சிறப்புக் கட்டுரைகள்
null

பெண்களின் பாலியல் உறவு பிரச்சனைகளுக்கான தீர்வு

Published On 2024-08-28 15:17 IST   |   Update On 2024-08-28 16:55:00 IST
  • அடுத்ததாக இவர்கள் உட்கொள்கிற மருந்துகள்.
  • இரண்டாவது ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்கிற மாத்திரைகள்.

பெண்களுக்கான பாலியல் உறவு பிரச்சனைகள், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற ஒரு விஷயம். பொதுவாக 40 சதவீதம் பெண்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை பெண்களின் மனம், உடல் ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை முறைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன? இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள்:

பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வளவு நாட்கள் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக 6 மாதத்திற்கு மேல் இந்த பிரச்சனை இருந்தால் இதற்கு முக்கியமாக தீர்வு காண வேண்டும். பொதுவாக பாலியல் பிரச்சனைகளை 3 விதமாக பிரிக்கலாம். முதலாவது பாலியல் ஆர்வக் குறைவு எனப்படும் லோ டிசையர் அன்ட் லோ லிபிடோ. இதோடு சேர்ந்து பாலியல் எழுச்சி பிரச்சனை, இது முதல் பிரச்சனை. இதுதான் அதிகமாக பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனையாகும். இதை இன்ட்ரஸ்ட் பிரச்சனை என்று சொல்கிறோம்.

இரண்டாவது பிரச்சனை, பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை என்பதாகும். மூன்றாவது பிரச்சனை பாலியல் உறவு கொள்ளும் பொழுது ஏற்படுகிற வலிகள். இது ஜெனிட்டோ பெல்விக் வலி பிரச்சனை. இந்த 3 பிரச்சனைகள் தான் பெண்களை பாதிக்கிற பாலியல் பிரச்சனைகள். இவற்றுக்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.

பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வரும்போது முதலில் அவர்களுக்கான ஒரு தெளிவான கவுன்சிலிங் தேவை. அவர்களுக்கான பிரச்சனை என்ன? எவ்வளவு காலம் இருக்கிறது? மன ரீதியான பிரச்சனைகள் இருக்கிறதா? குடும்ப உறவுகள், கணவன்-மனைவி உறவுகள், அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகள், குடும்ப ரீதியான பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை முறையான அணுகுமுறையுடன் கண்டுபிடிக்க வேண்டும்.

பல நேரங்களில் இந்த பாலியல் பிரச்சனைகள், மனரீதியான மற்றும் சுற்றுப்புற சூழலில் ஏற்பட்ட பிரச்சனைகள், குடும்ப உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் வருவது தான் முக்கியமான காரணமாக இருக்கும். இந்த காரணங்களுக்கான தீர்வு, முதலில் அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளை சரி செய்வதற்கு கவுன்சிலிங் தான் மிக முக்கியமான முதல் சிகிச்சை முறை.

இரண்டாவது பல பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கான அடிப்படையான விஷயம், உடல் ரீதியான நோய்கள் மற்றும் அவர்கள் உட்கொள்கிற மருந்துகள் ஆகும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் அதனை சரி செய்வதன் மூலமாக இவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண முடியும்.

பாலியல் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் தீர்வு:

அடுத்ததாக இவர்கள் உட்கொள்கிற மருந்துகள். பொதுவாக இருமல், காய்ச்சல், சளி ஏற்படும் பொழுது எடுத்துக்கொள்கிற சாதாரண மாத்திரை கூட பாலியல் பிரச்சனைகளை உருவாக்கலாம். இது உலர்வு தன்மையை உருவாக்கலாம். இதனால் உறவு கொள்வதில் ஆர்வ குறைபாடுகள் ஏற்படலாம். இரண்டாவது ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்கிற மாத்திரைகள். மூன்றாவது மன அழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அனைத்துமே பாலியல் உறவு கொள்வதற்கான ஆர்வத்தை குறைக்கக்கூடிய மருந்துகள்.

இந்த மருந்துகளை எடுத்துக் கொள்கிற பெண்கள், அவர்களுடைய மருத்துவரிடம் இந்த பிரச்சனைக்கான சிகிச்சை முறைகளுக்கான மருந்துகளை மாற்றிக் கொடுக்க சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் இதனோடு வேறு சில மருந்துகளையும் கொடுப்பது மிகச்சிறந்தது. பொதுவாக பெண்களுக்கு பாலியல் ஆர்வக் குறைவுக்கு ஒரே ஒரு மருந்து என்பது பிளிபான்செரின் என்ற மருந்து தான். இந்த மருந்துகள் நமது நாட்டில் கிடைப்பதில்லை, வெளிநாடுகளில் கிடைக்கிறது. இந்த ஒரு மருந்து மட்டுமே பாலியல் உறவு ஆர்வ குறைபாடுகள் ஏற்படுகிற பெண்களுக்கு ஒரு தீர்வான மருந்தாக கருதப்படுகிறது. இந்த மருந்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிற பெண்களுக்கு இந்த மருந்துகள் கொடுக்கக் கூடாது. இவை தவிர வேறு சில மருந்துகளும் கொடுக்கப்படுகிறது. இவை பாலியல் உறவுகள் ஆர்வ குறைவுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.

பொதுவாக பெண்களுடைய ஹார்மோன் குறைபாடுகளால் பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கான தீர்வாக சில ஹார்மோன் மாத்திரைகள் கொடுப்பதன் மூலமாக பெண்களுக்கு பாலியல் பிரச்சனை குறைந்து நல்ல முறையில் உறவு கொள்ள முடிகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவுகளால் இந்த பிரச்சனை ஏற்படும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை மாத்திரைகள் மூலமாக கொடுக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பெண்ணுறுப்புகளில் ஏற்படுகிற உலர்வு தன்மைகளால் உறவுகளில் ஆர்வ குறைபாடுகள் ஏற்படலாம். இதற்கான தீர்வாக ஈஸ்ட்ரோஜன் கிரீம் பயன்படுத்தி அந்த இடத்தில் உலர்வு தன்மையை குறைக்கும் போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

ஜெயராணி காமராஜ்

பெண்களின் எழுச்சி குறைபாடுகளுக்கான தீர்வு:

பெண்களுக்கான தூண்டுதல் சரியான முறையில் இல்லாத காரணங்களாலேயே பல நேரங்களில் உச்சக்கட்டம் அடையாத நிலையில் பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். உச்சக்கட்டம் அடைய முடியாத பெண்களுக்கு பெண் உறுப்பு பகுதியில் கிளைட்டோரஸ் மற்றும் ஜீஸ்பாட் தூண்டுதலை முறையாக கற்றுக் கொடுக்கும் பொழுது இந்த பிரச்சனைகளுக்கான தீர்வாக அமைகிறது. பெண்களுக்கான பாலியல் தூண்டுதல் பாயிண்ட்ஸ் சரியான முறையில் பெண்களுக்கு தெரியாததால் தம்பதியினரிடம் இந்த பிரச்சனைகள் அதிகமாக எதிர் நோக்கப்படுகிறது. பாலியல் தூண்டுதல்களை சீராக செய்யும் பொழுது, பெண்ணுறுப்புக்கான ரத்த ஓட்டம் அதிகமாகி பெண்களால் பாலியல் உச்சக்கட்டம் அடைய முடிகிறது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு சில மருந்துகள், மாத்திரைகளும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு பயன்படுத்துகின்ற வயாகரா மாத்திரைகளும், பெண்கள் உச்சக்கட்டம் அடையாத நிலையில் அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் மருந்தாக அமைகிறது.

பெண் உறுப்புகளில் ஏற்படும் வலிகளுக்கான தீர்வு:

பெண்களுக்கு பெண் உறுப்பில் ஏற்படுகிற பிரச்சனைகள், குறிப்பாக தொற்றுகள் ஏற்பட்டால் இதனை முறையாக சரி செய்யும் பொழுது பெண்கள் பாலியல் உறவு கொள்ளும் போது வலி குறைகிறது. முக்கியமாக பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுக்கள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படுகிற உலர்வு தன்மை ஆகியவை வலிகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும். இதை பரிசோதித்து என்ன காரணம் என்பதை கண்டறிந்து தொற்றுகள் இருந்தால் சரி செய்ய மருந்துகள் கொடுக்க வேண்டும். உலர்வு தன்மை இருந்தால் பெண்ணுறுப்பு பகுதி தூண்டுதல் முறைகள் மூலமாக முறையாக சரி செய்யலாம்.

மனரீதியான பிரச்சனைகளுக்கான கவுன்சிலிங்:

வஜினிஸ்மஸ் என்ற பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு, முறையான செக்ஸ் தெரபி மூலமாக இவற்றை சரி செய்ய முடியும். தேவைப்பட்டால் மன ரீதியான சிகிச்சை முறைகளாலும் இவற்றினை சரி செய்ய முடியும். பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பொதுவாக அவர்களுடைய மன ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வானது கவுன்சிலிங். தேவைப்பட்டால் அவர்களுக்கு சில சைக்கோ தெரபி ஆகியவற்றின் மூலமாகவும் மனரீதியான பிரச்சனைகள், உறவுமுறை பிரச்சனைகள், சமுதாய ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

பல நேரங்களில் இவர்களுடைய பார்ட்னர் உறவு முறையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் மன அழுத்தம் காரணமாக பாலியல் பிரச்சனைகள் அதிகமாகிறது. இவற்றினை முறையாக மனரீதியான அணுகுமுறை மூலமாக சரி செய்யும் பொழுது இவர்களுடைய உடல் ரீதியான பிரச்சனைகளும் சரியாகிறது. பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வரும்பொழுது முதலாவதாக கணவன், மனைவி இருவருக்கும் முறையாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். இரண்டாவது இவர்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு கேள்வியை கொடுக்கும்போது அவர்கள் மனரீதியாக அவர்களுடைய பிரச்சனைகளை எழுதி தருகிறார்கள். அவர்களால் நேரில் விளக்க முடியாத விஷயங்களையும் எழுதிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய பிரச்சனையை முழுமையாக புரிந்து அதற்கான தீர்வுகளையும் கொடுக்க முடியும். இதற்கு சர்வதேச தரத்திலான பல நிலையான கேள்விகள் இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் தெளிவாக தங்கள் பிரச்சனைகளை விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை தெரிந்து, அதனை சரி செய்வதற்கு இது சீரான முறையாக அமைகிறது.

பெண்களுக்கு முக்கியமாக மாதவிலக்கு நின்ற பிறகு ஏற்படுகிற பிரச்சனைகள் என்பது மிக அதிகம். குறிப்பாக பெண் உறுப்பில் ஏற்படும் ஜெனிட்டோ யூரினரி சின்ட்ரோம் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உறவு முறை பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. இவர்களுக்கான தீர்வு, முறையான ஹார்மோன் தெரபி. இதை முறையாக கொடுப்பதன் மூலமாக இந்த பெண்களுக்கு உலர்வு தன்மை ஹார்மோன் குறைபாடுகள் சீராகி முறையாக பாலியல் உறவு கொள்ள முடியும். எனவே மன ரீதியான பாலியல் உறவு பிரச்சனைகள், உடல் ரீதியான பாலியல் உறவு பிரச்சனைகள் என அனைத்தையுமே முறையாக பரிசோதித்து, சரியான மருந்துகள் மூலமாக குணப்படுத்தி அதற்கு கண்டிப்பாக தீர்வு காண முடியும்.

போன்: 72999 74701

Tags:    

Similar News