சூரிய கிரகணமும் மகாளய அமாவாசையும்
- கிரகண தோஷ பாதிப்பு இந்தியாவிற்கு கிடையாது. கிரகண தோஷத்திற்குரிய நடைமுறைகள் கடைபிடிக்கத் தேவையில்லை.
- இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசி வேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
கிரகணம்:
நவகிரகங்களின் இயக்கமே உலகம் என்பதை நம் கண்ணிற்கு புலப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியை கொண்டு உணர முடியும். இவர்களின் ஒளியை ராகு அல்லது கேது மறைப்பதே கிரகணமாகும். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றும் நிகழும். சூரியனை ராகு மறைக்கும்போது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஏற்படும். கேது சூரியனை மறைக்கும் போது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைத்தால் அது பகுதியை சூரிய கிரகணம். சந்திரன் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி சுற்றி நெருப்பு வளையம் தென்படும். சூரியனின் நடுப்பகுதி கறுப்பாக காட்சி தரும். கிரகணம் தெரியும் பகுதிகளில் வெளிச்சம் குறைந்து மாலைப் பொழுது போன்ற உணர்வை கொடுப்பது கங்கண சூரிய கிரகணம் ஆகும்.
சூரிய கிரகணம் 2023:
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27ம்தேதி 14.10.2023 சனிக்கிழமை இரவு 8.34 மணி முதல் 15.10. 2023 அன்று 2.25 மணி வரை சித்திரை நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. அதனால் கிரகண தோஷ பாதிப்பு இந்தியாவிற்கு கிடையாது. கிரகண தோஷத்திற்குரிய நடைமுறைகள் கடைபிடிக்கத் தேவையில்லை.
அமாவாசை:
பிரதமை முதல் அமாவாசை வரை திதிகள் 15. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைவதால் பூமிக்கு ஒரு காந்த சக்தி ஏற்படும். மற்ற திதிகளில் ஏதாவது ஒன்று, இரண்டு கிரகம் திதி சூன்யம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அமாவாசை அன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் நெற்றிக்கண் பலப்படுவதால் அமாவாசையன்று மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை யன்று நடத்துகின்றனா். சில சடங்குகள் மற்றும் சில பூஜை முறைகளுக்கு அமாவாசை சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம்.
இறைவனடி சேர்ந்த முன்னோர்கள், பெற்றோர்களின் ஆசி வேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசை மிகவும் சிறப்புடையது.
மகாளய அமாவாசை:
இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை அதிகமாக தரும் சக்தி திதிகளுக்கு உண்டு. அதனால் தான் நமது ஜோதிட முன்னோடிகள் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று கூறியுள்ளார்கள். பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு நற்கதியடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றே அமாவாசை திதி நாட்களில் கடைபிடிக்கப்படும் பித்ருக்கள் பூஜையாகும். பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.
சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். அமாவாசை திதியன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் சூன்யமடையாது என்பதால் அமாவாசை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
துன்பங்களிலிருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கால சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி, அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தமது உறவுகளை பார்ப்பதற்காக இந்த பூலோலகத்துக்கு வருகின்றனர்.
எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போல அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாளை மகாளய அமாவாசை அன்று அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
மகாளய அமாவாசை 2023:
மகாளய பட்சம் செப்டம்பர் 30-ந் தேதி துவங்கி, அக்டோபர் 14-ந் தேதி வரை உள்ளது. அக்டோபர் 14 ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. அக்டோபர் 13-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.52 மணிக்கு துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி சனிக்கிழமை இரவு 11.25 வரை அமாவாசை திதி உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீர் நிலைகளுக்கு சென்று நீராடி விரதத்தை துவக்கி விட வேண்டும்.
சனிக்கிழமை:
சனி என்றால் பூர்வீகம், குலதெய்வம், தொழில், உத்தியோகம், தீராத கடன், தீராத நோய், ஆயுள், கர்மா, தடை , தாமதம். மனிதர்களின் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குபவர் சனிபகவான். ஒருவரின் சுய ஜாதகத்தில் அல்லது கோட்சாரத்தில் சனியால் பாதிப்பு இருந்தால் பூர்வீகத்தில் வாழ முடியாது. குல தெய்வ அனுகிரகம் குறையும். முன்னோர்களின் நல்லாசி கிடைக்காது. பூர்வீகச் சொத்து கிடைக்காது அல்லது பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலை உண்டாகும்.தொழில் உத்தியோகம் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும்.ஆயுள் பயம், தீராத நோய், தீராத கடன் போன்ற பாதிப்புகள் இருக்கும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட பாதிப்பு குறைந்து சுபபலன் அதிகரிக்கும்.
மகாளய அமாவாசையும் சனிக்கிழமையும்:
பித்ருக்கள் பூஜைக்கு சனிக்கிழமை மிக உகந்தது. இந்த ஆண்டு புரட்டாசி அமாவாசை சனிக்கிழமை சம்பவிப்பது மிகச் சிறப்பு. மகாளய பட்ச காயத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்யது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.
சூரிய கிரகணமும் மகாளய அமாவாசையும்:
மகாளய அமாவாசையன்று சூரியன், சந்திரன், ராகு, கேது, பூமி ஆகியவை பாகை அடிப்படையில் நெருக்கமான டிகிரியில் பயணம் செய்வது கிரகணத்திற்குரிய கிரக அமைப்பாகும். அமாவாசை திதி முடியும் போது கிரகணம் சம்பவிக்கிறது. கிரகணத்திற்குரிய கிரக நிலவரத்துடன் அமாவாசை சனிக்கிழமை சம்பவிப்பது அரிய கிரக அமைப்பு. கிரகண காலத்தில் செய்யப்படும் ஜெபம் மற்றும் மந்திர உச்சாடனத்திற்கு பல மடங்கு பலன் உண்டு.நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் நீராடி தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடை யாது. கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும். பல வருடமாக தீர்க்க முடியாதபூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசி சக்கரத்தின் தென் மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. அந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். அந்த புரட்டாசி மாதத்தில் 3 தலைமுறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களையும் ஆத்மாத்தமாக நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, முன்னோர் ஆத்ம சாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும்.
புரட்டாசி 27-ம் நாளாக 14.10.2023 (சனிக்கிழமை) அமாவாசை திதி பாவம் நீக்கும் நாளாகும். எதிர்கால தலைமுறைக்கு நன்மை சேர்க்கும் பாக்கியம் மிகுந்த நாளாகும். அமாவாசைத் திதியும், சனிக்கிழமையும், கிரகண கிரக அமைப்பு இணைந்த இந்த நாள் பல வருடங்களாக தீராத , தீர்க்க முடியாத பித்ரு தோஷம் உள்ள வர்கள் மற்றும் துர்மரணம், கொடிய நோயால் இறந்தவர்களுக்கு இந்நாளில் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் உடனடி பலன் தரும்.
பிதுர் வழிபாட்டுக்கு மிகச் சிறப்பு வாய்ந்த நாளான மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற எல்லா அமாவாசை நாட்களைக் காட்டிலும் அதிக பலன் தரும். 1 வருட திதி, தர்ப்பணம் செய்த பலனும், முன்னோர் ஆசியும் கிடைக்கும். புரட்டாசி அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர் களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை , திதி, தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச்செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பதற்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இறந்தநாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்களும் மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய அமாவாசை, சனிக்கிழமை, கிரகண கிரக அமைப்பு என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் உரிய வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.