சிறப்புக் கட்டுரைகள்

சல்லிய தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

Published On 2023-11-14 16:45 IST   |   Update On 2023-11-14 16:46:00 IST
  • ஒரு சிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது.
  • வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன.

பொதுவாக அனைவரும் வீடு மற்றும் நிலம் வாங்கும் போது அதில் வில்லங்கம் அல்லது வாஸ்து குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து வாங்குவார்கள். அப்படி பார்த்தும் சிலர் கட்டிய அல்லது வாங்கிய சொந்த வீட்டில் குடிபுக முடியாத நிலை அல்லது குடிபுகுந்த பிறகு தீராத வாழ்வியல் சங்கடங்கள், வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாத நிலை அல்லது கட்டுமானப் பணி முழுமையடையாமல் நிற்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை பார்த்து இருக்கிறோம். பலர் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டி வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

எளிதில் உணர முடியாத, கண்ணுக்குத் தெரியாத, விதிப்பபயனை முழுமையாக வெளிப்படுத்தும் ஒருவிதமான வாஸ்துப் பிரச்சினையே 'சல்லிய தோஷம்'. ஒரு சிலருக்கு இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாது.

ஒரு நிலத்தை புதிதாக வாங்கியவுடன் நிவர்த்தி செய்ய வேண்டிய தோஷம் சல்லிய தோஷம். நிவர்த்தி செய்யாத சல்லிய தோஷத்தினால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

சல்லிய தோஷம்

சல்லியம் என்ற சொல்லிற்கு வேண்டாத, துன்பம் தருகின்ற என்பது பொருள். சல்லிய தோஷம் என்பது குடியிருக்கும் வீடு, தோட்டம், பண்ணை நிலம் , ஆலைகளின் பூமியில் உள்ள குற்றம் மற்றும் குறைகளாகும். ஒருவர் வாங்கும் வீடோ, நிலமோ பல வருடங்களுக்கு முன்பாக வேறு மனிதர்களாலோ, விலங்குகளாலோ பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். அந்த இடத்தில் இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள், நகம், முடி, எலும்பு புதைத்திருக்கலாம். இது போன்று நிலத்திற்கு அடியில் உருவாகி அந்த இடத்தின் அதிர்வலைகள் கட்டுப்படுத்தும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.

பல வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் நகருக்குள் வீடு கட்டி வசித்தனர். விலங்குகள் காடுகளில் வாழ்ந்தன. தற்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள், ஏரி, குளங்கள், குட்டைகள் என கிடைத்த இடத்தை வாங்கி வீடு கட்டுகின்றனர். அந்த இடங்களில் குப்பை மண், மக்கியத் துர்நாற்றம் வீசுகின்ற மண், இறந்த உயிர்கள், எலும்புகள் என அனைத்தும் இருக்கத்தான் செய்யும். இது தெரியாமல் இருக்க மேற்புரத்தில் சுத்தமான மண்ணை கொட்டி விற்பவர்களிடம் ஏமாந்து மனை வாங்குபவர்களே அதிகம். இதற்கும் ஒரு படி மேலே போய் சிலர் மலிவு விலை என பயன்படுத்தாத சுடுகாடு அல்லது சுடுகாடு இருந்த இடத்திற்கு அருகில் பிளாட் போடும் மனையை அறியாமையால் வாங்குகிறார்கள். அது போன்ற இடங்களில் சடலங்களின் எலும்புகள் புதையுண்டு கிடக்கும்.

மேலும் பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக் கிடக்கும். அத்துடன் பலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் அவல ஒலிகளின் அதிர்வலைகள் இருக்கும். இதை நம்பாதவர்கள் கூட காலப்போக்கில் பாதகத்தை அனுபவிக்கும் போது சல்லிய தோஷத்தை நம்புகின்றனர்.

வாஸ்து சாஸ்திரமானது நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம் என்று கூறுகின்றன. அவை எலும்பு, தலையின் மண்டை ஓடு, செங்கல், மண் ஓடு, அடுப்பு, சிலை, சாம்பல், கரி, பணம், தானியம், பொன், கல், தேரை, விலங்கின் கொம்பு, எலும்புகள், ஜாடி ஆகும்.

மனிதர்களின் இன்ப, துன்பங்களுக்கு 'சல்லிய தோஷம்' பிரதான காரணம் என வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத்தினாலும் சல்லியத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.

1.நன்மை தரும் சல்லியங்கள்

மனையை தோண்டும் போது அரணை, சிலந்தி, நண்டு, பல்லி, தவளை, பசுவின் கொம்பு போன்றவைகள் தென்பாட்டால் அதிகமானத் தீமைகள் இல்லை.

தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் உலோகத்தினால் செய்யப்பட்ட விக்ரகங்கள், மண் சிலைகள் கிடைத்த நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு சிறப்பான தொழில், செல்வச் செழிப்பு, காரிய சித்தி, புகழ், அந்தஸ்து, கவுரவம், கிடைக்கும். ஆனாலும் பூமியில் தென்படும் அனைத்து சல்லியத்தையும் வெளியேற்றிய பிறகு தான் வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும்.


2. தீமை தரும் சல்லியங்கள்

மனையை தோண்டும் போது உடைந்த மண் ஓடுகள், சாம்பல், கரித்துண்டுகள், கரையான், எறும்பு புற்றுகள், பல், மரத்தின் வேர், வண்டு, ஓணான், உடும்பு, பாம்பு, தேள், சூலம் மற்றும் ஆயுதங்கள், எலி, விறகு, எறும்புகள், தேன் கூடு, ஆமை, முட்டை, நகம், மயிர் , பிணம், போன்றவைகள் நிலத்தை தோண்டும் போது கிடந்தால், அதில் தீமைகள் தான் அதிகம் வரும்,. ஆகவே இவைகளைத் தேடிப் பார்த்து முற்றிலும் அகற்ற வேண்டும்.

நாட்டில் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் பலர் இருந்தாலும் வெகு சிலரே இது போன்ற பிரச்சினைகளால் மன உளைச்சலை சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஜோதிட ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ம் பாவகத்துடன் வக்கிர கிரகங்கள், நீச, அஸ்தமான, பகை கிரகங்கள் தொடர்பு , ராகு, கேது, மாந்தி தொடர்பு பெறும் போதும் சல்லிய தோஷத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. என் அனுபவத்தில் மேஷ, சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு சல்லிய தோஷ பாதிப்பு சற்று மிகையாக உள்ளது. இத்தகையவர்களுக்கு வீடு மனை யோகம் சிறப்பாக கிடைக்கப் பெற்றாலும் அதை அனுபவிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் தொடர்கதையாக இருக்கிறது.

நாம் சல்லிய தோஷம் என்று குறிப்பிடுவதை வெளிநாட்டினர் காந்த சக்தி ஓட்டம் என்று கூறுகிறார்கள். இது உலகில் உள்ள அனைத்து பூமி ஆராய்ச்சி நிபுணர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை். நிலத்துக்கு கீழே புதைந்து இருக்கும் சல்லிய பொருட்களும் பூமியின் காந்த சக்தியும் இணைந்து நிலத்தில், கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதிக்கும் . விவசாய நிலமாக இருந்தால் நில உரிமையாளர் விளைச்சல் இன்மை, நிலத்தடி நீர் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள. ரியல் எஸ்டேட் துறையில் கோடி கோடியாக சம்பாதித்து கரை கடந்தவர் கூட ஒரு சில மனையை தேர்வு செய்யும் போது மீள முடியாத துக்கத்தை சந்திக்கிறார்கள்.

சிலர் 10 பங்களா வாங்கிய போது ஏற்படாத இழப்பு ஒரு சல்லிய தோஷம் நிறைந்த வீட்டை போய் பார்த்து வந்ததற்கே உருவாகும். மிகப் பெரிய ஆலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து, உற்பத்தி பாதிப்பு, இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதற்கு இந்த தோஷமே காரணம்.

சல்லிய தோஷம் இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு தீராத மன உளைச்சல், தீராத கடன், உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை.

குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்பு. பல தலைமுறையாக முன்னேற்றமின்மை சொந்த பூமியை பல தலைமுறையாக பயன்படுத்தவும் , விற்கவும் முடியாமை, வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாமை, வீடு கட்டும் பொழுது தொடர் அசம்பாவிதம், பாதி கட்டிய நிலையில் வீட்டு வேலை நின்று விடுவது, பேய், பிசாசு, பில்லி, சூன்யம் இருப்பது போன்ற உணர்வு வீட்டில் யாரோ நம்முடன் இருப்பது போன்ற உணர்வு நீங்காத நோய், தலைமுறையாக தொடர் நோயால் அவதி, கலப்பு. காதல் திருமணம், வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் கட்டிய வீடு தலைமுறையாக அடமானத்திலேயே இருப்பது போன்றவைகள் நீடிக்கும். வெகு சில இடங்களில் பூமிக்கு கீழ் மனித, மிருக உடல்கள் அல்லது எலும்புகள் இருந்தால் சல்லிய தோஷ வலிமை மிகுதியால் தொடர் விபத்து தூர் மரணங்களை சந்திக்க நேரும்.

வாஸ்து குறைபாடு இல்லாத வீட்டில் வசிப்பவர்களுக்கு மிகுதியான சுப பலன்கள் கிடைக்கும். சிலர் வாடகை வீட்டிற்கு குடிபுகும் போது அன்றாட தேவைக்கு கூட கஷ்டபட்டவர்கள் குடி புகுந்த பிறகு மன நிம்மதி, தொழில் முன்னேற்றம, வீடு வாகன யோகம் போன்ற மன மகிழ்வு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். வீட்டின் உரிமையாளரை தேடி வந்து வாடகை கொடுப்பார்கள். உரிமையாளருக்கும், வசிப்பவர்களுக்கும் இடையே நட்பு ஏற்படும். உரிமையாளர்களுக்கு வசூலாகும் வாடகைப் பணம் சுப செலவுகளுக்கு பயன்படும்.

நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கும் சிலர் வாடகை வீட்டை மாற்றியவுடன் தொடர் அசுப பலனை சந்திக்க நேரும். அதனால் மனம் நொந்து வாடகை தருவார்கள். வாடகை தாரருக்கும் உரிமையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். மன வேதனையுடன் தரும் வாடகை பணத்தால் வீட்டின் உரிமையாளருக்கு அசுப செலவுகளே அதிகரிக்கும்.

அவர்களுடைய அழுகை, புலம்பல் வீட்டின் அதிர்வலையுடன் இணைந்து வீட்டிற்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும். வீட்டை காலி செய்யக் கூட முடியாத நிலை ஏற்படும்.

எந்த செயலுக்கும் பின் விளைவு உண்டு என்பதை உணர்ந்து விதியின் மேல் பழி போட்டு தப்பிக்காமல் மதியுடன் செயல்படுவது சிறப்பு. பாதகம் என்ற ஒன்றைக் கொடுக்கும் பிரபஞ்சம் பாதகத்தை சாதகமாக மாற்றும் சூட்சுமத்தை தந்து இருக்கிறது. காலி நிலத்தில் சல்லியம் நீக்குவது எளிது. குடியிருக்கும் வீட்டில் சல்லியம் நீக்குவது சிறிது கடினம். அதனால் வீடு கட்டும் முன்பு சல்லியத்தை முழுமையாக வெளியேற்றினால் சுப பலன் அதிகமாகும்.

பரிகாரம்

அனுபவத்தில் இது போன்ற நடைமுறை சிக்கலை சந்திக்கும் சொந்த மற்றும் வாடகை வீட்டினர், வாராகி அம்மனின் ஆயுதமான கருங்காலி கோல் வைத்து வழிபட கெடுபலன்கள் குறையும்.

Tags:    

Similar News