சிறப்புக் கட்டுரைகள்

உடலுக்கு உகந்த உணவுகள்

Published On 2025-11-17 11:57 IST   |   Update On 2025-11-17 11:57:00 IST
  • ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

மனித உடலானது பல்வேறு பணிகளை செய்து நமது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறது. இந்த உடலை இயக்குவதற்கு பல்வேறு உடல் பாகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த உடல் பழுதில்லாமல் சீராக செயல்பட சில உணவுமுறைகள் அவசியமாகும்...

இதெல்லாம் சாப்பிடுகிறீர்களா...?

கீரை, தயிர், புரோக்கலி, பூண்டு, பாதாம், இஞ்சி, எலுமிச்சை, காலிபிளவர், குடை மிளகாய், கேரட், தக்காளி, பட்டை இவையெல்லாம் அன்றாட உணவில் சேர்த்தால் தொப்பை குறைய வழி வகுக்கும்.

சில பழக்கங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்தினை அமைதியாகக் கொன்றுவிடும்.

கருப்பு காபி நல்லதுதான். அதற்காக காலை உணவினைத் தவிர்த்து வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது வயிற்றில் ஆசிட் உருவாக்கும். வயிற்றின் உள்ளே அரித்து விடும்.

கலோரி சத்து குறைந்த, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் கருப்பு காபி குடிக்கலாம்.

எல்லா எண்ணைகளும் அநேகமாக விதைகளில் எடுக்கப்பட்டது தான். இவை குடலை பாதித்து உடலில் வீக்கத்தினை ஏற்படுத்தும்.

நெய், ஆலிவ் எண்ணை, தேங்காய் எண்ணையினை அளவாக சேர்த்து கொள்வது நல்லது.

சர்க்கரை தவிர்க்கப்படலாம். பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். தூக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால் பாதிப்பிற்கு குறைவே இருக்காது.

அதிக சுறுசுறுப்பற்ற வாழ்க்கை தற்கொலைக்கு சமம்.

பப்பாயா: சற்று நகர்புறத்தினைத் தாண்டினால் வீட்டுக்கு வீடு பப்பாயா மரம் பார்க்க முடிகின்றது. பழங்கள் தரையில் கொட்டி கிடக்கின்றன. இதன் அருமையினை இன்னமும் உணராது இருக்கின்றனர்.

மலச்சிக்கல் நீக்கும். நோய் எதிர்ப்பு சக்திக் கூடும். முகம் பொலிவு பெறும். ஒரு சிறு கப் அளவு அன்றாடம் எடுத்துக் கொள்ளலாமே.

புரோகலி, கேரட், தக்காளி, வெள்ளரி, அன்னாச்சி நம் ஊரில் கிடைக்கும். இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்தாலே குடல் நன்கு இருக்கும்.

நம்ம ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முருங்கை கீரையினை வாங்காத நாடே இல்லை எனலாம். இந்தியாவிற்கு முருங்கை ஒரு பொக்கிஷம். உலக அளவில் 25 சதவீதம் நம் நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி ஆகிறது என குறிப்பிடப்படுகிறது. இதில் பாலை விட கூடுதலாக நான்கு மடங்கு கால்சியம், 3 மடங்கு அதிக பொட்டாசியம், 2 மடங்கு புரதம் என்று உள்ளது. தினம் இரண்டு கைப்பிடி கீரையினை ஏதாவது பதார்த்தத்தில் சேர்த்தால் போதும். அநேக குறைபாடுகள் நீங்கும்.

இயற்கை நமக்கு உதவிக் கொண்டேதான் இருக்கிறது

* மூட்டுகள் பலம் பெற அடிக்கடி சிலதுண்டுகள் அன்னாச்சி பழம் எடுத்துக் கொள்ளலாம்.

* கண் என்றாலே கேரட் என்று குழந்தை கூட சொல்லிவிடும்.

* ரத்த சோகைக்கு மாதுளை பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* கணையம் பலம் பெற சில வேக வைத்த சர்க்கரை வள்ளி துண்டுகளை எடுத்து வரலாம்.

* இருதய பலம் பெற மருத்துவர் அறிவுரை பெற்று தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில், அஜீரணமா? உப்பிசமா? நமக்குதான் இஞ்சி இருக்கே.

* மூளை சிறப்பாய் இயங்க 3.4 வால்நட் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

* கல்லீரல் சீர்பட-100 மில்லி பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

* நுரையீரல் உறுதிக்கு கருப்பு திராட்சை உதவும்.

சில உறுப்புகளுக்கு பிடிக்காத உணவுகள்

கல்லீரல்: மது, புகை கூடவே கூடாது.

இருதயம்: உடல் பருமன், கெட்ட கொழுப்புகளை நீக்கிவிட வேண்டும்.

சிறுநீரகம்: உப்பு அதிகம் கூடாது. ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், நொறுக்குத் தீனி இவைகளை தவிர்த்து விடுங்கள்.

குடல்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடலாம். சர்க்கரை உணவுகள் வேண்டாம்.

கணையம்: சர்க்கரை உணவுகளுக்கு 'நோ'

நுரையீரல்: வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம்.

கமலி ஸ்ரீபால்


 

எதை தவிர்ப்பது, எதை எடுத்துக் கொள்வது? விகிதாசார உணவு என்று சொல்லப்படுகின்றது. பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்கின்றது என்ற கூற முடியாது. குறிப்பாக சில உடல்நல, குடல் நல கோளாறுகள் இருக்கும்போது சில உணவுகள் வயிறு உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காற்று, ஒவ்வாமை, பசியின்மை, வயிற்று வலி என பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதில் சில உணவுகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பால்-பால் சார்ந்த உணவுகள்

சிலருக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். உணவை செரிக்க இயலாதபோது மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படலாம். ஆராக்கியமான உணவுப் பாதையில் சிறு குடல் லக்டேஸ் என்ற என்சைமை உருவாக்கி லக்டோஸ் சர்க்கரையினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகின்றது. சிலருக்கு இந்த லக்டோஸ் உடலில் உறிஞ்சப்படாமல் பெருங்குடலுக்கு செல்கின்றது. அங்குள்ள பாக்டீரியாவால் இது உடைபட்டு காற்று உருவாகின்றது. பிறகு காற்று, உப்பிசம், வலி, வயிற்றுப் போக்கு என வெளியேறுகின்றது.

பால்-பால் சார்ந்த உணவுகள் எலும்பின் பலத்திற்கு கால்சியம், வைட்டமின் டி என தந்து உதவுபவை. புரதச்சத்து கொண்டவை. எனவே டாக்டர் அவரவர் உடல்நிலைக்கேற்ப இதன் அளவை குறைத்து கொடுக்க முயற்சிப்பார். சிலருக்கு தயிர் ஒத்துக் கொள்ளும். இருப்பினும் மருத்துவர் ஆலோசனை பெற்று செயல்படுவது ஆரோக்கியம் அளிக்கும்.

பொரித்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள்

* கொழுப்பு உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி ஆசிட்டை அதிகப்படுத்தி வலி, எரிச்சல், எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். வயிறு உப்பிசம், காற்று உருவாகும். கடும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

* இவ்வகை உணவுகளுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புடைய அசைவ உணவுகள், கிரில், பேக்கிங் முறையில் சமைக்கலாம். கொட்டை வகை, விதை வகை, ஆலிவ் எண்ணை இவற்றினை அளவாக சேர்க்கலாம். மீன் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* சிலருக்கு முட்டைகோஸ், புரோகலி, முள்ளங்கி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இவை நல்ல நார்சத்து, வைட்டமின்கள் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

* பொதுவில் இதனை அடியோடு நீக்காமல் அளவு குறைத்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

* சிலருக்கு உப்பு சேர்த்த ஸ்நாக்ஸ், சிப்ஸ் போன்றவையும் கேக், குக்கிஸ், துரித உணவுகள், குளிர் பானங்கள் இவை ஒத்துக் கொள்ளாது. பல பிரச்சினைகளை தரும். உண்மையில் இவைகளை அடியோடு நீக்கி விடுவது நல்லது.

* பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், நார்சத்து உணவுகளே நல்லது. தீர்வும் ஆகும்.

பருப்பு வகைகள்

சிலருக்கு பருப்பு கலந்த உணவு உடனடியாக வயிறு உப்பிசம் கொடுக்கும். செரிக்காது. அவைகளின் அதிக நார்சத்து, ஒலிகோ சாக்கரைட் என்ற ஒருவித கார்போஹைடிரேட் செரிமானத்தை கடினமாக்குகின்றது. அதிலும் ஏற்கனவே ெசரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு கூடுதல் படுத்துகின்றது. ஆகவே தான் நம் முன்னோர்கள் சரியான அளவிலேயே பருப்பினை சேர்த்த உணவினைத் தயாரித்தார்கள்.

சோயா, கடலைப் பருப்பு வகைகளை குறைத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம். பயத்தம் பருப்பு பயன்படுத்தலாம். இட்லி அநேகருக்கு நன்கு ஒத்துக் கொள்கின்றது.

* காபி, டீ போன்றவை பலருக்கு அசிடிடி பிரச்சினையை ஏற்படுத்தும். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று புரதசத்து, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

* காரசாரமான மசாலா உணவு ஏற்படுத்தும் பிரச்சினைகளை அநேகர் அறிவர். புதினா, கொத்தமல்லி, சீரகம், சோம்பு, அன்னாசி பூ, பட்டை, ஏலக்காய், இஞ்சி இைவ குடல் ஆரோக் கியத்திற்கு நன்கு உதவும்.

மது, புகை இவை ஒத்துக் கொள்ளவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அடியோடு ஒதுக்கி விடலாமே. எதனையும் மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாழ்க்கை கற்று தரும் பாடங்கள்

வாழ்க்கையே பாடம்தான். இதனை மற்றவர் அனுபவங்கள் மூலமும் நம் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம். நான் படித்த சிலரின் அனுபவ பாடங்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

* வாழ்க்கை ஒன்றும் ஆஹா, ஓஹோ என்று இல்லை. இருப்பினும் அநேகர் சொல்வது பரவாயில்லை. ஓடுது என்பதுதான்.

* சந்தேகமா இருக்கா! அடுத்த நகர்வை சற்று கம்மியா நிதானமா செய்யுங்க.

* முதுமை வரும் பொழுதுதான் தெரியும். வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று. இதில் மற்றவரை வெறுப்பதிலேயே காலத்தினை வீணடிக்க வேண்டாம்.

* உலகில் யாருக்கும் உங்களைப் பற்றி மட்டுமே பேசவும், நினைக்கவும் நேரம் கிடையாது. ஆகவே வாழ்வினை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

* எல்லா வாக்குவாதங்களிலும் நீங்களே ஜெயித்தவராக இருக்க முடியாது. உங்கள் ஒப்புதல் இன்மையைக் கூறினாலே போதும்.

* அந்தந்த மாத செலவுகளை அந்த மாதமே முடித்து விட வேண்டும்.

* ஓய்வு கால தேவைக்காக சம்பாதிக்க ஆரம்பித்த முதல் மாதத்தில் இருந்து ஆரம்பித்து விடுவீர்கள்.

* கடந்த கால வலிகளோடு அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து நிகழ் காலத்தினை குழப்பிக் கொள்ள வேண்டாமே.

* பிறரோடு உங்களை ஒப்பிட வேண்டாம். அவர்கள் என்னவெல்லாம் கஷ்டப்படுகின்றார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

* வாழுவதற்காக பிசியாகுங்கள்.

* உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

* அதிகம் மனதில், வாழ்க்கையில் வலி ஏற்படுத்தியவர்களைக் கூட மனதார மன்னிக்க முயற்சி செய்யுங்கள்.

* அதிசயங்கள் நடக்கலாம். நம்புங்கள். மூழ்கி விடாதீர்கள்.

* காலம் எல்லாவற்றினையும் ஆற்றும்.

* முதுமை வரும் பொழுது நாமே நம் வேலைகளை செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர்.

* கேட்டால் மட்டுமே கிடைக்கின்றன.

Tags:    

Similar News