மெய்சிலிர்க்க வைக்கும் மெராமெக் குகைகள்
- மெராமெக் குகைகளின் கண்கவர் காட்சிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- கற்காலங்களில் இது போன்ற குகைகளே மனிதர்களின் வசிப்பிடங்களாக இருந்திருக்கின்றன.
கற்பனைக் கெட்டாத அற்புதக்காட்சி ஒன்று கண் முன்னே பிரகாசமாக நின்றால் எப்படி இருக்கும்? உடலும், மனமும் ஒருசேர வானில் பறக்கத் துடிக்குமே, அப்படி ஒரு அனுபவம், அமெரிக்காவின், 'மெராமெக் குகையைக் காணும்போது ஏற்படுவது உண்மை. இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வேறுபட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுத்து அவைகள் நம்மை பிரமிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், நம் சக்திக்கு அப்பாற்பட்ட சில படைப்புகள் நம்மை நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் இயற்கையின் சட்ட திட்டங்கள் அகில உலகிற்கும் பொதுவான -வையாகத்தான் உள்ளன என்பதை உணரச் செய்யும் அற்புதக் காட்சி இது.
1722-ல் பிலிப் ரெனால்ட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த இந்தக் குகை ஏறக்குறைய 7.4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மெராமெக் கேவெரென் என்ற குகை, அமெரிக்காவின் மிசோரி, ஸ்டாண்டன், ஓசர்க்கினின் உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிறைய வெடியுப்பு இருந்ததால் ரெனால்ட் இந்த குகைக்கு வெடியுப்புக் குகை என்று பெயரிட்டார். 400 மில்லியன் ஆண்டுகளாகப் படிந்திருக்கும் மிகவும் விலை மதிப்பு மிக்க தாதுப்பொருட்கள் நிறைந்த இம்மலைப்பகுதியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டு காண வருகிறார்கள். செயின்ட் லூயிசின் தென்மேற்கே அமைந்துள்ள மெராமெக் குகைகள், இயற்கை நிலத்தடி அதிசயத்தின் ஏழு நிலைகளைக் காண ஆண்டுக்கு 100,000 முதல் 150,000 பார்வையாளர்கள் வருகின்றனர்.
மிசோரியின் புதையுண்ட பொக்கிசம்! அதிசயத்தின் உச்சம்! மெராமெக் பள்ளத்தாக்கின் வளமான உருளும் மலைகளுக்கு அடியில், கனிம அமைப்புகள் அரிதானதாகவும், தனித்துவமான வண்ணம் கொண்டதாகவும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இயற்கையின் இந்த ஆபரணங்கள், மெராமெக் குகைகளின் கண்கவர் காட்சிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப்பகுதியே குகை என்று அறியப்படுகிறது. கற்காலங்களில் இது போன்ற குகைகளே மனிதர்களின் வசிப்பிடங்களாக இருந்திருக்கின்றன.
பவளசங்கரி
இன்றும் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பல குகைகள் நம் இந்தியாவிலும் காணப்படுகின்றன. மேகாலயா மாநிலத்தின் ஜெயிண்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரேம் லியாத் பிராஹ் என்ற குகை 31 கி.மீ. நீளம் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளக் குகையாகக் கருதப்படுகிறது. அதே போல் இந்த மெராமெக் குகை தமக்குள் பலப்பல அதிசயக் காட்சிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. கசித்துளி படிவுகள், சுண்ணாம்பு, மெக்னீசியம் போன்றவற்றால் ஆன இக்குகை வரலாற்று முக்கியத்துவமும், திகிலும் நிறைந்த அனுபவம் அளிப்பது. இங்கு மிக அதிகப்படியான தாதுப்பொருட்களின் படிமம், 70 அடி உயரமும், 60 அடி அகலமும், 35 அடி தடிமனும் கொண்டுள்ளது. இக்குகையின் மகுடமாகத் திகழும் இதுவே அமெரிக்க நகரத்தின் முதல்தர குகைக்காட்சி.
பளிங்கு போன்ற பளபளப்பான, சுண்ணாம்பும் மக்னீசியமும் கலந்ததொரு கலவை குகையின் மேற் கூரையில் சொட்டுச்சொட்டாக அரும்பி, பாறைகளாக வளரத் துவங்குகின்றன. சிறிய கம்பியாக வளரத் தொடங்கி மெல்ல மெல்ல பக்கத்தில் உள்ள கம்பிகளுடன் ஒன்றிணைந்து மிகப்பெரும் பளிங்குப் பாறைகளாக உருப்பெறுகிறது. ஏழு நிலைகள் கொண்ட இந்த குகையின் ஐந்து நிலைகள் பூமிக்கு அடியில் இருக்கின்றன. மற்றைய இரண்டு நிலைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. ஓன்க்ஸ் (ONYX) எனப்பெயர் கொண்ட இப்பாறைப் படிமங்கள், ஆண்டுகள் ஆக ஆக பிரம்மாண்ட வடிவமும் பரிணாமமும் பெற்று காண்போரை பிரம்மிப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன. ஆயிரமாயிரம் விசுவரூப லிங்கங்களாக உருப்பெற்று நிற்கின்றன.
லெஸ்டர் பி. தில் என்ற குகை ஆய்வாளர் 1935-ல் இக்குகை ஐந்து மேற்படிவமும், 26 மைல் நீளமும் உடையதைக் கண்டுபிடித்தார். 1933-ல் இருந்து இது பொதுமக்களின் சுற்றுலாத் தளமாகியுள்ளது.
இந்த இடத்தை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக்கி, ஒலி, ஒளி காட்சியமைப்பும் ஏற்படுத்தி ஒரு கண் கொள்ளாக் காட்சியாக்கி, தங்கள் வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாத்து வைத்துள்ளனர். இதன் சிறப்பம்சமாக 70-அடி அகலமும் 35 அடி உயரமும் கொண்ட மேடைத் திரை உள்ளது. தேனிலவு இணைகளுக்கான அழகான சிறு அறைகளும் உருவாக்கப் பட்டுள்ளது.
குகையை முழுவதுமாகச் சுற்றிவர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சுமார் ஒரு மைல் தூரத்திற்கு மேல் உள்ளது. குகையின் ஒரு தனித்துவமான அம்சம் என்றால் அது ஒயின் டேபிள் உருவாக்கம் ஆகும். இது ஒரு அரிய குகை அமைப்பு. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குகை நீருக்கடியில் இருந்தபோது உருவானதாகக் கூறப்படும் திராட்சை போன்ற சிறிய கோளங்கள் உருவாகின்றன. இந்தக் குகை 400 மில்லியன் ஆண்டுகளாக இருந்ததாகக் கூறப்படுவது சுவையான செய்தியாக இருந்தது.
இருண்டு கிடக்கும் குகை மின் விளக்குகளால் பளீரென வெளிச்சம் பெறுகிறது. ஒவ்வொரு இடத்தைக் கடக்கும் போதும் வழிகாட்டி அதை அணைத்துவிட்டு மறுபடி அடுத்த இடத்தில் போய் மின்விளக்கைப் போடுகிறார். திகில் நிறைந்த பயணமான இதில் நீளமும், உயரமுமான பாறைகள் சூழ்ந்திருக்க, குகையைச் சுற்றிலும் சலசலக்கும் நீரின் சத்தமும் சேர்ந்து கொள்கிறது.
மேடாக ஏறும் குகையின் நுழைவாயிலிலேயே மஞ்சள் நிறத்தில் ஒரு பிரம்மாண்டமான பாறைப்படிமம், 35 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு மெய்சிலிர்க்கச் செய்கிறார்கள்.
அந்த குகைக்குள்ளேயே ஒரு திரையரங்கு போன்ற அமைப்பும் உள்ளது. என்ற அதில் ஒரு திரைப்படக் காட்சியும் நடக்கிறது. கும்மென்ற இருண்ட குகை வெளியில் பளீரென விளக்கு எரிந்து, இதயத் துடிப்பை ஒரு சில நொடிகள் நிறுத்தி வைத்துப் பின்னர் வானுக்கும் பூமிக்கும் நெடிதுயர்ந்து நிற்பது போல் 70 அடி உயரம், 60அடி அகலமும், 35 அடி தடிமனும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வைரப் பாறை தக தகவென மின்னிக் கொண்டிருந்த அதன் வயது 70 மில்லியன் வருடங்கள் என்றது ஆச்சரியத்தின் உச்சமாக இருந்தது.
செயின்ட் லூயிசிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ள இங்கு பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால், 15 முதல் 20 பார்வையாளர்கள் கொண்ட குழுக்களாக அமைத்து அழைத்துச் செல்லப்படுகிறது.