உடுப்பி பகுதியில் கவின்மிகு ஆலயங்களும் அருவிகளும்!
- கர்நாடக பகுதிகளில் ஆலயங்கள் எல்லாம் கேரளத்து கோவில்களை போன்று இருக்கும்.
- சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.
அழகும் ஆன்மீகமும் நிறைந்த ஸ்ரீ கிருஷ்ணர் குடி கொண்டுள்ள உடுப்பி கோவில் நகரத்தை பார்த்தோம். அப்படியே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.
கண்ணும் கருத்தும் கவரும் வண்ணமாக அமைதியான சூழலில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்கள், பரசுராம சேத்திரம் என்று அழைக்கப்படுகின்ற மேற்கு கடற்கரை பகுதியில் மங்களூர், உடுப்பி போன்ற மாவட்டங்களிலேயே அதிக அளவில் பார்க்க முடியும்.
நம்முடைய தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கோவில்களின் அமைப்புகள் வேறு. இங்குள்ள கோவில் கட்டிடக்கலை வேறுவித அமைப்பைக் கொண்டவை.
தமிழக கோவில்களில் உயர்ந்த வானளாவிய கோபுரங்கள், கல்லில் வடிக்கப்பட்ட தெய்வ சிலைகள், கருவறையிலும், சுற்றி வருகின்ற பிரகாரங்களிலும் கலை வேலைப்பாடுகள் நிறைந்த தெய்வாம்சம் பொருந்திய சிலைகள் முதல்... இறை நெறி பரப்பிய அடியவர்கள்.. தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்ததற்கான காட்சிகள்... என்று பல்வேறு சிற்ப கலைகளை எல்லாம் விதவிதமாக காண முடியும்.
ஆனால் மேற்கு கடற்கரையோர கர்நாடக பகுதிகளில் ஆலயங்கள் எல்லாம் கேரளத்து கோவில்களை போன்று இருக்கும். உயர்தர மரங்களைக் கொண்டு கட்டப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டே இருக்கின்றன.
காரணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யக்கூடிய கனமழையை தாங்கும் பொருட்டு இருக்கலாம். முற்காலத்தில் இந்த பகுதியில் அதிகமாக பெய்யும் மழை, ஓடுகளில் சரிவினில் நொடியும் நிற்காமல் இறங்கி விடும் என்ற நோக்கினில் இவ்வாறு இருக்கலாம்.
மேற்கு கடற்கரை பகுதி மலைகளும் காடுகளும் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் செரிவான மரங்கள் எங்கும் எளிதாக கிடைத்திருக்க கூடும் என்பதால் இப்பகுதியில் கட்டப்பட்ட கோவில்களின் சுற்றுச்சுவர்கள்... மேற்கூரை... கோபுரங்கள்...வெளி பிரகாரங்கள் என அனைத்தும் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு கட்டப்பட்டுள்ள கோவில்கள் நம் தமிழ்நாட்டு கோவில்களை போன்று உயர்ந்தும் பரந்தும் இல்லாமல் அங்கிருக்க கூடிய இயற்கையின் சூழலையொட்டி கட்டப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆகும்பே காட் என்று ஒரு பகுதி உள்ளது. இது அதிக மழைப்பொழிவை உடையதால் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே அழைக்கப்படுகிறது.
உடுப்பியில் இருந்து இந்த மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் கார்காலா என்னுமிடத்தில் கோமடீஸ்வரா என்ற சமண ஆலயம் உள்ளது. சரவணபெலகுலாவில் இருப்பது போன்று இங்கும் ஒரே கல்லிலான உயரமான சிலை உள்ளது. பார்ப்பதற்கு வியப்பூட்டுவதாக இருக்கும்.
உடுப்பியை ஒரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தழுவிக் கொண்டு இருப்பதால் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும் ஆறுகளும் அமைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
குறிப்பாக ஆகும்பேயில் உருவாகி பெருகி வரும் சீதா நதி, காடுகளை தாண்டி சமதளத்தில் பாயும் இடத்தில் ராப்டிங் என்ற நீர் விளையாட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. மேலும் சீதா நீர்வீழ்ச்சி அருகே தங்கி கண்டுகளிக்க பசுமையான இடங்களும் உள்ளன. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இது ஒரு ஆனந்தமான அனுபவத்தை தருவதாக இருக்கும். அருகில் இருக்கும் சீதா நீர்வீழ்ச்சியே குட்லு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
உடுப்பியில் இருந்து கொல்லூர் போகும் வழியில் சில கிலோமீட்டர் தூரத்திலேயே கும்பாஷி ஆனேகுட்டா என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒரே கல்லில் செதுக்கிய விநாயகர் வீற்றிருக்கும் திருக்கோவிலை தவிர்க்காமல் தரிசித்தல் சிறப்பு.
இன்னும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்டியங்கடி எனும் இடத்தில் வீற்றிருக்கக் கூடிய சித்தி விநாயகர் ஆலயமும் மிக சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.
குந்தாபூரில் இருந்து கொல்லூர் செல்லும் வழியில் மிகவும் பிரசித்திப் பெற்ற சங்கர நாராயணன் ஆலயம் உள்ளது. "அரியும் அரனும் ஒன்று அறிந்தவர் வாழ்க்கை நன்று" என்று சொல்லப்படும் வகையில் மேற்கு கடற்கரையொட்டி பரசுராமரால் உருவாக்கப்பட்ட ஏழுத் தலங்களில் சங்கரநாராயணன் தலமும் ஒன்றாகும்.
பக்தர்கள் பார்வையில் வலப்புறம் நாராயண லிங்கம் என்றும் இடப்புறம் சங்கரலிங்கம் என்றும் வணங்கப்படுகிறது. இந்த சுயம்புலிங்கத்தை எப்போதும் நீர் சூழ்ந்து இருக்கும். இந்த நீரை சுத்தாமிர்த தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையையொட்டியே மலைத்தொடரும் அமைந்துள்ளதால் இங்குள்ள ஆலயங்களும், மலை பிரதேச பகுதிகளும், கடற்கரையும் சுற்றுலா தலங்களாக சிறந்து விளங்குகின்றன. வழிபாட்டோடு சுற்றுலா இடங்களையும் கண்டுகளிக்கலாம் என்பதால் நாடெங்கிலும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது போன்று இன்னும் காணவேண்டிய பல அற்புதமான இடங்கள் உள்ளன. அவைபற்றி வரும் தொடரில் பார்க்கலாம்.