டிருக்கிறாயா? அல்லது படித்திருக்கிறாயா?" ஆசிரியர் கேட்டார். 'இல்லை! நேரில் உணர்ந்திருக்கிறேன்; கடந்த ஆண்டு எனது தாயார் மருத்துவமனையில், மரணத்தறுவாயில் இருந்தபோது, எனது தந்தையிடம் கடைசியாகக் கூறிய வார்த்தை இதுதான்,"நமது குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!"- கண்ணீர் மல்கச் சொல்லி முடித்தான் அந்த மாணவன்.
கப்பல்தாயின் கூற்றும், மாணவனின் தாயின் கூற்றும் ஏறத்தாழ ஒரேவிதமான சூழலை எப்படி ஏற்றுக்கொண்டு எதிர்கொள்வது என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. கடந்த காலம் குறித்த கவலையில்லை; எதிர்காலம் குறித்த அச்சமுமில்லை; காய்ச்சல் தலைவலிபோல மரணமும் ஒரு தற்காலிக நிகழ்வே! என்பதை உணர்ந்துகொண்டால், எல்லாப் பிறவிகளிலும் எத்தனைவிதமான துன்பம் வந்தாலும் அவற்றைத் தூசாக மதிக்கும் மனோபாவம் நமக்கு மனோவலிமையைத் தந்துவிடும்.
நேரம் வாய்க்கும்போது, வாய்ப்பு கனிந்து வரும்போது, செலவழிக்காமல் சேமித்துவைத்தால், பிறகு பயன்படுமே! சொத்தோ, செல்வமோ நன்றாகச் சேர்ந்த பிறகு தருமம் செய்வதுபற்றி யோசிக்கலாமே! என்று காலம் தாழ்த்தக்கூடாது. "அன்றறிவாம் என்னாது அறம் செய்க!" என்பதே வள்ளுவக்கட்டளை. தருமம் செய்வது மட்டுமல்ல, அடுத்தவர் ஓர் உதவி என்று கேட்டு வந்தால், அவருக்கு உதவக்கூடிய வாய்ப்பும் வசதியும் நமக்கு அப்போது வாய்த்திருந்தால், மறுசிந்தனை இல்லாமல் உடனே உதவிட வேண்டும். பிறகு ஏதுமற்ற சூழலில் மிகவும் வேண்டியவருக்குக்கூட உதவ முடியவில்லையே என்று வருந்திட நேரிடும்.
முக்காலமும் உணர்ந்தவர்களை ஞானிகள் என்று முன்னோர்கள் கூறுவர். நாமெல்லாம் நமது சாதாரணக் கண்களால் நமக்கு எதிரே நடக்கக்கூடிய நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். ஆனால் ஞானியரோ தங்களது ஞானக் கண்களால் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாகக் கணிக்க வல்லவர்கள் என்பர். ஆனால் உண்மையில் காலம் அறிந்து, காலம் உணர்ந்து, வாய்த்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் செயல்படக்கூடிய அனைவருமே திரிகால ஞானியர்தாம்.
எப்போதோ நடக்கும்! என்று திட்டமிட்டிருக்கிற ஒன்றிற்காக நிகழ்கால இன்பதுன்பம் அனைத்தையும் இழந்து பித்துப்பிடித்ததுபோல வாழ்கிற வாழ்க்கை நரக வாழ்க்கையே தவிர வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் அந்தத் திட்டமிடுதலை நோக்கிய நகர்வாக ஒவ்வொரு நிகழ்நாளின் நகர்வையும் சுவையுள்ளதாக மாற்றிக்கொண்டால் அதுவும் நிகழில் வாழும் சுகமான நகர்வாக இருக்கும்.
ஒவ்வொரு நாளிலும் நாம், நேற்று என்ன நடந்தது? என்கிற ஆராய்ச்சியில் பாதி நாளையும், நாளை என்ன நடக்குமோ? என்கிற அச்சத்தில் மீதி நாளையும் கடந்து விடுகிறோம். உண்லையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளையும் நாம் உணர்வுபூர்வமாக அனுபவிக்கவே இல்லை என்றுதான் பொருள். ஆம்! நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழ்வதில் அக்கறையோடு கவனம் செலுத்துவது, நொடிக்கு நொடி நாம் ஈடுபடும் செயல்களில் அக்கறை காட்டுவது, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் உறக்கம், விழித்திருக்கும் விழிப்பு. என அனைத்திலும் விழிப்புணர்வோடு செயல்படுவது ஆகிய இவையே நாம் நிகழில் வாழ்வதற்கான மகிழ்ச்சி அடையாளங்கள்.
வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தப் பொழுதே இன்பப் பொழுது என்று நம்பிவாழத் தொடங்கிவிட்டால் வாழ்வின் சோகத் தருணங்கள்கூட சுகமான சுமைகளின் தருணங்களாக மாறிப்போகும் மாய வித்தை நிகழும். நமது கற்பனைகளும் கனவுகளும் நமது வாழ்க்கையை அலங்காரப்படுத்தும் தோரணங்கள் ஆகட்டும்; அவை நம்மை எந்த நிலையிலும் அச்சம், கவலை, பரபரப்பு என்னும் துன்பக்குழிகளுக்குள் தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்வோம். வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு பொழுதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காகவே வரமாக வந்திருக்கின்றன. இந்தப்பொழுதே இன்பப்பொழுது என நம்பி அனுகத் தொடங்கினால் துன்பப் பொழுதும் தேன்பொழுதே!
தொடர்புக்கு 9443190098