- பூமாதேவி இங்குள்ள துளசி வனத்தில் அவதரித்ததால் இந்த பகுதிக்கு துளசிவனம் என்ற பெயர் ஏற்பட்டது.
- உப்பு கலந்த எந்த உணவு பொருளையும் ஆலயத்துக்கு எடுத்து வரக்கூடாது என்பது மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் சுமார் 2000 ஆண்டுகளை கடந்த மிக மிக பழமையான ஆலயங்கள் பல உள்ளன. அதில் தனித்துவமான வைணவ தலமாக திகழ்வது ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியில் ஒப்பிலியப்பன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்துக்கு தென் திருப்பதி என்ற சிறப்பும் உண்டு.
ஆதிகாலத்தில் இந்த ஊருக்கு திருவிண்ண நகரம் என்ற பெயர் இருந்தது. 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மார்க்கண்டேய முனிவரின் தவத்தினால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து தினமும் நித்யவாசம் செய்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமாதேவி இங்குள்ள துளசி வனத்தில் அவதரித்ததால் இந்த பகுதிக்கு துளசிவனம் என்ற பெயர் ஏற்பட்டது. இதன் பின்னணில் ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் பாக்கியத்தை லட்சுமிதேவி பெற்றிருக்கிறாள். இதை கண்ட பூமாதேவிக்கு தனக்கும் மகாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் அவள் தனது ஆசையை கூறினாள்.
இதை கேட்ட மகாவிஷ்ணு, "பூலோகத்தில் மார்க்கண்டேய மகரிஷி துளசிவனத்தில் தவம் இருந்து வருகிறார். நீ அங்கு சென்றால் என் மார்பில் இடம் பெறும் பாக்கியத்தை பெற வாய்ப்பு ஏற்படும்" என்று வரம் அளித்தார். அதை ஏற்று பூமாதேவி அந்த துளசி வனத்தில் வந்து பிறந்தாள்.
துளசி செடிகளுக்கு மத்தியில் பெண் குழந்தை கிடப்பதை கண்ட மார்க்கண்டேய முனிவர் மனம் மகிழ்ந்து அதை எடுத்து வளர்த்து வந்தார். அந்த பெண் குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக மணமகன் தேடி வந்தார்.
அப்போது மகா விஷ்ணு ஒரு விளையாடலை நடத்தினார். வயதான வேடத்துக்கு மாறிய அவர் கந்தலான உடைகளுடன் மார்க்கண்டேய முனிவரின் துளசி வனத்துக்கு வந்தார். அவரை வரவேற்ற முனிவர், "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அதற்கு முதியவர் வேடத்தில் இருந்து மகாவிஷ்ணு, "நான் மிகவும் சிறப்பான குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் இல்வாழ்க்கையில் துணை இல்லாமல் தவித்து வருகிறேன். நீங்கள் உங்கள் மகளுக்கு மணமகன் தேடுவதாக அறிந்தேன். உங்கள் மகளை எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்றார்.
இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. முதியவரை திட்டி வெளியே போகும்படி எச்சரித்தார். ஆனால் முதியவர் அதை கண்டு கொள்ளவில்லை. உங்கள் மகளை திருமணம் செய்து தந்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கேட்ட மார்க்கண்டேய முனிவருக்கு ஆத்திரம் அதிகரித்தது.
என்றாலும் முதியவர் தனது நிலையில் இருந்து மாறவில்லை. "உங்கள் மகளை திருமணம் செய்து தரவிட்டால் உங்கள் கண் எதிரிலேயே இதே இடத்தில் உயிரை விட்டு விடுவேன்" என்று மிரட்டினார். இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் பயந்து போனார். பொறுமையாக இருங்கள் எனது மகளிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்றார்.
மகளிடம் அவர் நடந்த விவரங்களை எல்லாம் தெரிவித்தார். இதை கேட்டதும் பூமாதேவிக்கு கோபம் வந்தது. வயதான ஒருவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்திற்காக வற்புறுத்தினால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றாள்.
இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் கலக்கம் அடைந்தார். வீட்டுக்கு வெளியே வந்து முதியவர் வேடத்தில் இருந்த விஷ்ணுவை சமரசம் செய்தார். ஆனால் அவர் சமரசம் ஆகவில்லை. உடனே மார்க்கண்டேய முனிவர், "எனது மகள் துளசிக்கு சரியாக சமைக்கக் கூட தெரியாது. உணவில் எந்த அளவுக்கு உப்பு சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவள் அறியாதவள். பக்குவம் இல்லாத அவளை உங்களுக்கு திருமணம் செய்து தருவது நன்றாக இருக்காது" என்றார்.
ஆனாலும் முதியவர் விடவில்லை. உங்கள் மகள் சமைத்து தரும் உப்பில்லாத உணவை சாப்பிட நான் தயாராக இருக்கிறேன் என்றார். இதை கேட்டதும் மார்க்கண்டேய முனிவர் ஆச்சரிப்பட்டார். அப்போது அவரது தவ ஆற்றலால் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. முதியவர் வேடத்தில் வந்திருப்பது பகவான் மகா விஷ்ணு என்பதை உணர்ந்தார்.
அடுத்த நிமிடம் முதியவர் வேடத்தில் இருந்த விஷ்ணுவை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். இதையடுத்து முதியவர் கோலத்தை மாற்றி மார்க்கண்டேய முனிவருக்கு மகாவிஷ்ணு காட்சி அளித்தார்.அதன் பிறகு துளசியை மகாவிஷ்ணுவுக்கு மார்க்கண்டேய முனிவர் திருமணம் செய்து கொடுத்தார்.
அப்போது அவர் விஷ்ணுவிடம் சில வரங்களை கேட்டு பெற்றார். "இறைவா நீயும் உனது மனைவியும் எப்போதும் இந்த தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் உனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்பு இல்லாமல் சமைக்கப்படும் உணவை ஏற்க வேண்டும்" என்று கேட்டார். இந்த வரங்களை அவருக்கு மகாவிஷ்ணு வழங்கி அருளினார்.
இந்த தலத்தில் பூமாதேவியை, மகாவிஷ்ணு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டதாக குறிப்புகள் உள்ளன. எனவே திருமணம் ஆகாதவர்கள் இந்த தலத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு அனைத்து உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. உப்பு கலந்த எந்த உணவு பொருளையும் ஆலயத்துக்கு எடுத்து வரக்கூடாது என்பது மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. உப்பை விலக்கியதால் இந்த தலத்து பெருமாளுக்கு உப்பில்லாத அப்பன் என்ற பெயர் ஏற்பட்டது.
இதனால் இந்த தலத்து மூலவருக்கு உப்பிலியப்பன் பெயர் சூட்டப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் ஒப்பிலியப்பன் என்று மாறி போனது.
இந்த தலத்தில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. பெருமாளுக்கு அருகில் பூமாதேவி மட்டுமே இருக்கிறாள். பூமாதேவியை ஒரு நிமிடம் கூட இந்த தலத்தில் பெருமாள் பிரிவதே இல்லை. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்துதான் செல்வார்கள். இதனால் கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இந்த தலம் மிக சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தானாக வரும் என்று சொல்கிறார்கள்.
துளசியை திருமணம் செய்து கொள்வதற்காக மகாவிஷ்ணு பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்றுதான் முதியவர் வேடம் எடுத்து வந்தார். அடுத்தடுத்த மாதங்களில் திருவோண நட்சத்திர நாட்களில் மார்க்கண்டேய முனிவரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பயனாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திர தினத்தன்று விஷ்ணுவுக்கும்-பூமாதேவிக்கு திருமணம் நடந்தது. எனவே இந்த தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படு கின்றது.
திருவோண நட்சத்திர நாளில் பகல் 11 மணிக்கு திருவோண தீபம் தரிசனம் செய்யலாம். இதற்காக சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்படும். அகண்ட தீபம் ஏற்றி வைக்கப்படும். அதோடு வால் தீபம் ஒன்றும் ஏற்றப்படும். இந்த தீப ஒளியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே ஒப்பிலியப்பன் ஆலயத்தில் திருவோண நட்சத்திர தினத்தன்று இந்த தீபத்தை தரிசனம் செய்வது மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த தீபத்தில் லட்சுமி இருப்பதால் அதை காண்பவர்களுக்கு வாழ்க்கையில் மிக சிறப்பான செல்வ செழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர நாளில் பகல் 11 மணிக்கு திருவோண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே திருவோண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குரு வாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண தினத்தன்று பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இதனை 9 நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடுகிறார்கள். தவிர ராம நவமி உற்சவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் பூமாதேவியை ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று மணந்து கொண்டதால் ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்த தலத்தில் உள்ள தீர்த்தத்தில் இரவு-பகல் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். மார்க்கண்டேயர் வசித்த தலம் என்பதால் இங்கு வழிபடுபவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் தங்க குடம் கொண்டு தான் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 7 கால பூஜை நடத்தப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திம், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.
எனவே கும்பகோணத்துக்கு யாத்திரை செல்பவர்கள் இதை மனதில் கொண்டு திருவோண நட்சத்திரம் வரும் நாட்களுக்கு ஏற்ப தங்களது பயணத்தை அமைத்து கொண்டால் ஆலயத்துக்கு சென்ற மாதிரியும் இருக்கும். உண்மையான பலன்களை பெற்று வந்த மாதிரியும் இருக்கும்.
அது போல கடன் இல்லாமல் வாழ வேண்டியது மிக, மிக முக்கியமானதாகும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதில் இருந்து மீள வேண்டுமானால், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சரபரமேஸ்வரரை வழிபட வேண்டும். இதுபற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.