சிறப்புக் கட்டுரைகள்

உள்ளம் உருகுதய்யா!

Published On 2024-08-26 16:45 IST   |   Update On 2024-08-26 16:45:00 IST
  • இந்தியாவில் ஆன்மீக பங்களிப்பு அதிகம் என்று சொல்லலாம்.
  • நாம் நன்கு அறிந்த சமீப கால நிகழ்வுகளைக் கூட மேற்கோள்களாக நாம் காணலாம்.

சமீபத்தில் ஒரு சிறிய ஆன்மீக கூட்டத்தில் ஒரு நபர் ஒரு கேள்வி எழுப்பினார்.

சுனிதா வில்லிம்ஸ் விண்வெளி பயணம் இருமுறை நாம் பார்த்து இருந்தாலும் மூன்றாம் முறையாக சென்றதும் தெரியும். அங்கு விண்கலத்தின் கோளாறு காரணமாக அவரும், உடன் சென்றவரும் பூமி திரும்ப காலதாமதம் ஆகின்றது. அதனையும் சமாளித்துக் கொண்டு இருக்கின்றார். அப்படியொரு விஞ்ஞான முன்னேற்றம் காணும் இக்காலத்திலும் இந்த கவலைகளை நீக்க ஆன்மீகம், மெய்ஞானம் இவையெல்லாம் உள்ளதா? என்று கேட்டார். எதுவும் ஒன்றும் செய்யவில்லையே என்று வருந்தினார்.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இது அவரது கருத்து. இது போன்ற பல விதமான கருத்துகள் பலருக்கும் இருக்கலாம். இது வரவேற்கத்தக்கதே.

மேலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனித வாழ்வின் தரத்தினை வெகுவாய் உயர்த்தி உள்ளன. இது உண்மையே. விண்வெளி சென்ற அனைவரும் நல்லபடி பூமி வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

வாழ்வின் மற்றொரு புறமாக பார்க்கப்படுவதுதான் ஆன்மீகம். இதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பமே. எந்த கட்டாயமும் இல்லை.

கமலி ஸ்ரீபால்

இந்தியாவில் ஆன்மீக பங்களிப்பு அதிகம் என்று சொல்லலாம். இங்கு அவதரிதத மகான்கள், ரிஷிகள், சித்த மகா புருஷர்கள் என எந்த பெயரில் நாம் குறிப்பிட்டாலும், எந்த மதம் என்றாலும், இவர்களின் ஆன்மீகப் பயணம், தொண்டு, கருத்துகள் இவை எல்லாம் நமக்குள் ஒரு தேடலை தோற்றுவிக்கின்றன.

இருப்பினும் வாழ்வின் சில கட்டாயங்கள் வாழ்வு எனும் வட்டத்தை சுற்றியே ஒருவரை ஓட வைக்கின்றது. கோவிலுக்கு சென்றால் கூட ஒரு மீட்டர் பட்டியல் போட்ட வேண்டுதல்கள், பரிகாரங்கள் என்றே சுற்றி சுற்றி வருகின்றோம். இதுவும் எந்த தவறும் கிடையாது. ஆனால் ஆன்மீகம் என்பது மனதை கடந்த நிலை எல்லையற்ற நம் ஆன்மா பரந்து விரிந்து இருக்கும் பேரானந்த நிலை. ஆன்மாவின் இயல்பு நிலை என்பது பொருள் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் மனம் அழிந்து ஆன்மா பரம் பொருளுடன் இணைந்த நிலை ஆகும்.

இந்த நிலையில்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஞானிகள், மகரிஷிகள், சித்தர்கள் இவர்களின் வழிகாட்டுதலால் பரம்பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் தோன்றுகின்றது.

நாம் நன்கு அறிந்த சமீப கால நிகழ்வுகளைக் கூட மேற்கோள்களாக நாம் காணலாம்.


ரமண மகரிஷி அவர்களை அறிந்தவர்கள், கேள்விபட்டவர்கள் அநேகர் உலகெங்கிலும் உள்ளனர். ஆன்மீக விழிப்புணர் வினை பார்வையாலேயே பலருக்கு ஏற்படுத்தியவர். 'நான் யார்?' என்று ஒவ்வொருவரும் தன்னுள் தேடி தன்னை உணரும் வழியினைக் காட்டியவர்.

* மகிழ்ச்சிதான் (ஆரவாரமற்ற) ஆன்மாவின் சுயரூபம். * அதனை வெளியே தேடாதே. உன்னுள்ளேயே இருக்கின்றது. * எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.

* வருங்காலத்தினைப் பற்றி அதிகம் யோசித்து கவலையில் மூழ்காதே.

இந்த நொடியில் முழு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இது போன்ற சாராம்சமான கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைத்தவர்.

இளம் வயதிலேயே இவரது மனத்துடிப்பு, 'அருணாசலம் அருணாசலம்' என துடிக்க அருணாசலேஸ்வரரை தேடி திருவண்ணாமலை வந்தவர்.

தியான நிலையில் வருடக்கணக்கில் அசையாது இருந்ததால் உடலில் கரையான் பிடித்தும் அதனைப் பற்றி உணர்வின்றி இருந்தவர்.

அவரை சந்திக்க வந்தவர்கள் பல கேள்விகள் எழுதி வந்தும் அவரைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி கூட கேட்காமல் தனது அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்து விட்டதாக எழுதியுள்ளனர்.


ரமண மகரிஷி எந்த வேத பாடசாலையும் சென்று படிக்கவில்லை. வேதத்தின் சாரமாக பேசினார். தான் சமாதி நிலை அடையும் இறுதி நிமிடத்தில் கூட மயில்களுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா? என்றார். அவரது ஆசிரமத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாது இருக்கச் செய்தார்.

இவரைப் பற்றி எழுதினால் பல புத்தகங்கள் எழுதலாம். அவரது வாழ்வே மனிதனுக்கு ஆன்மீகம் காட்டியது. ஆன்மீகம், தியானம் இவற்றின் மூலம் மனம் அமைதி பெற்று ஆன்மாதன் சுயரூபத்தில் லயித்து இருக்க முடியும் என்பதனை பேசாமல் பேசி புரிய வைத்தவர்.

படிப்படியாக தகுதி பெற்று அனைவரும் இந்நிலைக்கும் செல்ல முடியும்.

காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை அனைவருமே போற்றுவர். ஆராதிப்பர். மனிதனின் சமூக ஒற்றுமைக்கு அதிக கவனம் கொடுத்தவர்.

* எத்தனையோ குடும்பங்களில் பல அதிசயங்களை நிகழ்த்தி தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் பரமசிவன். கருணாமூர்த்தி 'தெய்வத்தின் குரல்'- 7 பாகத்தினையும் அனைவரும் படிக்கலாம். இந்த அற்புத கருத்தை படித்தால் பொக்கிஷங்கள் கிடைக்கும். இது போன்று திருவண்ணாமலையில் வாழ்ந்த, வாழும் சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம் சுரத்குமார் இவர்கள் எல்லாம் நம் காலத்தில் நாம் அறிந்த மகான்கள், ஞானிகள், மகரிஷிகள் ஆவர். ஷீரடி சாய்பாபா என்றாலே மக்களின் மனதில் ஆறுதல் கொடுப்பவர்.

பாம்பன் சுவாமிகளின் கண்களை பார்த்தாலே ஆனமீகம் அருவி போல் கொட்டும். சமீப காலத்திய அருணாகிரி நாதருக்கு முருகன் காட்சி அளிக்கவில்லையா? பேச வில்லையா? இப்படி கூறிக் கொண்டே செல்லலாம். ஏசுநாதரின் வாழ்வே மக்களுக்காகத்தானே. இஸ்லாமியர் நோன்பு விரதம் கடுமையானதுதான். ஆனால் சிறு குழந்தைகள் கூட கடைபிடிக்கும் கட்டுப்பாடு உள்ளதே.

ஆக மனித இனம் இருக்கும் வரை விஞ்ஞானமும் வளரும், மெய்ஞானமும் வளரும்.

இக்கட்டுரையில் மற்றொரு செய்தியினையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். பலர் அறிந்திராத 'ஆண்டவன் பிச்சை' என்ற அன்னையின் வாழ்க்கையினைப் பற்றி சற்று பார்க்கலாமா?

இவரைப் பற்றி சிலர் எழுதியிருந்தாலும் 'டேவில் காட்மேன்' அவர்கள் எழுத்திலிருந்தே இங்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அவரும் மற்றொரு தெய்வீக சங்கல்பத்தில் இருந்தே இதனைத் தொகுத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.

மரகத அம்மாள் என்று குழந்தையில் பெற்றோரால் பெயரிடப்பட்ட இவர் ஆண்டவன் பரிசு என்று பொருள் கொண்ட முறையில் 'ஆண்டவன் பிச்சை' என்று அழைக்கப்பட்டுள்ளார்.

ஆண்டவன் பிச்சை அம்மாள் செப்டம்பர் 6, 1899-ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்துள்ளார். இவர் பெயர் மரகதவல்லி. மிகச்சிறிய வயதில் தாயை இழந்தவர். பேச்சே சரியாக வரவில்லை. வீட்டில் தனி டியூஷன் வைத்தும் சரியாக வரவில்லை. 9 வயதில் இவருக்குத் திருமணம். திருமணம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தந்தையுடன் இருந்து மாமியார் வீடு சென்றார். மரகதம்மாளின் குடும்பத்தில் அநேகரும் உயர் கல்வி கற்றவர்களே.

1908-ல் நவராத்திரி சமயம் அம்மா அவர்கள் தன் தந்தை வீட்டிற்கு வந்தார். இரவில் தூக்கத்தில் அவருக்கு நடந்த அதிசயம். முருகன் சிறு வயது பிள்ளையாகத் தோன்றி அவரது நாக்கில் 'ஓம்' என்றும 'ஷடாசரமும்' எழுதி தீட்சை அளித்தார். அடுத்த நாள் முதல் அம்மா அவர்கள் சரளமாக பேசினார். பாடினார். மனம் முழுவதும் அந்த இறைவன் நிறைந்து இருக்க முருகனின் பாடல்கள் அருவியாய் கொட்டின.

இவையெல்லாம் நிகழும் போது அவருக்கு வயது 10தான். காலம் செல்ல இவருக்கு சில குழந்தைகளும் பிறந்தன. ஒரு குழந்தை பிறப்பின் போது குழந்தை பாலுக்கு அழுவதை உணராமல் முருகன் மீது பாடிக் கொண்டே இருந்து விட்டார்.

குடும்ப நன்மைக்காக இவரது மாமியார் இவரது பாடல் தொகுப்புகளை பெட்டியில் வைதது பூட்டி இனி குடும்பத்தினை கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அதன் பிறகு வெகு காலம் தான் கொடுத்த வாக்கின் படி வெளியில் பாடவில்லை. மரகதம்மாள் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் குறைவே இல்லை. மனம் என்ற ஒன்றினை தாண்டிய பக்குவத்தினை அடைந்திருந்தார்.

டி.எம்.சவுந்தரராஜன் பாடியுள்ள பிரசித்தி பெற்ற முருகனின் பாடல் 'உள்ளம் உருகுதய்யா முருகா' என்ற பாடலின் ஆசிரியர் ஆண்டவன் பிச்சை அம்மாதான். திருவண்ணாமலையில் இவருக்கு முருகன் நிகழ்த்திய அனுபவம் ஆண்டவன் பிச்சை என்ற பெயர் வந்த விவரம் என ஏராளமான செய்திகள் இவரைப் பற்றி உள்ளன. இவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், பிள்ளைகள் இழப்பு, உடல் பாதிப்பு என்ற எதுவுமே இவரை அசைக்கவில்லை. ஆண்டவன் மீது குறை கூற வில்லை. அரற்றவில்லை. மனம் கடந்து பரம்பொருளை பற்றினார். தன்னுள்ளேயே இறைவன் இருப்பதனை உணர்ந்தார்.

தனி மனித ஒழுக்கம், அசையா உறுதி, கலங்காத மனம் இவை ஒவ்வொரு மனிதனும் சற்றேனும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் ஞானிகள் இந்த பூமியில் பிறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உயிருடன் இருக்கும் போதே எவன் ஒருவன் புலன்களிடமித்து செத்தாரைப் போன்று ஆகி விடுகின்றானோ அவனே ஞானியாவான். -வள்ளலார்

விண்வெளி செல்பவர்களும் ஐஸ்கிரீமும், ஸ்வீட்டும் சாப்பிட்டு, சொகுசு மெத்தையில் தூங்கி, டி.வி. பாார்த்து பயணம் செய்யவில்லை. குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு அளவுதான். அத்தனை தியாகங்கள்தான். மன உறுதிதான். ஒரு விதத்தில் இவர்களும் மனதைக் கடந்த ஞானிகள்தான்.

இந்த மனித முயற்சியை பாராட்டுவோம். அவர்களுக்காக அனைவரும் மனம் ஒருமித்து தினமும் ஒரு நிமிடமாவது அவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்வோம். இந்த சிறு முயற்சி கூட ஒரு மனிதரால் முடியாதா என்ன?

Tags:    

Similar News