குரு சந்திர யோகமும் சகடை தோஷமும்
- நமது முன்னோர்கள் “மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவது இருக்கவேண்டும் “ என்று கூறியுள்ளார்கள்.
- தலைமை சுப கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உயர்வுகளை வழங்கக் கூடியவர்.
ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் வானில் நிலவும் கிரகங்களின் சஞ்சாரத்தைக் காட்டும் ஒரு குறிப்பு. ஒரு மனிதன் தன் வாழ்வில் அனைத்துவிதமான சுப பலன்களையும் அடைய சுய ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில யோகங்கள் இருக்க வேண்டும்.
இதனைதான் நமது முன்னோர்கள் "மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவது இருக்கவேண்டும் " என்று கூறியுள்ளார்கள். ஒரு ஜாதகத்தில் குறிப்பிட்ட சில, ஸ்தானங்கள், கிரகங்கள், கிரக சேர்க்கை, பார்வை, திதி, யோகம், கரணம், ஷட்பலம் ஆகிய காரணிகளை வைத்து தனம் எனும் பணம் எப்படி ஒருவருக்கு சேருகிறது என்று கூற முடியும். எந்த ஜாதகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் யோகம் இருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது. எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவு என்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம். இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால் நிச்சயம் செல்வ வளம், தன பிராப்தி, பண மழை கொட்டும், மேலும் யோக பலம் குறைந்த ஜாதகங்கள், நீச்ச தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம் குறைந்த தசா நடக்கும் ஜாதகங்கள் அடிக்கடி சரிவை சந்திக்கும். வாழ்க்கைப் பாதை சகடயோகம் போல் மாறி, மாறி ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு சந்திர யோகம்.
இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த அமைப்பு இல்லாமல் குருவும், சந்திரனும் 6,8, ஆக சகடையாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவிவருகிறது.
ஒரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகத்தில் உள்ள சிறப்பான யோகம் பற்றி கூறுவார்கள்.ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது. ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரமாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்ன தான் காரணம் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்று நோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். இது போன்ற மாறுபட்ட பலனுக்கான காரணத்தை பார்க்கலாம்.
குரு
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரக மாவார். தலைமை சுப கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உயர்வுகளை வழங்கக் கூடியவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இவர் தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றிற்கு காரகன். ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். ஒரு ஜாதகத்தில் எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் தோஷம் விலகி விடும், குருவின் பார்வை பட்ட பாவக பலன் பெருகும். பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களுக்கும் குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். சுருக்கமாக ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறையை நிவர்த்தி செய்யும் சக்தி குருவிற்கு உண்டு. அத்துடன் ஒருவரின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் குருவின் பங்கு அளப்பரியது. குரு தனித்து இருப்பது நல்லதல்ல. அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறிகிறது.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான
பலன்களை எடுத்துரைப்பது
விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால்
ஏற்படும் வினைகளைத்
தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும்.
ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும்.
அதனால் தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம், திருமணப் பொருத்தம் பார்க்கிறோம், ஜாதகரீதியான தசை புத்தி மற்றும் கோட்சார பலன்கள் கணிக்கிறோம்.எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். ஒரு ஜாதகத்தில் விதிக்கு தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிக மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.
மனிதன் தன் வாழ்க்கையை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம்.சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால்,உள்ளுணர்வால் வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும்.அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது.
எனவே ஒரு ஜாதகத்தில் சந்திர பலம் மிக முக்கியம். ஒளி கிரகமான சந்திரனுடன் சம்பந்தம் சுபத்துவம் பெற்ற குருவால் ஏற்படும் யோகங்கள்.
குரு சந்திரயோகம்
குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவின் பார்வை பதியக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலோ குரு சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகம் இருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ், அழியா செல்வம், செல்வாக்கு, காரிய சித்தி, சமுதாயத்தில் உயர்ந்த பதவி தேடி வரும்.
கெஜகேசரி யோகம்
சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,10-ம் இடங்களில் குரு இருந்தால் அது கெஜகேசரி யோகமாகும். எதிரிகளை சிங்கம் போல எதிர் கொண்டு அழிக்கக்கூடியவர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் சொன்னதை செய்யக்கூடிய செயலாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாக்கும் வெற்றி தரும் யோகமாகும்.
சகடையோகம்
சந்திரனுக்கு 6,8-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அம்ச யோகம்
குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்றயாவும் சிறப்பாக அமையும்.
குரு சந்திர யோகம் யாருக்கு வரம்?
குருவினால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும் அனைவராலும் பேசப்படும் யோகம் குரு சந்திர யோகம். பொதுவாக யோகம் என்ற சொல்லுக்கு கிரகச் சேர்க்கை என்று பொருளாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
குரு சந்திர யோக அமைப்பு உள்ள சிலர் யோகத்தையும் பலர் வாழ்க்கையில் தடுமாற்றத்தையும் சந்திப்பதை நடை முறையில் பார்க்கிறோம். அதாவது குருச் சந்திர யோகம் பலருக்கு அவயோகத்தையும் தருகிறது. சகடை யோகம் பலர் வாழ்வில் பெரிய திருப்பு முனையை தந்தும் உள்ளது.
ஜாதகத்தில் இருக்கும் யோகம் ஏன் வேலை செய்யவில்லை ஜோதிடத்தில் எந்த ஒருவிதியும் அனுபவப்பூர்வமாக ஒத்துவந்தால் மட்டுமே ஏற்க வேண்டும். குரு சந்திர யோகம் பலன் தர ஒரு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் சுபத்துவம் பெறுவது அவசியம். கிரகங்கள் எங்கே இருக்கிறது என்பதை விட எப்படி இருக்கிறது, என்ன ஆதிபத்தியம் பெறுகிறது என்பது மிக முக்கியம். இந்த அமைப்பில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பது சிறப்பு. குரு ஆட்சி உச்சம் திக்பலம் போன்ற அமைப்புகளில் இருப்பது மேலும் சிறப்பு.குருவும், சந்திரனும் நீசம் பெறாமல் அசுப கிரக சம்பந்தம் பெறாமல் இருப்பது நல்லது. அத்துடன் அதாவது சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருக்கும் கெஜகேசரியோகமும், குருச் சந்திர யோகமும் சில லக்னங்களுக்கு கெடுதலையே தருகிறது. அதனால் யோகம் இல்லாத சாதாரண வாழ்க்கையே வாழுகிறார்கள். அதே போல் குருவும் சந்திரனும் 6,8 ஆக சகடை அமைப்புள்ள எத்தனையோ நபர்கள் வி.ஐ.பி.யாக நல்ல பொருளாதாரத்துடன் வலம் வருகிறார்கள்.ஒருவரின் பொருளாதாரம், யோகம், அதிர்ஷ்டம் போன்றவைகள் குருசந்திர யோகம், கெஜகேசரி யோகம் சகடை அமைப்புகளால் மட்டும் தீர்மானிக்கபடுவதில்லை.
அதே போல ஒருவர் வாழ்க்கையின் வளர்ச்சியை லக்னம், லக்னாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் அடுத்தடுத்த தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன. அதனால் இது அனுபவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதியே. எனவே குருச்சந்திர யோகம், சகடை மட்டுமே ஒருஜாதகத்தின் பலனை தீர்மானிக்காது. மேலும்
லக்ன ரீதியாக குருவும் சந்திரனும் பெற்ற ஆதிபத்தியமே குரு சந்திரனால் ஏற்படும் யோகம், அவயோகத்தை தீர்மானிக்கிறது.
அதன்படி 12 லக்னத்தில் குரு சந்திர யோகத்தால் மீன லக்னத்தினர் மட்டுமே ஆதிபத்திய ரீதியாக அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள். மீன லக்னத்திற்கு குரு லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. பிற லக்னத்திற்கு ஒரு ஆதிபத்திய ரீதியாக சுப பலன் நடந்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக எதிர்வினை உண்டு. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.எத்தகைய கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பொதுவாக பலன் சொல்லக் கூடாது. லக்ன ரீதியான ஆதிபத்தியம், நின்ற வீடு, நட்சத்திர சாரம் போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். மேலும் கர்மா ரீதியாக குருச் சந்திர யோகத்தை உற்று நோக்கினால் குரு கால புருஷ 9-ம் அதிபதி. தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் கால புருஷ 4-ம் அதிபதி தாய் பற்றிக் கூறுமிடம். ஆக தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஏற்படும் கர்ம வினைப் பதிவின் தொடர்ச்சியே குரு சந்திரயோகம்.
பரிகாரம்:
பொருளாதாரத்தில் உன்னத நிலையை அடைய வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்கினால் மகத்தான வாழ்வு உண்டு. இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறியும் குரு சந்திர யோகம் இல்லாததால் வறுமை, கடன் இருப்பதாக நம்புபவர்கள் வியாழக்கிழமை காலை 11-12 மணி வரையான சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். வியாழக்கிழமை மட்டும் பெருமாள் நம்மை காணும்படியான அலங்காரத்தில் இருப்பார். பெருமாளின் கண் திறந்து இருப்பது நேத்ர தரிசனம் என்று பெயர். அன்று பெருமாளை தரிசித்தால் பொருள் குற்றம் அகன்று நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.