சிறப்புக் கட்டுரைகள்
null

மனித வாழ்வின் எட்டு நிலைகள்- (பாகம் 1)

Published On 2023-11-21 17:30 IST   |   Update On 2023-11-21 17:30:00 IST
  • ஞானத்தை கொடுக்கும் என்பதால் குழந்தைப் பருவத்திற்கு தாயின் அன்பு முக்கியம்.
  • ஒரு மனிதனுக்கு இந்நிலையில் தான் கிடைக்கிறது.

வாழ்க்கை என்பது ஆரோக்கியமான உடல், அழகான குடும்பம், போதுமென்ற மனம், வாழ்வை நடத்த தேவையான வசதி, இருக்க இடம், உடுத்த உடைகள், நல்ல உணவு, நல்ல நண்பர்கள், துரோகம் நினைக்காத உடன் பிறப்புகள், உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாத உறவினர்கள் இவை அனைத்தும் கிடைக்கப்பட்டால் அதுவே மன நிறைவான நிம்மதியான வாழ்க்கையாகும். உயர்வு என்பது பொருளாதாரத்தை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் மன நிறைவான வாழ்க்கை வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும்.

உளவியல் ரீதியாக மனித வாழ்க்கையை எட்டு நிலைகளாக பிரிக்க முடியும். நிறைவான ஒரு வாழ்க்கையை இந்த எட்டு நிலைகளை கடந்த பின்பே அடையமுடியும்.

முதல் நிலை

வாழ்வின் முதலாவது மற்றும் அடிப்படை நிலை. குழந்தைப் பருவத்தில தட்டுத்தடுமாறி நடை பழகுவதில் தொடங்கி சமுதாயத்தை எப்படி எதிர்கொள்வது என பெற்றோர் மூலம் புதிது புதிதாக பல விஷயங்களை கற்றுக் கொள்கின்ற காலம்.

சந்திரன் ஆதிக்கம்:

இதில் முதல் 10 வருடங்கள் சந்திரனின் ஆதிக்கம். சந்திரன் தாய்க்கான காரககிரகம். ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஆன்மா உடல் என்றால், மனம் சந்திரனாகும்.

பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மாவின் முதல் பத்து வருடம் குழந்தை பருவம். தாயின் அன்பிற்கு இணையாக உலகில் எதுவும் கிடையாது. ஒரு தாயால் மட்டுமே குழந்தையை எப்பொழுதும் தன் பார்வையில் வைத்துக் கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் மிகவும் முக்கியம். தாய்ப்பாலால் அன்பையும் உலக ஞானத்தையும் வழங்குபவள் தாய். 10 வருடத்தில் குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே பண்பு, பாசம், நல்ல மனநிலை, மூளை வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாய் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் .10 வருடங்களில் தாய் கற்றுக் கொடுக்கும் நல்ல போதனைகளே மனிதனின் இறுதி காலம் வரைக்கும் தேவையான ஞானத்தை கொடுக்கும் என்பதால் குழந்தைப் பருவத்திற்கு தாயின் அன்பு முக்கியம்.

முதல் நிலையின் இரண்டாம் பகுதி டீன் ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்தை நெருங்கும் சமயம் குழந்தைப் பருவத்தின் இரண்டாவது நிலையில் அடியெடுத்து வைப்பார்கள். இந்த நிலையிலும் நம் அன்றாட மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்துதான் இருக்கிறோம். இக்காலக்கட்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள பெரியவர்களும், உற்றார், உறவினர்கள், ஆசிரியர்களும் நமக்கு என்ன போதிக்கின்றனரோ, அவர்கள் நம்முன் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவையே நம் மனதில் பதிந்து பின்நாளில் நம் எண்ணம், சொல் செயல்களை தீர்மானிக்கும் சக்திகளாக அமைந்து விடுகின்றன. எனவே, வாழ்வின் அடித்தளமான குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும்.

புதனின் ஆதிக்கம்:

10 வயது முதல் 20 வயது வரை புதனின் ஆதிக்கம். நவக்கிரகங்களில் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக் கூடிய கிரகம் புதன். புதனுக்கு புத்திக்காரகன் என்று பெயர். புதன் புத்தி, அறிவு, ஞானம் தருபவர்.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு சூரிய வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். சூரியனின் சக்திகள் புதனில் அதிகம் நிறைந்து இருப்பதால் புதனுக்கு புத்திகாரகன் என்று பெயர். சுய ஜாதகத்தில் புதன் சிறப்பாக அமைந்தால் புத்தி, அறிவு, ஞானம் சிறப்பாக இருக்கும். 10 வருடம் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த குழந்தை விரும்பிய வெளி உலக கல்வியை கற்கும் காலம். குழந்தை தாயிடம் கற்ற ஞானத்தை கல்வி என்ற வித்தையால் வெளி உலகம் தெரிந்து கொள்ளும் காலம். 10 முதல் 20 வயது வரை கற்கும் கல்வியே அவனுடைய வாழ்வாதாரமாக அமையும். புத்தியுடையவன் பலவான் என்பது பழமொழி.

புதன் பலம் பெற்றவன் தன் புத்தி சாலித்தனம் நிறைந்தவன். எந்த சூழ்நிலையிலும் தன் புத்தியால் தன்னை தற்காத்துக் கொள்வான். புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான் முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையும் காலம் இது

இரண்டாம் நிலை:

டீன் ஏஜ் முடிவில் வாழ்வின் இரண்டாம் நிலையில் அடியெடுத்து வைக்கும் காலம். முப்பது வயது வரை தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம். புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், வாலிபமிடுக்குடன் தனக்கு எல்லாம் தெரியும் என வாழ ஆரம்பிக்கும் காலம். இப்பருவத்தில் தான் நல்லது எது கெட்டது என புரிந்து கொண்டு தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க வேண்டிய காலமாகும்.

சுக்கிரனின் ஆதிக்கம்:-

20 முதல் 30 வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம். புதனுக்கு அடுத்து பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கிரகம். சுக்கிரன் என்ற பெயரை கேட்டாலே மனதில் இனம் புரியாத சந்தோசம் குடிபுகும். இது பெண் கிரகம் என்பதால் எதிர்பாலினத்தினர் மீது ஈர்ப்பை உண்டாக்கும். காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எதைப் பார்த்தாலும் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். ஆடை, அலங்காரம், சிற்றின்ப நாட்டத்தில் ஈடுபாடு ஏற்படும் காலம். உழைக்காமல் ஆடம்பரமாக சொகுசாக இருக்க விரும்பும் காலம்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி


இந்நிலையில் பெரும்பாலும் மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே விரும்புவார்கள். மனம் எல்லைகளில்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும். தன் விருப்பத்துக்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் தகர்தெறியவும் துடிக்கும். தடைகளை விதிப்போர் மீது வெறுப்பையும் உமிழும். ஆனால், அத்தடைகளை உண்மையில் எதற்காக பெரியவர்கள் நமக்கு விதிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கை வார்த்தைகளில் பொதிந்துள்ள உள்அர்த்தம் என்ன என்பதை அலசி ஆராய்வது அவசியம். கொண்டாட்டங்களும், காதலும் மட்டுமே இந்த நிலையை அர்த்தப்படுத்திவிடாது. உண்மையில் நாம் யார், வாழ்வில் என்னவாக போகிறோம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் ஒருவருக்கு இந்நிலையில் எழுந்தால் அதுவே இந்த நிலையை முழுமையாக்கும்.

தற்காலத்தில் பிஞ்சிலேயே பழுத்த பழமாக தவறான காதலில் 13 , 14 வயதிலேயே மாட்டி தன் வாழ்வை தொலைக்கும் குழந்தைகளே அதிகம். இந்த கலிகாலத்தில் ஒருவனுக்கு தவறான காதல் உணர்வு வராவிட்டால் அவனுக்கு சமுதாயம் வேறு பெயர் சூட்டி அவமானப்படுத்துகிறது. படிக்கும் காலத்தில் தவறான எண்ண அலைகளை மனதில் விதைக்க கூடாது. காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமைந்தவருக்கு சிறப்பான திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் தேடி வரும்.

மூன்றாம் நிலை

முப்பதாவது வயதின் முடிவில் வாழ்வின் மூன்றாம் நிலைக்குள் நுழைகிறோம். இதுநாள் வரை கற்ற வாழ்க்கைக் கல்வியின் துணையோடு, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு, தங்களது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பொருளாதாரத் தேவைகளை தான் மேற்கொள்ளும் பணி அல்லது தொழிலின் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டிய மிக முக்கியமான தருணம் இந்த மூன்றாம் நிலையாகும். அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாயத்தின் வாயிலாக தான் கற்றவற்றை அரங்கேற்றும் பருவம் இது. அத்துடன் பொருளாதார தேடலுக்கு அப்பாற்பட்டு தானும் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு சென்றதற்கான அடையாளத்தை தங்கள் சந்ததியினருக்கும், இச்சமுதாயத்திற்கும் விட்டு செல்வதற்கான மரபை உருவாக்கும் வாய்ப்பும் ஒரு மனிதனுக்கு இந்நிலையில் தான் கிடைக்கிறது.

செவ்வாயின் ஆதிக்கம்:-

30 வயது முதல் 40 வயது வரை செவ்வாயின் ஆதிக்கம். விண்வெளியில் உள்ள கிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்து மனிதனுக்கு தைரியத்தை வழங்கும் கிரகமாக இருப்பது செவ்வாயாகும். இவருக்கு பூமிக்காரகன் என்ற பெயரும் உண்டு.

உறவுகளில் ஆண் ஜாதகத்தில் சகோதரர், பெண் ஜாதகத்தில் கணவரையும் குறிக்கும். சிற்றின்ப நாட்டத்தை குறைத்து தொழில், வேலையில் வாழ்வாதாரத்தை தேடி அலையும் மிக முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை ஆற்றல்களை வெளிப்படுத்தி வேலை அல்லது தொழிலில் உயர்வு பெறும் காலம். சிறு வயதில் சகோதரர்களிடம் சிறு மனக்கசப்பு இருந்தாலும் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து வாழ்வதே சிறப்பு என்ற அனுபவ பாடத்தை உணரும் காலம். பெண்கள் கணவரை முழுமையாக புரிந்து கொள்ளும் காலம். மண், பொன், பெண் ஆசை ஏற்படும் காலம் என்பதால் வீடு, வாசல் , வாகனம் என வாழ்விற்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் வாழ்க்கையில் உயர்வதற்கு எல்லா வழிகளும் இந்த காலத்தில் நடக்க செவ்வாய் பகவான் உதவி செய்வார்.

நான்காம் நிலை:

வாழ்வின் நான்காம் நிலையான இந்த நிலையில் 40 முதல் 50 வயது வரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை, பலன்களை அனுபவிக்கும் நிலையாகும்.

சூரியனின் ஆதிக்கம்:-

40 வயது முதல் 50 வயது வரை சூரியனின் ஆதிக்கம். நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர். உலகில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருப்பவர் சூரியபகவான். சூரியன் அழியா புகழை கொடுப்பார். சமூக சேவையில் நாட்டம் ஏற்படும்.

எளிமையாக இருக்கவும் இரக்க உணர்வை கொடுப்பார். ஜனன ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் ஆன்மபலம் பெற்று உடல் தேஜஸ் பெருகும் காலம். பொன் நிறமாக இருப்பார். தந்தை, தந்தை வழி உறவுகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும் காலம். பதவி, புகழ், அந்தஸ்திற்காக ஏங்கும் காலம்.

(5-ம் நிலை முதல் 8-ம் நிலை வரை அடுத்த வாரம் காணலாம்)

-தொடரும்

Tags:    

Similar News