சிறப்புக் கட்டுரைகள்

மங்களம் உண்டாகும் மங்களாம்பிகை வழிபாடு

Published On 2023-12-14 16:16 IST   |   Update On 2023-12-14 16:16:00 IST
  • ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் எந்த அளவுக்கு நேரத்தை செலவிட்டு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
  • ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு பெயர் பெற்று கொடுத்தது இந்த ஆலயம்தான். 30 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றில் சிறந்து விளங்குகிறது.

இத்தலத்து ஆதிகும்பேஸ்வரர் சுயம்பு வடிவானவர். இவர்தான் உலகத்து உயிர்களின் தோற்றத்துக்கு காரணமாக கருதப்படுபவர். எனவே கும்பகோணம் ஆலயங்களை தரிசனம் செய்ய செல்லும்போது இந்த ஆலயத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

ஏனெனில் இந்த தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு மூர்த்தமும் தனித்தனி சிறப்புகள் கொண்டவை. நிகரற்ற பலன்களை தரக்கூடியவை. எனவே ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் எந்த அளவுக்கு நேரத்தை செலவிட்டு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

குறிப்பாக இந்த தலத்தில் உள்ள அம்பிகை மிகுந்த சக்தி வாய்ந்தவள். மங்களாம்பிகை என்று அழைக்கப்படும் இந்த அம்பிகைக்கு மங்கள நாயகி, மந்திரபீடேஸ்வரி, வளர்மங்கை, மந்திர பீடநலத்தாள் என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு.

மங்களாம்பிகை சக்தி பீடங்களில் இருக்கும் அம்பிகைகளில் தனித்துவம் வாய்ந்தவள், முதன்மையானவள். திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு தனது உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். அதுபோல கும்பகோணத்தில் உள்ள இந்த தலத்தில் சிவபெருமான் தன்னுடைய 36ஆயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கி உள்ளார்.

ஏற்கனவே மங்களாம்பிகை தனக்குரிய 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுடன் வீற்றிருக்கிறாள். சிவபெருமான் கொடுத்த 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக இந்த தலத்தில் இருக்கிறாள். தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் அம்பாள் இந்த அளவுக்கு மந்திர சக்திகளுடன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மந்திர சக்திகளையும் கொண்டு இருப்பதால்தான் மங்களாம்பிகைக்கு மந்திர பீடேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டது.

அம்பாளின் உடல் பாகம் கால் பாதம் நகம் முதல் தலை உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கிறாள். மற்ற தலங்களில் அம்பாளை ஒரே ஒரு சக்தியுடையவளாக மட்டுமே காண முடியும். ஆனால் கும்பகோணத்தில் மங்களாம்பி கையை 51 சக்தி வடிவங்களாக பார்க்க முடியும். இத னால்தான் சக்தி பீடங்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக மங்களாம்பிகை பீடம் திகழ்கிறது.

தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து வகை மங்களத்தையும் மங்களாம்பிகை தருகிறாள் என்பது ஐதீகம். தன்னை வணங்குபவர்களின் நோய்களை தீர்ப்பதால் மங்களாம்பிகைக்கு "நோயறுக்கு பரை" என்ற பெயர் உண்டு. அதுபோல தன் திருவடிகளை அடைந்தவர்களுக்கு மந்திர பீடத்தில் இருந்து அருள்வதால் மங்களாம்பிகைக்கு "மந்திர பீட நலத்தாள்" என்ற பெயர் ஏற்பட்டது.

திருஞானசம்பந்தர் தனது பாடல்களில் மங்களாம்பிகையை "வளர்மங்கை" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மங்களாம்பிகையை மனதார நினைத்தாலே வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மங்களாம்பிகை அலங்கார காட்சியை எவ்வளவு பார்த்தாலும் சலிப்பே வராது. மஞ்சள் பட்டு உடுத்தி, முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகமிட்டு அவள் அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். திருமணம் கை கூட விரும்புபவர்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூ கொடுத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள், கல்வியில் மேன்மை பெற நினைப்பவர்கள், பணக்காரனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மங்களாம்பிகையை சரண் அடைந்தால் நிச்சயம் நல்லது நடக்கும். ஆண்டு தோறும் ஆவணி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை மங்களாம்பிகைக்கு புஷ்ப அபிஷேகம் நடத்தப்படும்.

ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ உள்பட பல்வேறு வகையான மலர்களை கூடை கூடையாக கொண்டு சென்று மங்களாம்பிகைக்கு சமர்ப்பிப்பார்கள். இந்த புஷ்ப அபிஷேக பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மங்களாம்பிகையை வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். திருமணம் ஆன பெண்கள் மங்களாம்பிகைக்கு நடக்கும் புஷ்ப அபிஷேகத்தை கண்டு வழிபட்டால் கணவரின் அன்பை அளவுக்கு அதிகமாக பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இவை மட்டுமல்ல.... மங்களாம்பிகையை மனம் குளிர வழிபட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை நூல்கள் பலவாறாக விவரித்துச் சொல்கின்றன.

மாலை நேரங்களில் மங்களாம்பிகையை வணங்கினால் எல்லாப் பலன்களும் பெறலாம். பூதம், பிரேதம், பைசாசம் முதலான உபாதைகளில் இருந்து நீங்கலாம்.

வெள்ளிக்கிழமையில் ஒரே ஒரு முறை தரிசித்து வணங்கினால் எல்லா வகையான தோஷங்களும் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மங்களாம்பாளைத் தரிசித்த மாத்திரத்தில் எல்லா வகையான நோய்களும் நீங்கும். எனவே அவளுக்கு 'ருக்விபேதினி' என்ற பெயரும் உண்டு.

பக்தர்கள் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யக் கூடியவள். அவர்கள் கேட்கும் பொருட்களை அளிப்பதால் அம்மைக்குச் 'சர்வேப்சிதப்ரதா' என்ற பெயரும் உண்டு.

ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் 108 செம்பருத்திப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி ஸ்ரீமங்களாம்பி கைக்கு ஒரே ஒரு தடவை அணிவித்தால் போதும். அவர்கள் குடும்பம் வாழையடி வாழையாக விருத்தியாகும்.

செம்பருத்திப் பூவினால் கிரீடம் செய்து ஒரு முறை வெள்ளிக்கிழமையில் அர்ப்பணித்தால் அவர்கள் குபேரனுக்குச் சமமான செல்வம் பெறுவார்கள். தெய்வீகக் குணங்களையும் அடைவார்கள்.

மஞ்சள் குங்குமத்தால் மங்களாம்பிகையின் பாதங்களின் நுனியில் சிறிது சிறிதாகத் தனித்தனி யாகச் சகஸ்ர நாமத்தாலோ, அஷ்டோத்திரத்தாலோ அர்ச்சித்தால் போதும்; மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் செய்ய இயலாவிட்டால் பிற நாட்களிலும் இவற்றைச் செய்யலாம். பலன் நிச்சயம் உண்டு.

பால் குடங்களில் மங்களாம்பிகையை ஆவாகனம் செய்து பூஜித்துக் காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்பவர்கள் பரம சிவனாகவே ஆகிவிடுவார்கள்.

பெண் ஜாதகமானாலும், ஆண் ஜாதகமானாலும் ஜனன காலத்தில் செவ்வாயும், சூரியனும் சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தொல்லை தான். ஆண் ஜாதககாரர்கள் தடைகள் பல கடக்க வேண்டிவரும். பெண் ஜாதககாரர்களோ பெரும்பாடுபட வேண்டியிருக்கும்.

பெண் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் ஒன்று கூடி எந்த ராசியில் இருந்தாலும் அது கடுமையான மாங்கல்ய தோஷம் என்று கருதப்படு கிறது. வாழ்க்கையில் அவள் கடுமையான கஷ்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜோதிடர்கள் பயம் காட்டுவார்கள். ஆனால் மங்களாம்பிகையை சரண் அடைந்துவிட்டால் அந்த பயம் தேவையே இல்லை.

செவ்வாயும், சூரியனும் சேர்ந்து இருப்பதால் ஏற்படும் தோஷத்தில் இருந்து நீங்க மங்களாம்பிகைக்கு செம்பருத்தி மாலை சூட்ட வேண்டும். இதனால் வம்சவிருத்தி ஏற்படும். எனவே கும்பகோ ணத்துக்கு செல்லும் போது பெண்கள் மறக்காமல் ஏதாவது பூக்கள் வாங்கி மங்களாம்பிகைக்கு சூடச்செய்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தையும் நீக்கிக் கொள்ள முடியும்.

கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை காட்சியளிக்கி றாள். வலது மேல் கரத்தில் அமுத கலசத்தை ஏந்தி உள்ளாள். இடது மேல் கரத்தில் அட்ச மாலை வைத்துள்ளாள். வலது கீழ் கரம் அபய கரமாகவும், இடது கீழ் கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்து உள்ளன. இதன் மூலம் மங்களாம்பிகை சர்வ சக்தி படைத்தவள் என்பதை அந்த தோற்றம் பிரதிபலிக்கிறது.

ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் கும்பேஸ்வரரை தனித்து வலம் வர முடியாது. மங்களாம்பிகையை சேர்த்துதான் வலம் வர முடியும். அதற்கேற்ப ஆலய பிரகார அமைப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் ஈசனுக்கு நிகரான ஆற்றலுடன் இந்த தலத்தில் அம்பிகையும் அருள்பாலித்து வருவதை உணர முடியும்.

இந்த சிறப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தெளிவுபட கூறியுள்ளார். அவர் மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியம் பாடி உள்ளார். அதில் மங்களாம்பிகையை ஒரு தடவை பார்த்து தரிசித்தாலே போதும் பிறவிகடலில் மூழ்கி தினம் தினம் படும் துயரத்தில் இருந்து விடுதலை பெற முடியும் என்று கூறியுள்ளார். மங்களாம்பிகைக்கு உரிய முறையில் பூஜை செய்து வழிபட்டால் மனம் பேரானந்தம் கொண்டு கடல் அலைகள் போல ஆர்ப்பரிக்கும் என்று சொல்கிறார்.

மங்களாம்பிகையை சரண் அடைந்து அவள் புகழ் பாடினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி மங்களாம்பிகை சிறப்பை சொல்லிக் கொண்டு போகலாம். அன்பான குடும்பம், அழகான கணவர் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் அவசியம் மங்களாம்பிகை அருள் பெற வேண்டும். மங்களாம்பிகை சன்னதி முன்பு அமர்ந்து தியானம் செய்தால் மிகப்பெரிய மாற்றம் மனதில் ஏற்படும் என்பது அனுபவசாலிக ளின் அசைக்க முடியாத நம்பிக்கை. கும்ப கோணம் செல்லும் போது உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கக் கூடும்.

மங்களாம்பிகை அருளால் நல்ல கணவர் கிடைத்தால் மட்டும் போதுமா? கணவன்-மனைவி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அல்லவா? அதற்கு கும்பகோணம் அருகே உள்ள திருசத்திமுற்றம் தலத்துக்கு சென்று வழிபட வேண்டும். அந்த தலம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News