பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை...
- பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கான ஆஞ்சநேயரை வணங்கி நிறைவு செய்ய வேண்டும்.
- இத்தனை பெருமைகளுக்கு உரியவராக இருந்த போதிலும் ஆஞ்சநேயர் ஒரு துளி கூட கர்வமே இல்லாதவர்.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல...
பிள்ளையாரை பிடித்து குரங்கால் முடித்த கதை.
சொந்த பெரியப்பா மகனான சொக்கார முறை தம்பி ஒருவன் புதிய கார் வாங்க செல்வதற்காக தன்னோடு துணைக்கு வரும்படி அழைத்தான்.
முக்கியமான வேலை இருப்பதால் காரணத்தை அவனோடு அன்பாய் சொன்னேன்.
என்ன கார் வாங்க போகிறாய் என்றேன்.
யண்ணே! ஸ்விப்ட் வாங்க போறேன். நம்மூரு ரோட்டுக்கு அந்த வண்டி தான் சரிப்படுமுண்ணே என்றான்.
இருவரும் அவரவர் காரியங்களுக்கு சென்று சாயங்காலம் வீடு வந்தோம்.
அய்யா கோவில்முன் புதிய காரை கொண்டு வந்து நிறுத்தி சந்தனம் தெளித்து திரு நாமம் பூசி பூஜை செய்து கொண்டிருந்தான் தம்பி.
கிட்டே சென்று பார்த்தால் கூண்டாய் நிறுவனத்து கார் அது.
என்ன தம்பி!! ஸ்விப்ட் வாங்குவதாக சொன்னாயே.. கூண்டாய் வாங்கியிருக்காயே என்றேன்.
அது வந்துண்ணே!! போகும் வழியில் கூண்டாய் ஷோரூம் போயிட்டு போவோமா என்றாள் உங்க கொழுந்தியார்.
கூண்டாய் ஷோரூம் போனதும் இரண்டு பேருக்குமே ஐ20 புடிச்சிடுச்சு. அதான் ஸ்விப்ட் வாங்கல. பிள்ளையாரை புடிக்க போய் கொரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆயிடுச்சுண்ணே என்றான்.
நாம் ஏதோ ஒன்றை செய்ய போய் அது ஏதோ ஒன்றாய் முடிந்து விடுவதை தான் பிள்ளையாரை பிடிக்க போய் கொரங்காய் ஆயிடுச்சுன்னு இந்த பழமொழியை உதாரணமாக சொல்வோம்.
இந்த அர்த்தம் சரிதானா? தேடி பாத்த போது இந்த பழமொழிக்கு கிடைத்த நிஜ அர்த்தம் உங்களது பார்வைக்கு..
எந்த ஒரு நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதே போல் அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெற செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வணங்கி செயலை ஆரம்பித்து நினைத்த காரியம் வெற்றிகரமாய் நிறைவேறியதும் மாருதிக்கு மங்களம் பாடி துதித்து நினைத்த செயலை மங்களகரமாய் நிறைவு செய்ய வேண்டும்.
பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கான ஆஞ்சநேயரை வணங்கி நிறைவு செய்ய வேண்டும் என்பதை பிள்ளையாரை பிடித்து குரங்கில் முடிந்தது என பெரியவர்கள் சிலேடையாக, சொலவடையாக சொன்னார்கள்.
அதை பேச்சு வழக்கில் திரித்து "பிள்ளையாரை பிடிக்க போய் குரங்காய் முடிஞ்ச கதை" ன்னு நக்கலாக அர்த்தம் திரித்து நாம் சொல்கிறோம்.
பிள்ளையாரை பிடித்துக் கொள்: நன்கு வேண்டிக் கொள். எல்லா காரியமும் நல்லபடியே நடக்கும்!" எத்தனை முறை வீட்டு பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள் இந்த வாக்கியத்தை.
பரமசிவனார் திரிபுரம் எனும் முப்புரத்தை எரிக்க செல்லும் போது பிள்ளையாரை வழிபட மறந்து கிளம்ப சிவனார் பட்ட துன்பங்களை கதையாய் கேட்டிருப்பீர்கள் அனைவரும்.
"முப்புரம் எரி செய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா "
என்பது திருப்புகழில் கணபதி துதியில் அருணகிரியார் வாக்கு .
சிவனார் முப்புரம் எரிக்க ஏறிய தேரின் அச்சை முறித்து தடையை ஏற்படுத்திய பிள்ளையாரை, சிவன் நினைந்து வழிபட, பிள்ளையார், சிவனாரின் காரிய விக்னங்களை விலக்கினார்.
சிவனே பிள்ளையாரை வழிபடாமல் அந்த பாடுபட்டார் என்றால் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் ?
எனவே சிறிய செயல் என்றாலும் பெரிய செயல் என்றாலும் கணபதியை வழிபட்டு தான் துவங்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு சொல்லிய தீர்க்கமான அறிவுரை.
எந்த காரியத்தை செய்யும் முன்பும் , செயல்கள் தடங்கல் இல்லாமல் நடக்க, முழு முதல் கடவுள் விநாயகரை நினைத்து செய்ய தொடங்குவது இந்துக்களின் வழி வழி வந்த பழக்கம்.
இதெல்லாம் சரி! அதென்ன குரங்காய் முடியும் சமாச்சாரம்.
குரங்காய் முடிவதற்கு ஏன் பிள்ளையாரை வழிபட வேண்டும்?
ஆஞ்சநேயர் ஒரு வானரம் , வாயு புத்ரன், சுக்ரீவனிடத்தில் மந்திரியாக இருந்தவர். சொல்லின் செல்வர், புத்தி சாதுர்யம் மிக்கவர். ஆஞ்சநேயர் மிகுந்த தைரியசாலி, அபார தேக பலம் உள்ளவர், ஜெயிக்க முடியாதவர், வாக்கு வன்மை பொருந்தியவர்.
அன்னை சீதா பிராட்டியும், அண்ணல் ராமபிரானும் மறுபடியும் வாழ்வில் ஒன்று சேர காரணமாக இருந்தவர்.
இத்தனை பெருமைகளுக்கு உரியவராக இருந்த போதிலும் ஆஞ்சநேயர் ஒரு துளி கூட கர்வமே இல்லாதவர்.
இன்றளவும் எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இரு கை கூப்பி கண்களில் ஆனந்தப் பெருக்கோடு சூட்சும ரூபத்தில் எழுந்தருளி ராமாயண பாராயணத்தை செவிமடுப்பவர் சிரஞ்சீவி ஸ்ரீஅனுமன்.
தன்னடக்கம் - அதுதான் ஆஞ்சநேயரின் பெரும் சிறப்பு.
ராமாயண மகா காவியத்தில் ஆஞ்சநேயரின் பங்கு ரொம்ப பெரியது வார்த்தையில் அடக்க முடியாதது.
ஆஞ்சநேயர் செய்த செயல் யாவும் வெற்றியில் முடிந்தது. வெற்றியின் மறு பெயர் ஆஞ்சநேயர் எனும் குரங்கர்.
பிள்ளையாரை வணங்கி ஆரம்பித்து குரங்கரான ஆஞ்சநேயர் எனும் குரங்கர் அருளால் வெற்றியாய் முடிந்த காரியங்களை குரங்கால் முடிந்தது என்று சொல்வார்கள்.
செயல் ஆரம்பிக்கும் ஆதியில் தொடங்கி, முடிவான அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி.
யார் இந்த ஆதியந்த சுவாமி??
ஆதியந்த பரம்பொருள் என்றால் பரம்பொருளான பரமசிவனை குறிப்பதாக தான் நாம் நினைப்போம்.
அம்மையும், அப்பனும் இணைந்து நின்ற கோலத்தை அர்த்தநாரீஸ்வரர் என அழைப்பது போல் பிள்ளையார் + ஆஞ்சநேயர் இருவரும் இணைந்து காட்சி கொடுக்கும் கோலத்தை ஆதியந்த சுவாமி என அழைப்பார்கள்.
பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்..
பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின் ரூபம் கொண்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள். யானையும் குரங்கும் நிலத்துக்கு சமநிலையாகவே நடக்கும். ஒரு போதும் நிலத்தை எதிர்த்து நிமிர்ந்து செங்குத்தாய் நடக்காது.
அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறி "தான்" என்று எழுந்து நடக்காது.
அதே போல் ஆஞ்சநேயரும், பிள்ளையார் இருவரும் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ஆவார்கள்.
மகாதேவரான சிவபெருமான் உட்பட அனைத்து தேவதைகளும் நவக்கிரகங்கள் என்னும் கோள்களின் ஆளுமைக்கு கட்டுபட்டவர்கள் அல்லது அவர்களின் பார்வையால் பீடிக்கப்பட்டவர்களே.
நவக்கிரகங்களால் கட்டுபடுத்த, பீடிக்கப்படாத தெய்வங்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவர் மட்டுமே.
எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு. பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் என்ற வடிவில் நாம் இருவரையும் வணங்கியிருப்போம்.
ஆதியில் சுபமாய் தொடங்கி, அந்தத்தில் மங்களமாய் நிறையும் தத்துவம் தான் "பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை."
எதையோ நினைத்து ஆரம்பித்து எப்படியோ கோணல் மாணலாய் முடிந்த செயலுக்கு பிள்ளையார் பிடிக்க போய், குரங்காய் முடிஞ்சி போச்சின்னு சலிப்பாக தவறாக சொல்லாதீங்க....
தொடர்புக்கு-isuresh669@gmail.com