null
- கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
- கடைசியாக கடவுள் மனிதனைப் படைத்துக் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு முதியவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம்மை விட சற்று வயதில் கூடியவர்களின் அறிவும், அனுபவமும் எந்த பல்கலைக்கழகத்தில் போய் எவ்வளவு பணம் கொட்டி படித்தாலும் கிடைக்காது. எளிதாக கிடைக்கும் அபார ஞானம் இவை. எனவேதான் எனக்கு பேசும் வாய்ப்பு கிட்டியது என்று கூறினேன். அவர் பேசிய போது அவர் படித்ததாக மனித வாழ்வின் போக்கினைப் பற்றி ஒரு குறிப்பினை கூறினார்.
கடவுள் ஒருநாள் கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரை நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்கள் வாழ்வாய்" எனக் கூறினார்.
கழுதை இதற்கு இறைவனிடம் வேண்டியது, "நான் கழுதையாக இருக்கின்றேன். 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்" என்றது. கடவுள் கழுதையின் வேண்டுகோளினை ஏற்றார்.
அடுத்து இறைவன் ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார். "நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு உணவு கொடுப்பான். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்" என்றார்.
இதற்கு நாய் கூறியது, "கடவுளே, எனக்கு 20 வருடம் ரொம்ப அதிகம். ஆகையால் எனக்கு 15 வருடங்களே போதும்" என்றது. கடவுளும் "சரி" என்று நாயின் ஆசையினை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் ஒரு குரங்கினைப் படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு குரங்கு மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மனிதனை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்கள் வாழ்வாய்" என்றார்.
இதற்கு குரங்கு கூறியது, "கடவுளே எனக்கு 20 வருடங்கள் ரொம்ப அதிகம். 10 வருடம் போதும்" என்றது. கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கமலி ஸ்ரீபால்
கடைசியாக கடவுள் மனிதனைப் படைத்துக் கூறினார். "நீ ஒரு மனிதன். ஆறு அறிவு உள்ள ஜீவன். நீ மட்டுமே உன் அறிவினைக் கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில்தான். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்" என்று கூறினார்.
இதற்கு மனிதன் கூறினான், "எனக்கு 20 வருடங்கள் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்று சொன்ன 20 வருடங்களையும், நாய்க்கு கிடைத்த 15 வருடங்களையும், குரங்கு கிடைத்த 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடுங்கள்" என்றான்.
கடவுளும் மனிதனின் ஆசையை நிறைவேற்றினார். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாய் மனிதனாக வாழ்கிறான். கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லா சுமைகளையும் தாங்கிக் கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு அடுத்த 15 வருடங்கள் நாயாக இருந்து அவர்கள் வீட்டில் அனைவரையும் பாதுகாத்துக் கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதான பிறகு குரங்கு போல் மகன் வீடு, மகள் வீடு என தாவி, பேரக் குழந்தைகளுக்கு வித்தை காட்டி மகிழ்வித்து பின் மரணிக்கின்றான்.
இதுதான் மனித வாழ்க்கையின் உண்மை என முடித்தார் அந்த முதியவர்.
கதை கற்பனைதான். இல்லையென சொல்லவில்லை. ஆனால் எத்தகைய ஆழ்ந்த கருத்துக்கள், உண்மைகள். இந்த கருத்து. உண்மையிலேயே மனிதனுக்கு அவசியமானது. ஆழ்ந்து யோசித்தால் நம் வாழ்வினை நம்மால் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே இங்கு இந்த கதை குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முதியவர் மேலும் கூறினார்.
* 3 வேளை உண்ண உணவு, உடை, இருப்பிடம் எனக்கு உள்ளது. நான் உலகில் உள்ள 70 சதவீத மக்களை விட வசதியானவனாக இருக்கின்றேன்.
* வங்கியில் கணக்கு இருந்தாலே ஒருவன் பணக்காரன்தான். சுமார் 75 சதவீத மக்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை. எனக்கு வங்கியில் சுமார் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. நானும் பணக்காரனே.
* என்னிடம் கணிப் பொறி இல்லை. பரவாயில்லை. அவ்வாறு இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே.
* என்னிடம் செல்போன் உள்ளது. பல கோடி மக்களிடம் இல்லை.
* நோய் என்று எதுவுமே எனக்கு கிடையாது.
* எனக்கு இந்த வயதிலும் பார்க்க முடியும். பேச முடியும். கேட்க முடியும். சுமார் 22 கோடி மக்களுக்கு இதில் ஏதேனும் ஒரு பாதிப்பு உள்ளது.
* போர், பட்டினி, சிறைவாசம் என எத்தனை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தப்பி வாழ்பவன் அதிர்ஷ்டசாலி. நான் அதிர்ஷ்டசாலியே.
* வயதான பெற்றோர்களை உடன் வைத்து நன்கு கவனித்து வாழ்பவன் பெரிய பாக்கியவான். எனவே நான் பாக்கியவான்.
* இன்றைய கால கட்டத்தில் தாகம் எடுக்கும் போது சுத்தமான நீர் காசு கொடுக்காமல் குடிக்கக் கிடைத்தால் அவன் கொடுத்து வைத்தவன். எனவே நான் கொடுத்து வைத்தவனே.
* எழுத, படிக்கத் தெரிந்தவன்.
* தலை நிமிர்ந்து வாழ முடிந்தால் அதுதான் வாழ்வு. அந்த வாழ்வின் நான் பெற்றுள்ளேன்.
* நான் வாழும் இங்கு ஜாதி, மதம் எதுவும் கிடையாது. ஆக இந்த ஆசீர்வாதங்களை அனைவரும் பெற்று வாழ வேண்டும் என ஆசீர்வதித்தார்.
இந்த ஒளி சக்தியினை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்வோமா?.
அந்த முதியவர் பகிர்ந்த மற்றொரு உரை:
* சதா தன் மனைவியை குறை கூறுபவரும் சரி, மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசுபவர்களும் சரி, பொதுவில் மணமான ஆண்களும் சரி காலை வேளையில் உங்கள் மனைவி ஓடும் ஓட்டத்தினை 10 நிமிடங்கள் கவனியுங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்று புரியும்.
* 10 நிமிடங்கள் இமயமலையில் பனியில் வாழும் ஞானிகள் முன் அமருங்கள். நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவது தெரியும்.
* ஒரு பெரிய தலைவரைப் பற்றிய புத்தகத்தினைப் படியுங்கள். நாம் கற்றது ஏட்டுக் கல்வி மட்டுமே, எதுவுமே இல்லை என்று தெரியும்.
* 10 நிமிடம் பெட்டிக் கடை, டீ கடை வியாபாரி முன் அமருங்கள். நாம் சம்பாதிப்பதனைப் பற்றி தெரியும்.
* 10 நிமிடம் விஞ்ஞானி முன் அமருங்கள். நம் அறியாமையின் அளவு தெரியும்.
* 10 நிமிடம் நம் எல்லை காக்கும் ராணுவ வீரர்கள் முன் அமருங்கள். நம் தேசப் பற்றும் தியாகமும் எத்தனை குறைவானது என்று தெரிந்து வெட்கப்பட்டு விடுவோம்.
* பத்து நிமிடம் ஒரு விவசாயி முன்பு அமர்ந்தால் நாம் எந்த அளவு கடினமாக உழைக்கவில்லை. எந்த அளவு அதிகமாக சாப்பிடு கின்றோம் என்பதனை உணருவோம்.
இப்படி சிந்தித்தாலே ஒருவருள் இருக்கும் ஒளி ஜொலிக்க ஆரம்பிக்கும்.
எத்தனை அற்புதமான கருத்துக்கள். பலரும் படித்து கூட இருக்கலாம். ஆயினும் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து மனதினில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
நம் ஆன்ம பலம் கூடுவதற்கும், நம்முள் இருக்கும் ஒளி சக்தியினை உணர்வதற்கும் சில நியதிகள் நமக்கு தேவை.
* உறுதி தேவை. இதனை தியானம், பிரார்த்தனை, பக்தி மூலம் பெற முடியும். இவை வலிமையான வழியாகும்.
* அந்த வலிமையினை நல்ல வழிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். வம்பு, சண்டைகளில் விரயம் செய்யக் கூடாது.
* காலம் நதி போன்றது. திரும்ப வராது. எனவே காலத்தினை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும்.
* எண்ணங்களே சுமைதான். எனவே தேவையற்ற யோசனைகள் வேண்டாமே.
* நம் வேலைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை, தன்னம்பிக்கை அவசியம்.
* சுதந்திரம் வேண்டும். நம் கைத்தடியினை வீசி நடக்க நமக்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அது அடுத்தவர் மூக்கினை இடிக்காத அளவுக்கு கட்டுப்பாடு வேண்டும்.
* எதனையும் எதிர்பார்க்காது வாழ்வது தவம். இந்த தவம் அனைத்து நல்லவற்றினையும் கொண்டு வந்து சேர்க்கும். முயற்சிப்போமா?