சிறப்புக் கட்டுரைகள்

நேரம் நல்லா இருக்கு!

Published On 2023-10-19 16:40 IST   |   Update On 2023-10-19 16:40:00 IST
  • முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம்? என்று கேட்போம்.
  • உழைத்தால் எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்பே வெற்றிக்கனி நம் கரங்களில் கனிந்து நிற்கும்!

நேரத்தை நேசிக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியும் சரியான நேர நிருவாகத்தின் அடிப்படையிலேயே அமைவு பெறுகிறது. நேரம் என்பது நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதில் இல்லை. நமது ஒவ்வொரு செயலையும் கால அளவின் அடிப்படையில் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ப, அதற்குள் செய்து சாதிக்கும் திறமையே நேர நிருவாகம்.

மனித வாழ்க்கையின் பருவ வயது நிலைகளும், இயற்கையின் பருவ கால நிலைகளும் நேரங்களைக் கொண்டே கணக்கிடப் பெறுகின்றன. நாள், வாரம், மாதம், ஆண்டு என நாள்கணக்கில் காலம் பகுக்கப் பட்டிருந்தாலும், நாளின் பகுதிகள் மணி, மணித்துளி, விநாடி என நேரங்களாலேயே அளக்கப்படுகின்றன.

முன்பு ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் இரவு பகல் என இரண்டாகப் பிரித்திருந்தோம். உறங்குவதற்கு இரவு என்றும், விழித்துப் பணி புரியப் பகல் என்றும் ஒதுக்கி இருந்தோம். காலத்தின் சுழற்சியில், வேலைக்குப் போகும் மக்கள் பெருகிவிட்ட சூழலில், தற்போது, மூன்று எட்டு மணிநேரங்களாக இருபத்துநாலுமணி நேரம் பகுக்கப்பட்டு வாழ்வியல் கற்பிக்கப் பட்டுள்ளது.

எட்டுமணி நேரம் உழைப்பு!, எட்டு மணிநேரம் களிப்பு! எட்டுமணிநேரம் ஓய்வு! என ஒவ்வொரு நாளையும் பகுத்துப் பயன்படுத்தினால் நிறைந்த நன்மைகள் வாய்க்கும் என நம்புகிறோம். ஆனால் கடைபிடிக்க முடிகிறதா? என்பது பெரும் கேள்விக் குறியே!.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இடமும் காலமும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. எனினும் தற்போது காலம் என்னும் நேரம் முந்திக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம்? என்று கேட்போம். மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்ல எவ்வளவு தூரம் எனக் கேட்டால் 500 கிலோ மீட்டர் எனப் பதில் வரும். ஆனால், தற்போது எவ்வளவு தூரம்? எனக்கேட்டால் ஆறு மணிநேரப் பயணம் என்றே பதில் வருகிறது. ஆம்! தூரத்தை நேரத்தால் அளக்கக் கூடிய நவீனக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நேரம் சார்ந்திருப்பதால் வாழ்க்கையும் கடிகார முட்களைப்போல விரைந்து கொண்டே இருக்கிறது. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்தின் ஓட்டத்திற் -கேற்ப நமது வாழ்வின் ஓட்டமும் அமையவில்லையென்றால் நாம் பின்தங்கிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

காலையில் விழித்து எழுவது தொடங்கி, இரவு உறங்கப் போவது வரை நேரக் கணக்கீடோடு கூடிய திட்டமிடலை வைத்துக் கொண்டால்,நாள் முழுவதும் வெற்றிச் சாதனைகளாகவே அமைந்து போகும்.

நேரத் திட்டமிடலே நிருவாக வெற்றிகள் அனைத்திற்கும் தாரக மந்திரம். ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரும் கடிகாரத்தை முந்தியடிப்பவர்களாகவே செயல்படுபவர்கள்.

ஒரு இயந்திரக் கருவியை உற்பத்தி பண்ணுவதற்கான தொழிற்சாலை ஒன்று ஒரு நகரத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அதே கருவியை உற்பத்தி பண்ணும் அதே போன்றதொரு தொழிற்சாலை கொஞ்ச நாளில் பக்கத்திலுள்ள கிராமத்தில் தொடங்கப்பட்டு அதுவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு, கிராமத் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் இயந்திரக் கருவி தரத்தில் மேம்பட்டதாகத் திகழ்வதாகச் சந்தையில் பேசப்பட்டது.

விற்பனையிலும் நகரத் தொழிற்சாலைக் கருவியை விட,கிராமத் தொழிற்சாலைக் கருவி அதிக எண்ணிக்கையை எட்டிப் பிடித்தது.

'இரண்டும் ஒரே மாதிரி தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் ஒரே மாதிரி இயந்திரக் கருவிகள்!; ஆனால் கிராமத்தில் உற்பத்தியாவதற்கு மட்டும் தரம் பெருக என்ன காரணம்?' நேரில் சென்று பார்வையிட்டு இரண்டு மூன்று கருவிகளையும் விலைகொடுத்து வாங்கி வந்து ஆராய்ச்சி பண்ணத் திட்டமிட்டார் நகரத் தொழிற்சாலையின் அதிபர்.

தான் இன்னாரென்று கூறாமல், கிராமத் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர், தொழிற்சாலை இயங்கும் முறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரண்டு மூன்று இயந்திரக் கருவிகள் வாங்கப் போவதாகத் தெரிவித்தார். உள்ளே தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார். தொழிற்சாலையின் எல்லா அமைப்புகளும் அவருடைய தொழிற்சாலையைப் போலவே இருந்தன; பணிபுரிந்த தொழிலாளர்களும் அவரிடம் பணிபுரிபவர்களைப் போலவே பணி புரிந்து கொண்டிருந்தனர்.

அப்போது நண்பகல் ஒரு மணி ஆயிற்று; தொழிற்சாலையின் மேஸ்திரி தன்னிடமிருந்த விசிலை வாயில் வைத்து நீள ஊதினார்; அவ்வளவுதான் அடுத்த ஓரிரு வினாடிக்குள் சொல்லி வைத்தாற்போல எல்லா இயந்திரங்களும் நின்று போயின; பணியில் இருந்த அத்தனைத் தொழிலாளர்களும் மொத்தமாகச் சாப்பிடும் கூடத்திற்குள் நுழைந்து விட்டனர். ஆச்சரியமாகப் பார்த்தார் நகரத் தொழிற்சாலையின் அதிபர். ஆம்! சாப்பாட்டு நேரத்திற்கான இடைவேளை நேரம் அது.

அடுத்து அரை மணி நேரம் ஆனவுடன் மேஸ்திரி விசிலை எடுத்து ஊதினார். சொல்லி வைத்தாற்போல ஓரிரு வினாடிக்குள் தொழிற்சாலைக்குள் எல்லாப் பணியாளர்களும் வந்தனர்; உடனே உற்பத்தி இயந்திரங்கள் ஓடத் தொடங்கி விட்டன. நகரத் தொழிற்சாலை அதிபருக்கு மறு படியும் ஆச்சரியம்.

மேஸ்திரி வந்து கேட்டார்,"ஐயா! சுற்றிப் பார்த்து விட்டீர்களா? எத்தனை இயந்திரக் கருவிகளை வாங்கப் போகிறீர்கள்?."

நகரத் தொழிற்சாலை அதிபர் சொன்னார்," மேஸ்திரியாரே! இப்போது எனக்கு உங்கள் இயந்திரக் கருவிகள் தேவைப்படவில்லை; உடனடியாக எனக்குத் தேவைப்படுவதெல்லாம் உங்கள் கையில் இருக்கும் விசில் மட்டும் தான். உங்களிடமுள்ள விசிலில் ஒரு மூன்று மட்டும் விலைக்குக் கிடைக்குமா?"

நகரத் தொழிற்சாலை அதிபர் கூறியது புரியாமல் திகைத்தார் மேஸ்திரி.

உண்மைதான். இரண்டு தொழிற்சாலைகளின் இயந்திரங்களிலும் எந்தக் குறையும் இல்லை; ஆனாலும் உற்பத்தியாகும் கருவிகளின் தரம் குறைவதற்குக் காரணம் தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களின் தரம் குறைபாடு உடையதாக இருப்பதே!. விசிலடித்ததும் உணவு இடைவேளைக்குப் போவதும், மீண்டும் விசிலடித்ததும் சுணக்கமின்றி உடனே வந்து பணியைத் தொடர்வதும் கிராமத்துப் பணியாளர்கள் நேரத்தை அனுசரித்து, நேரப்படி செயலாற்றும் தரத்தின் அடையாளம். அதனால் தான் உற்பத்திப் பொருளும் தரமானதாக இருக்கிறது.


நேரத்தில் வினையாற்றும் திறமே தரத்திற்குச் சான்று பகர்கிறது. நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழித்தால் வீணாக விரயமாகும் நேரத்தை மிச்சப்படுத்திப் பயனுள்ள மற்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

காலம் மூன்று வகைகளாகக் கூறப்படுகின்றன; கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பவை அவை. இதையே நாள் கணக்கில் மிக எளிமையாக நேற்று,இன்று,நாளை என்றும் கூறலாம்.

நேற்று என்பது கடந்து போன மாயம்!;

நாளை என்பது கையில் அகப்படாத ஜாலம்!;

இன்று மட்டுமே கண்களுக்குத் தெரியும் நிஜம்!.

எனவே கடந்து போன நேரங்களை எண்ணிக் கலங்கத் தேவையில்லை; அதனால் பலனுமில்லை. வருங்காலம் குறித்துக் கனவு காணவும் தேவையில்லை;அது சிலருக்கு வாய்க்கலாம்;வாய்க்காமலும் போகலாம். ஆனால், இன்று மட்டுமே நேரில் தோன்றும் நிஜம். அதனால் வாய்த்திருக்கும் இன்றைய பொழுதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நேர நிருவாகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.' பிரசண்ட்'(Present) என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் 'பரிசு' என்றும் 'இன்று' என்றும் இருவகைப் பொருள்கள் உண்டு. ஆகவே வாய்த்திருக்கும் இன்றைய பொழுது முழுவதையுமே பரிசாக ஏற்றுக்கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.


ஒரு வளமான நாடு.அந்த நாட்டினை ஆளும் அரசனுக்கு வாரிசுகள் அதிகம். எனவே அரசன் ஒரு புதுமையான திட்டத்தை அடுத்து அரசுரிமை ஏற்கவிருக்கும் மன்னரிலிருந்து செயல்படுமென அறிவித்தான். யார் ராஜாவாக வந்தாலும் அவர்களது ஆட்சிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே!. ஐந்தாண்டுகள் ஆட்சி முடிந்தவுடன், அவர்களது நாட்டிலுள்ள ஒரு தீவுக்கு அனுப்பப் படுவர்; ஆயுளின் மீதிக்காலத்தை அவர் அங்கு தான் கழிக்க வேண்டும். அந்தத் தீவு வாழ்வதற்கான எந்த வாய்ப்பு வசதிகளும் இல்லாத தீவு. கொடிய மிருகங்களும் உண்டு. ஆண்டுகள் பல கடந்தன; அரச வாரிசுகளில் பலர் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டாலும், அதற்குப்பின் நிகழப்போகிற தீவுகடத்தலுக்கு அஞ்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வர மறுத்தனர்.

யாரும் ஆட்சிக்கு வர விருப்பப்படவில்லை என்றால் அடுத்த அரசனை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?. அமைச்சர்கள் கூடி, நகரத்திலேயே அறிவுத் திறமும் சாதூரியமும் மிக்க இளைஞன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை ராஜாவாக்க முடிவெடுத்தனர். முதலில் மறுப்புத் தெரிவித்த இளைஞன் பிறகு, யோசித்து, ராஜாவாகச் சம்மதித்தான்.

ஐந்துவருட ராஜ பதவி என்பது சரிதான்; ஆனால் அதற்குப் பிந்தைய தீவு வாழ்க்கை?. பதவியேற்ற மறு நாளே அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுடன் தீவுக்குப் பயணமானான். தீவில் ஆங்காங்கே முந்தைய மன்னர்களின் எலும்புக்கூடுகள் கிடந்ததைப் பார்த்தான்; கொடிய மிருகங்கள் உலாவுவதையும் கண்டான். வாழ்வதற்கான எந்தச் சூழ்நிலையும் அங்கு இல்லாதிருப்பதை உணர்ந்தான்.

நாட்டின் தலைநகர் திரும்பியவுடன் நாட்டின் வளர்ச்சிக்குப் பல நல்ல திட்டங்களை வகுத்ததோடு, அந்தத் தீவின் வளர்ச்சிக்கு ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தைச் சிறப்பாக உருவாக்கினான்.

1. தீவின் வனப்பகுதியில் ஒரு பகுதியைத் திருத்தி வேளாண் நிலங்களை உருவாக்குதல்

2. கொடிய விலங்குகளைப் பாதுகாப்பான அடர்வனப் பகுதிக்குள் அனுப்புவது.

3. அரசின் நிரந்தரமான பாதுகாப்புப் படை ஒன்றை அங்கே நிறுத்தி வைப்பது.

4. அந்தத் தீவில் குடியிருப்புகளை உருவாக்கி மக்களை அங்கே குடியேற்றுவது.

5. தீவைச் சுற்றிலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் சிறு சிறு கப்பல்கள் வந்து நிற்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்

ஆகியவற்றை அவன் ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளில் ஆண்டிற்கொரு திட்டமாய்ச் செயபடுத்தித் தீவைச் சொர்க்கபுரியாக மாற்றிவிட்டான்.

பிறகென்ன? ஐந்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பு முடிந்ததும் மற்றொரு நாட்டிற்கு அரசனைப்போல அந்த இளைஞன் அந்தத் தீவைச் சென்று அடைந்தான்.

இலக்குகள் எப்போதும் கடினமானவையாகவே இருக்கும். ஆனால் அவற்றை அடைவதற்கான முயற்சியில் நேரத்தைத் தவற விடாது உழைத்தால் எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்பே வெற்றிக்கனி நம் கரங்களில் கனிந்து நிற்கும்!

உன்னத உழைப்பாளிகளுக்கு இந்த நேரம் அந்த நேரம் என்றெல்லாம் இல்லை!

எல்லா நேரமும் நல்ல நேரமே!

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News