null
ஓசோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
- ஓசோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது.
- அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!
உயிர் காக்கும் ஓசோன் மண்டலம்
பூமியைச் சுற்றி உள்ள ஓசோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.
சூரிய மண்டலத்தில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்து பூமியை ஓசோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.
சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓசோன் மண்டலமே.
இந்த ஓசோன் உறை மட்டும் இல்லாவிட்டால் இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட் போன்ற கண் நோய்களும் ஏற்படும்.
ஓசோனில் துளை
ஆனால் நகரங்களில் இருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓசோன் உறை மீது பட்டுப்பட்டு அதில் அபாயகரமான அளவில் துளைஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்ணில் ஏவிய சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. அண்டார்டிகாவின் மேலே ஓசோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள். அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!
1970-ம் ஆண்டில் இருந்து விஞ்ஞானிகள் ஓசோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீசனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.
செப்டம்பர் 16 ஓசோன் தினம்
1995-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16-ம் நாள் ஆண்டுதோறும் உலக ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓசோன் துளை பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓசோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.
1987-ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓசோன் துளை தெரிவிக்கிறது.
நச்சு வாயுக்களே காரணம்
நச்சு வாயுக்கள் பூமியில் இருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓசோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத்தகுந்தது CFC எனப்படும் குளோரோ புளோரா கார்பன் - Chloro Floro Carbon - ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் போமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும், இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.
இது மட்டுமன்றி அனேக ஆலைகள் கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பர்டிகுலேட் மேட்டர்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.
ச.நாகராஜன்
காற்றுத் தரக் குறியீட்டு எண்
காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் குவாலிடி இண்டெக்சில் பூஜ்யம் முதல் 300-க்கும் அதிகம் என ஆறு மட்டங்கள் உள்ளன. இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவு ஆகும். 350 என்ற எண் காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும். 400-க்கும் மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். 999 என்ற எண் நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்.
இதில் இந்திய நகரங்களில் நமது தலை நகரமான டெல்லி 999-ஐ எட்டியிருந்தது அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. டெல்லி உச்ச நீதி மன்றமே கவலைப்படும் அளவு சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பது கவலை தரும் நிலையாகும்.
அடுத்து பெங்களூர் நகரை எடுத்துக் கொண்டால் மரங்களின் நகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்த இதன் காற்றுக் குறியூட்டு எண் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு 1.9 மடங்கு அதிகமாக உள்ளது.
சென்னையின் தர அளவு திருப்திகரமான அளவில் இருப்பதை எண்ணி மகிழ்வதோடு இன்னும் அதிக அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க உறுதி பூண்டு அனைவருக்குமான லட்சிய நகரமாக அமையப் பாடுபட உறுதி பூண வேண்டும்.
க்ரீன் ஹவுஸ் வாயுக்கள்
கிரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், ஓஜோன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய இவை பூமியின் பரப்பில் இருந்து அதிகமாக வெளியிடப்பட்டால் நிறைய அபாயம் ஏற்படும். முதல் அபாயம் ஓசோனில் துளை விழுவதாகும்.
சென்ற நூற்றாண்டில் 0.4 முதல் 0.8 செல்சியஸ் வரை பூமியின் உஷ்ணநிலை அதிகரித்து விட்டது. இந்த நூற்றாண்டில் 1.4 முதல் 5.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கான முக்கியமான காரணமாகத் திகழ்வது வளி மண்டலத்தில் அளவுக்கதிகமாக கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் சேர்வதேயாகும்.
கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களை நாம் உபயோகிக்கும் வாகனங்களே வெளியிடுகின்றன. ஆகவே வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாததாக ஆகிறது.
ஒரு டிகிரி அளவு புவி வெப்பம் உயரும் போது நான்கு சதவீதம் அதிகமான சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்பதோடு அதனால் மருத்துவ மனைகள் நிரம்பி வழியும்.
புவி வெப்பம் அதிகமாவதால் எலிகள், அணில்கள், முயல்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உயரமான இடங்களுக்குச் சென்று வசிக்க ஆரம்பித்திருப்பதை விஞ்ஞான ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
கடல் மட்டம் உயர ஆரம்பிப்பதால் கடலோரம் அமைந்துள்ள புனித தலங்கள், புராதனச் சின்னங்கள் அழிய ஆரம்பித்துள்ளன. 600 ஆண்டுகள் பழமையான சுகோதை என்ற புராதன இடம் அழிக்கப்பட்டு விட்டது. அது ஒரு காலத்தில் தாய்லாந்தின் தலைநகரமாகத் திகழ்ந்தது.
வீட்டுக்கு ஒரு மரம்
வீட்டுக்கு வீடு மரம் ஒன்றை நட வேண்டும் என்ற உணர்வு அதிகமாக வேண்டும்.
ஒரே ஒரு மரம் ஐந்து சராசரி அளவுள்ள குளிர்சா தனப் பெட்டியில் இருந்து வெளிப்படுத்தப்படும் வெப்பத்தை அகற்றி விடும் என்பது சுவையான செய்தி. காற்றைக் கூறுகளாக்கி குளிர்காலத்தில் சீதோஷ்ணத்தை இதமானதாக மரங்கள் ஆக்கும் என்பது இன்னொரு சுவையான செய்தி.
இதனால் என்ன நன்மை? எனர்ஜி கன்ஸம்ப்ஷன் எனப்படும் ஆற்றலின் உபயோகம் கட்டுப்படுத்தப்படுகிறது. செலவும் குறைவு. மாசும் குறைவுபடும். செடிகளும் மரங்களும் உள்ள நகர்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே உள்ள நல்ல பூங்காக்கள் வெள்ள நீரைக் கூட செயற்கைமுறையை விட செலவில்லாமல் உறிஞ்சுகின்றன.
பூங்காக்கள் நல்ல காற்றையும் நீரையும் சேமித்து கண்ணுக்கும் மனதிற்கும் உடலுக்கும் இதத்தையும் ஆரோக்கியத்தையும் தருபவையாகும். ஆகவே நகரத்தின் கண்களான பூங்காக்களை நன்கு பாதுகாத்து, அசுத்தப் பொருள்களை நீக்குதல் வேண்டும்.
மரீனா போன்ற உலகின் அற்புதமான கடற்கரையை ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சொத்தாக பாவித்து பெருமை கொண்டு அங்கு மாசுப் பொருள்களைக் குவிக்காமல் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றைப் போடாமல் அதை நன்கு பாதுகாக்க வேண்டும்.
வாகனப் புகையைக் கட்டுப்படுத்தல்
அடுத்து வாகனப் புகையை மட்டுப் படுத்த வேண்டும்.
பாசில் பியூயல் எனப்படும் படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை கூடுமான அளவில் தவிர்க்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் வாகனங்களைத் தவிர்த்து. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் வேண்டும்.
Chloro Floro Carbon குளோரோ புளோரா கார்பன் இல்லாத குளிர்சாதனப் பெட்டிகளைக் கேட்டு வாங்கி உபயோகிக்க வேண்டும்.
ஒரு சிறிய வாஷிங் மெஷின் நீரையும் மின்சக்தியையும் தேவையான அளவு மட்டும் உபயோகிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தால் அது ஒரு வருடத்திற்கு 200 கிலோ நச்சுப் பொருள் வெளியேற்றத்தைத் தடுக்கும். ஆகவே மின் சாதனங்களை வாங்கும் போது அவை மாசுக் கட்டுப்பாடு எண்ணத்துடன் ஆராய்ந்து வாங்குதல் இன்றியமையாதது.
உயிர் வாழ ஓசோன் உறை தேவை
தனி மனிதராக ஒவ்வொருவரும் இப்படித் தன்னால் இயன்ற அளவு இயற்கையைக் காக்க முற்பட்டால் ஓசோன் துளை பெரிதாகாது.இருக்கின்ற துளையும் சிறுகச் சிறுக மூடி விடும்.
இப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் கொள்ள ஒரு நாளை ஆண்டுக்கு ஒரு முறை இதற்காகவே ஒதுக்குவது சிறந்தது அல்லவா?
அதற்காகவே தான் ஏற்படுத்தப்பட்டது இந்த ஓசோன் தினம். உயிர் வாழ ஓசோன் உறை தேவை என்பதே இந்த நாளில் நாம் எழுப்ப வேண்டிய முழக்கமாகும்.
இந்த உறையைக் காத்து, அற்புதமான பூமியை என்றும் உயிரினங்கள் வாழக் கூடிய இடமாகப் பாதுகாப்போம்!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com