சிறப்புக் கட்டுரைகள்

மனம் என்னும் ஆலயம்

Published On 2023-12-08 16:16 IST   |   Update On 2023-12-08 16:16:00 IST
  • மனத்தைப் பொறுத்தவரை அதற்குத் தீய பழக்கம் நல்ல பழக்கம் என்ற வேறுபாடு ஏதுமில்லை.
  • `நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்` என்கின்றன வேதங்கள்.

மனமே முருகனின் மயில் வாகனம் எனக் கவிதை எழுதினார் தில்லானா மோகனாம்பாள் நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு.

மயிலில் முருகன் அமர்கிறான். அதனால் முருகப் பெருமானை மயில்வாகனன் என்கிறோம். அடியவர் மனத்திலும் முருகன் அமர்கிறான். அப்படியானால் மனமும் அவனது மயில் வாகனம் போன்றதுதானே என்கிறார் அவர்.

`மனம் இறைவன் வாழும் கருவறை. உடல் அவன் வாழும் ஆலயம்` என்கிறார் திருமந்திரம் எழுதிய சித்தரான திருமூலர்.

`உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.`


செடிகொடிகளில் பூத்த மலர்களால் அல்ல, மனத்தில் தோன்றும் எண்ணம் என்னும் மலர்களால் இறைவனை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியான கவிஞர் சுவாமி விபுலானந்தர்.

`வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த

மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளை நிறப் பூவுமல்ல,

வெறெந்த மலருமல்ல,

உள்ளக் கமலமடி உத்தமனார்

வேண்டுவது!`

மனத்தில் குடிகொண்ட இறைவனை எப்படி அர்ச்சிப்பது? மனத்தில் தோன்றும் எண்ண மலர்களால் அவனை அர்ச்சித்து வழிபடுவதே இறைவனை நாடும் நெறிகளில் உயரிய நெறி.

இறைவழிபாட்டில் உயர்ந்த வழிபாடு என்பது, மனத்தால் இறைவனைத் துதிப்பதே. புறக் கிரியைகள் முக்கியமல்ல. அக வழிபாடுதான் முக்கியமானது.

63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் அப்படித்தான் சிவபெருமானை வழிபட்டார். மனக்கோவில் கட்டிய மகான் அவர்.

காடவர்கோன் கனவில் தோன்றி அவன் கட்டிய கற்கோவிலின் கும்பாபிஷேகத் தேதியை மாற்றி வைக்கச் சொன்னார் சிவபெருமான். அதே நாளன்று, பூசலாரின் மனக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக பூசலாரின் மன ஆலய கர்ப்பகிரகத்தில் எழுந்தருளினார் இறைவன்.

பூசலார் இருப்பிடத்தைத் தேடிவந்து வணங்கி அவர் ஆசியைப் பெற்றான் மன்னன் காடவர்கோன்.

`நின்றவூர் பூசல் அன்பன்

நெடிதுநாள் நினைந்து செய்த

நன்றுநீ டால யத்து

நாளைநாம் புகுவோம் நீயிங்கு

ஒன்றிய செயலை நாளை

ஒழிந்துபின் கொள்வாயென்று

கொன்றைவார் சடையார் தொண்டர்

கோவில் கொண்டருளப் போந்தார்!`

என்று இந்நிகழ்ச்சியை விவரிக்கிறது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணப் பாடல்.

சென்னை அருகேயுள்ள திருநின்றவூரில் வாழ்ந்தவர் பூசலார் நாயனார். மனக் கோவில் கட்டிய அவருக்கு அந்த ஊரிலேயே ஒரு கற்கோவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

இருதயாலீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் அந்தச் சிவன் கோவிலில் சிவனின் மூல ஸ்தானத்தில் பூசலார் நாயனாரின் சிலை உள்ளது.

சிவன் மட்டுமா, கண்ணனும் அடியவர் மனத்தில் குடியிருப்பவன்தான்.

பரோடாவில் குதிரை வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார் கிருஷ்ண பக்தரான அரவிந்தர். திடீரென வெறி பிடித்தாற்போல் குதிரை தறிகெட்டு ஓடியது. சாலையில் நடந்துகொண்டிருந்த மக்கள் பீதியடைந்து மிரண்டு விலகி ஓடினார்கள்.


மலைப் பிரதேசத்தில் பெரும் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டி மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழும் நிலை உருவாகியது. மலை முகட்டில் இரு கால்களையும் தூக்கியவாறு பாயத் தயாராயிருந்தது குதிரை.

வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தார் அரவிந்தர். கண்மூடி மனத்திற்குள் தன் இஷ்ட தெய்வமான கண்ணனைத் துதிக்கலானார். மூடிய விழிகள் மூடியபடி இருக்க, அவர் விந்தையான ஓர் அகக் காட்சியைக் காணப் பெற்றார்.

அவர் மனத்தில் குடியிருந்த கண்ணன் கையில் சாட்டையோடு மனத்தை விட்டு வெளியே வந்தான்! சாட்டையைச் சொடுக்கிக் குதிரையை அதட்டி நிறுத்தினான்.

மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டிய கண்ணனுக்கு ஒரே ஒரு சாதாரண வண்டிக் குதிரையை அடக்குவது சிரமமா என்ன?

குதிரை தூக்கிய கால் தூக்கியபடி நின்றவாறே மெல்லப் பின்வாங்கியது. வண்டிக்கு எந்தச் சேதமும் இல்லாமல் அமைதியாகத் தன் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கியது.

குதிரையை அடக்கியபின் கண்ணன் புன்முறுவல் தவழ மீண்டும் அரவிந்தரின் உள்ளத்தில் வந்து ஒய்யாரமாக அமர்ந்து கொண்டான்!

தன் உள்ளத்தில் குடிகொண்ட கண்ணன் செய்த ஜாலத்தைப் பார்த்து வியந்த அரவிந்தர், எந்தச் சோதனையில் இருந்தும் கண்ணன் தன்னைக் கட்டாயம் காப்பாற்றுவான் என அப்போதுதான் மன உறுதி பெற்றார்.

அவர் பெற்ற அந்த மன உறுதி அவர் வாழ்நாள் முழுவதும் நீடித்தது. எந்தச் சூழ்நிலையிலும் கண்ணன் தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் எதற்கும் கலங்காதிருக்கும் மனநிலையை அவரிடம் தோற்றுவித்தது.

பின்னர் அவர் தீவிர கிருஷ்ண பக்தியில் தோய்ந்ததும், சிறையில் கண்ணனைக் குறித்துத் தவமிருந்ததும் அகக் கண்ணால் கண்ட கண்ணனைப் புறக் கண்ணாலும் கண்டதும், தான் நேரில் கிருஷ்ண தரிசனம் பெற்ற உண்மையை அவர் உத்தர்பாரா என்ற இடத்தில் மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்ததும் அரவிந்தர் வரலாறு சொல்லும் செய்திகள்.

மனத்தை ஆராய்கிறபோது மனத்திலுள்ள மாசுகள் மறைகின்றன. மனத்துக்கண் மாசிலன் ஆதல்தான் ஆன்மிகம். மாசற்ற மனத்தில் இறைவன் தானே விரும்பிக் குடிகொள்கிறான்.

மனத்தை ஆராய்ந்து அதை மாசில்லாததாக மாற்றிக்கொள்ளும் நெறியையே `அகத்தாய்வு` என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வேதாத்ரி மகரிஷி. இந்த நெறியை `மனவளக் கலை` என ஒரு கலையாகவும் அவர் குறிப்பிடுகிறார்.


தத்துவச் சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் மனித மனத்தை ஆராய்ந்தவர்களில் மிக முக்கியமானவர். அவரது கருத்துகளால் பெரிதும் கவரப்பட்டார் சுதந்திரத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை.

அந்தச் செக்கிழுத்த செம்மல், கோவையில் சிறைப்பட்டிருந்த போது, ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களைத் தாமே விரும்பித் தமிழில் மொழிபெயர்த்தார்.

`அகமே புறம், மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், மெய்யறிவு` என்பன போன்ற தலைப்புகளில் வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் சின்னஞ்சிறு புத்தகங்கள் மனித மனம் குறித்த ஏராளமான உண்மைகளைப் பேசுகின்றன. பயில்வார் மனத்தை மேம்படுத்துகின்றன.

தண்ணீரின் குணம் மேலிருந்து கீழ்நோக்கிச் சரிவது. நெருப்பின் குணம் கீழிருந்து மேல்நோக்கி எரிவது.

தண்ணீருக்கும் நெருப்புக்கும் இப்படி இயற்கைத் தன்மை இருப்பது மாதிரி மனத்திற்கும் ஓர் இயற்கைக் குணம் உண்டு. அது என்ன தெரியுமா? மனத்தின் குணம் பழக்கத்திற்கு அடிமைப் படுவது.

இந்த அடிமைப்படும் குணம் மனத்திற்கு இருப்பதால்தான் பலர் மதுவுக்கும் சிகரெட்டிற்கும் கஞ்சாவிற்கும் பான்பராக்கிற்கும் இவைபோன்ற இன்னும் பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை.

மனம் பழக்கங்களுக்கு அடிமையாகும் என்பது உண்மைதான். ஆனால் மனத்தைப் பொறுத்தவரை அதற்குத் தீய பழக்கம் நல்ல பழக்கம் என்ற வேறுபாடு ஏதுமில்லை. தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போலவே ஒருவன் முயன்றால் நல்ல பழக்கங்களுக்கும் அடிமையாகலாம்.

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவன், தொடர்ந்து முயற்சி செய்தால் விரைவில் மது குடிக்காமல் இருக்கும் பழக்கத்திற்கும் அடிமையாகலாம்!

இதென்ன விந்தை என்று தோன்றுகிற தல்லவா? இது விந்தையல்ல, உண்மை.

உதாரணமாக நாள்தோறும் கடிகாரத்தில் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். ஒரு வாரம் அப்படி அலாரம் வைத்து எழுந்துகொண்டால், எட்டாம்நாள் நீங்கள் அலாரம் வைக்காமலே சரியாக ஐந்து மணிக்கு எழுந்து கொள்வீர்கள்.

காரணம் காலை ஐந்து மணிக்கு எழும் நல்ல பழக்கத்திற்கு உங்கள் மனம் அடிமையாகிவிட்டது என்பதுதான்.

மனத்தைப் பொறுத்தவரை அதற்கு நல்ல பழக்கம் தீய பழக்கம் என்ற வேறுபாடு எதுவுமில்லை. அது எந்தப் பழக்கமானாலும் அதற்கு அடிமையாகக் காத்துக் கொண்டிருக் கிறது. நாம்தான் நல்ல பழக்கங்களை அதற்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

ஜேம்ஸ் ஆலன் கண்டுபிடித்த மனம் பற்றிய உண்மைகளில் அது பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியது என்ற உண்மை மிக முக்கியமானது.

`நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்` என்கின்றன வேதங்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் பட்டுப்பூச்சி கதை சிந்தனைக்குரியது. ஊர்ந்து செல்லும் கூட்டுப் புழு தன்னை ஓயாமல் பறக்கும் பட்டுப்பூச்சி என்றே நினைக்கிறது. அந்த நினைப்பைப் பிறர் தகர்த்துவிடாமல் இருக்க அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக் கொள்கிறது.


குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது கூட்டை உடைத்துக் கொண்டு, கூட்டுப் புழுவாய் அல்ல, பட்டுப் பூச்சியாகவே வான வெளியில் பறந்து செல்கிறது.

நற்குணங்களே வடிவான இறைவனை ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது நாமும் நற்குணங்களை அடையப் பெறுகிறோம். இறைவனைச் சிந்தித்த அடியவர்கள் இறைவனாகவே ஆனதும் இப்படித்தான்.

இறைவனை எப்போதும் நினைக்கும் பழக்கத்திற்கு நம் மனத்தை நாம் அடிமையாக்கி விட்டால் போதும். நம் மனத்தில் குடியிருக்கும் இறைவன் நம்மைத் தீய நினைவுகள் அண்டாதவாறு காப்பாற்றுவான்.

மனம் மாசில்லாததாக ஆகும். மாசில்லாத மனம் நம் வாழ்வில் அற்புதங்களைத் தோற்றுவிக்கும்.

மனத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். நல்ல எண்ணங்களையே எண்ணுவோம். இறைவனை நம் மனத்தில் குடியமர்த்துவோம். அதன் பயனாய் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News