சிறப்புக் கட்டுரைகள்

திருமணத்தடையும் மூன்றாம் பாவகமும்

Published On 2023-05-30 10:29 GMT   |   Update On 2023-05-30 10:29 GMT
  • திருமணம் என்பது பருவ வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்த மேற்கொள்ளப்படும் வாழ்க்கை ஒப்பந்தம்.
  • ஒரு மனிதன் அவனுடைய பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும்.

திருமணம் என்பது பருவ வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்த மேற்கொள்ளப்படும் வாழ்க்கை ஒப்பந்தம். குடும்பம், இல்லற இன்பம், இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. ஒரு மனிதன் அவனுடைய பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய முடியும். பனிரெண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுத்தி காலங்களில் தான் தூண்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகனின் வயதிற்கு ஏற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட திருமணம் அவசியம். நிரந்தரமான ஒரு வாழ்க்கை துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்ய முடியும். திருமணமே ஜாதகரை சிறப்பு பெற்ற மனிதனாக உயர்த்துகிறது. திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும் போதே ஒரு மனிதனின் கர்மா முழு வீச்சில் செயல்படுகிறது. வினை இல்லாமல் விளைவு இல்லை. ஜாதகரின் வினைப்பதிவில் உள்ள சுப கர்மா நல்லதை நடத்தும்.

ஒரு குற்றம் நல்லதை தடுக்கும். அதன் அடிப்படையில் ஜாதகரின் 21 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது. மனிதர்களுக்கு மன உளைச்சலை தருவதில் திருமணம்,திருமணத்தடை பெரும் பங்கு வகிக்கிறது. உலக மக்கள் தொகையில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் இருப்பதால் திருமணத்தடை மிகுதியாக உள்ளது. ஜோதிட ரீதியாக திருமணத்தடை என்றவுடன் பலர் 2-ம்மிடமான குடும்ப ஸ்தானத்தையும், 7-ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பெண்களுக்கு எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்கள்.அதே போல் தோஷ ரீதியாக செவ்வாய், ராகு/கேது மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமணத்தை எந்த கிரகம் தடை செய்தாலும் பதியை சுமப்பவர்கள் ராகு/கேது, செவ்வாய் மட்டும்தான் என்பது நாம் அறிந்த உண்மை. ஒருவரின் திருமணத்தை நிர்ணயிப்பதில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2,7,8க்கும், செவ்வாய், ராகு, கேதுக்களுக்கும் சில சம்பந்தம் இருந்தாலும் மாலையிடும் பாக்கியத்தை வழங்குவதில் 3ம் பாவகமே முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த கட்டுரையில் மூன்றாம் பாவகத்திற்கும் திருமணத்திற்கும் உள்ள சம்பந்தத்தையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.

மூன்றாம் பாவகம்

ஒருவருக்கு வெற்றியைத் தருவது ஜனன கால ஜாதகத்தின் லக்னத்திற்கு மூன்றாமிடமான உப ஜெயஸ்தானம், சகாய ஸ்தானம் முயற்சி ஸ்தானம். லக்ன பாவத்தின் பாவத் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம். ஆக ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட மூன்றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம். அத்துடன் ஆபரணம் மற்றும் கழுத்து, ஒப்பந்தத்தை குறிப்பது மூன்றாமிடமாகும். ஒருவருக்கு கழுத்து எனும் மூன்றாமிடம் சுபத்துவம் பெற்றால் விரைவில் மாலையிடும் யோகம், திருமண ஒப்பந்தம் கிட்டும். மூன்றாமிடம் பலம் குறைந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 சுபத்துவம் பெற்றாலும் காலம் தாழ்ந்தே திருமணம் நடைபெறும். திருமண ஒப்பந்தத்தை குறிக்கும் மூன்றாமிடம் பலம் பெற்றால் மட்டுமே ஆண், பெண் இருவரும் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட முடியும்.மூன்றாமிடமான கழுத்து ஸ்தானம் பலம் (எட்டாமிடத்திற்கு எட்டு) பெற்றால் மட்டுமே பெண்ணில் கழுத்தில் ஏறும் தாலி பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

சுபமாக சுப மங்கலத்தோடு வாழ்பவள் சுமங்கலி. நமது தமிழ் கலாச்சாரத்தில் சாஸ்திரங்களில் திருமாங்கல்யத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். திருமணச் சடங்கின் முக்கிய அம்சம் ஆண் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி விடுவது தான். எல்லாச் சூழ்நிலையிலும் உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு தான் ஆண் பெண்ணிற்கு தாலி கட்டுகிறான். ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக மரணமடைந்தால் அவளை தெய்வமாக வழிபடுவார்கள். சுமங்கலித்துவம் நிறைந்த பெண்கள் வாழும் குடும்பம் ஒரு கோவிலாகும். பெண்களுக்கு இத்தகைய பாக்கியத்தை வழங்குவது சுய ஜாதகத்தின் மூன்றாமிடமாகும்.

அதனால் தான் திருமணத்திற்குப் பார்க்கப்படும் நட்சத்திரப் பொருத்தத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் மிக முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. 3-ம் இடத்தில் நிற்கும் கிரகம் சம சப்தமாக 3-ம் இடத்தைப் பார்க்கும். 9-ல் நிற்கும் கிரகம் 3-ம் இடத்தைப் பார்க்கும். எனவே மூன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் நவகிரகங்களுக்கான பரிகாரங்கள் திருமண வாழ்க்கையை சுமூகமாக்கும்.

சூரியன்

ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம் வழங்குவதில் சூரியன் முன்னிலை வகிக்கிறது. 3ம் பாவகத்துடன் சூரியன் சுப சம்பந்தம் பெற்றால் தந்தை வழி உறவுகள் மூலம் திருமண ஒப்பந்தம், மாலையிடும் பாக்கியம் உரிய வயதில் கிடைக்கும். சூரியன் அசுப பலம் பெற்றால் தந்தை, தந்தை வழி உறவுகள் திருமண ஒப்பந்தமிட தடையாக இருப்பார்கள். எளிதில் மணமாலை கழுத்தில் ஏறாது. சூரியனை பலப்படுத்த 9 ஞாயிற்று கிழமை செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து நவகிரக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சந்திரன்

3-ல் சந்திரன் சுப வலுப்பெற்றால் தாய் வழி உறவுகள் மூலம் மிக இள வயதில் திருமணம் நடக்கும். 3-ல் உள்ள அசுப சந்திரன் சிலருக்கு வயது முதிர்ந்த பிறகு மணமாலையை அணிவிக்கும் அல்லது தாய் வழி உறவுகளால் திருமணத்தை தடை செய்யும். சந்திரன் அவசரத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் 3ம்மிடத்துடன் சந்திரன் சம்பந்தம் பெற்றால் அவசரத்திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் (ஒப்பந்தம்) செய்யாமல் உடனே திருமணம் போன்ற சம்பவங்கள் நடக்கும்.எவ்வளவு துரிதமாக திருமணம் நடந்தததோ அவ்வளவு வேகமாக திருமண பந்தம் முடிந்துவிடும். வெகு சிலருக்கு பல முறை மண மாலை ஏறி இறங்கும். 9 திங்கட்கிழமை அல்லி மலர்களால் நவகிரக சந்திர பகவானை வழிபட திருமண பந்தம் நிலைக்கும்.


பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

 செவ்வாய்

மூன்றாமிடத்துடன் செவ்வாய் சுப வலுப்பெற்றால் சுய முயற்சியால், உடன் பிறந்தவர்கள் ஆதரவால் திருமண ஒப்பந்தம் நடைபெறும். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது பழமொழி. செவ்வாய் விவேகமற்ற வேகம், கோபத்திற்கு காரக கிரகம். மூன்றாமிடத்துடன் செவ்வாய் அசுப சம்பந்தம் பெற்றால் கோபத்தால் நல்ல வரனை தவறவிடுவார்கள் அல்லது விவேகமின்றி பொருந்தாத வரனை தேர்வு செய்து பின்நாளில் வருந்துவார்கள். மூன்றாமிட செவ்வாயால் திருமண ஒப்பந்தம் தடைபடுபவர்கள் 9 செவ்வாய்க்கிழமை நவகிரக செவ்வாய் பகவானை செண்பக மலர்களால் அர்ச்சித்து வழிபட சுப பலன் உண்டாகும்.

புதன்

சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் புதன் சம்மந்தம் பெற்றால் தாய் மாமன் மூலம் இளம் வயதில் திருமணம் நடக்கும். புதன் காதல் கிரகம், இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். மூன்றாமிடத்துடன் புதன் அசுப சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு இரண்டு முறை திருமண ஒப்பந்தம் நடக்கும். அதாவது நிச்சயித்த திருமணம் தடைபடும் அல்லது மறு விவாகம் நடைபெறும். மூன்றாமிட புதனால் திருமணம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் ஒன்பது புதன் கிழமை தவன இலைகளால் அல்லது வெண்காந்தல் மலர்களால் நவகிரக புதனை வழிபட வேண்டும்.

குரு

சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு சுப பலம் பெற்றால் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆசிர்வாதத்தால் உரிய வயதில் திருமணம் நடைபெறும். குரு அசுப கிரக சம்பந்தம் பெற்றால் குலப் பெருமை பேசி நல்ல வரனை ஒதுக்குவார்கள். வயது முதிர்ந்த பிறகு வரனுக்கு ஏங்குவார்கள். குருவை பலப்படுத்த 9 வாரம் வியாழக்கிழமை நவகிரக குரு பகவானை செண்பகம் அல்லது முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

சுக்ரன்

திருமணத்திற்கு களத்திரகாரக கிரகம் சுக்ரன். சுய ஜாதகத்தில் சுக்ரன் எந்த நிலையில் மூன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் உரிய வயதில் அத்தை, பெரியம்மா உதவியுடன் ஆடம்பர திருமணம் நடக்கும். சுக்ரன் அழகு, ஆடம்பரத்திற்கு காரக கிரகம் என்பதால் சிலர் அழகு, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வரன் தேடிக் கொண்டே இருப்பார்கள். அல்லது அத்தை, பெரியம்மா போன்ற குடும்பத்து முக்கியப் பெண்களால் திருமணம் தடைபடும்.சுக்கிரனால் மணமாலை ஏந்துவதில் தடை இருப்பவர்கள் 9 வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை மல்லிகை, வெண் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

சனி

சனி மந்த கிரகம். எந்த செயலையும் காலம் தாழ்த்தியே நடத்துவார்.லக்னம், மூன்று, ஒன்பதாமிடத்துடன் சம்பந்தம் பெறும் சனி திருமணத் தடையை ஏற்படுத்துவதில் வல்லவனுக்கு வல்லவன்.கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு, ஜிங்குனு ஆடுச்சாம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல ஜோதிடரிடம் ஜாதகம் காட்டியும் திருமணத் தடைக்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சம பிரச்சினை இருக்கும். சிலருக்கு இளம் வயதில் காதல் கலப்பு திருமணம் நடந்து விவாகரத்து கிடைக்காமல், மறு விவாகத்திற்கும் செல்ல முடியாமல் இருப்பதற்கு மூன்றாமிட சனியே காரணம். சனி பகவானால் திருமணத்தடை இருப்பவர்கள் 9 சனிக்கிழமை நீல மலர்களால் சனி பகவானை வழிபட வேண்டும்.

ராகு

ராகு பகவான் தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் தான் நிற்கும் வீட்டை சொந்த வீடாக பாவித்து பலன் தருவார். ராகு தான் இணைந்த கிரகத்தின் காரகத்துவ பலனையும் இணைத்து பிரமாண்ட பலனைத் தருவார். ராகு தான் நின்ற வீட்டு பலனை பெரிது படுத்துவார். எனவே 3-ம் பாவகத்துடன் ராகு சம்பந்தம் பெற்றவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். ஆனால் கழுத்தில் தாலி இருக்காது. மாடர்ன் மங்கையாக தாலியை கழட்டி வைத்து வாழும் பெண்களுக்கு மூன்றாமிடத்திற்கு ராகு சம்பந்தம் இருக்கும். அல்லது பேன்சியாக அடிக்கடி தாலிச் செயினை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அல்லது தாலி மார்வாடி கடையில் அடமானத்தில் வாழும். இது போல் நவகிரகங்களின் லீலைகள் மனிதர்களை வியக்க வைக்கும். அதுவும் ராகுவின் செயல்பாடு திருமண வயதினரை திக்கு முக்காடச் செய்யும். வாலிப முறுக்கில் உல்லாசமாக இளம் பெண்களை திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றுபவர்களுக்கும் 3 ல் ராகு இருக்கும். மூன்றாமிடத்துடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் அடிக்கடி மந்தாரை மலர்கள் சாற்றி நவகிரக ராகுபகவானை வழிபடுவது நல்லது.

கேது

சனிக்கும், ராகுவுக்கும் சளைத்தவர் அல்ல கேது. சனி பகவான் காலம் தாழ்த்தியாவது பலன் தருவார். ராகு பகவான் இன்பமோ, துன்பமோ தாராளமாக வழங்குவார். கேது பகவான் கர்ம வினைக்கு ஏற்ற பலனை வழங்குபவர். கேது தான் நின்ற பாவக பலன்களை சுருக்குவார் என்பதால் காலம் தாழ்ந்து திருமணம் நடக்கும். சிலருக்கு கேதுவால் ஏற்படுத்தப்படும் அனைத்து திருமண ஒப்பந்தங்களும் சட்டச் சிக்கல் நிறைந்தவைகளாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு தாலியைக் கழற்றி வீசுபவர்கள் ஜாதகத்தில் 3ல் சனி, ராகு, கேது சம்பந்தம் இருக்கும். 3ம்மிட கேதுவால் திருமணம் அமைவதில் சிரமம் இருப்பவர்கள் கதம்ப மாலை அணிவித்து நவகிரக கேது பகவானை வழிபட வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத்தினை கொண்டு திருமண முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு , சுக்கிரன், சந்திரன், புதன் சம்பந்தம் இருப்பவர்களுக்கும் கழுத்தில் எளிதில் மண மாலை ஏறிவிடும். எனவே கழுத்தில் திருமணமாலை ஏறவும், திருமண பந்தத்தில் ஈடுபடவும் மூன்றாம் பாவக வலிமை அவசியம். எனவே திருமணம் தொடர்பான 1,2,7,8க்கு மட்டும் பரிகாரம் செய்யாமல் 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கும் பரிகாரம் செய்து பயன் பெற வாழ்த்துக்கள்.

Tags:    

Similar News