- பல தடைகளை கடந்து பெண்கள் இத்தகைய சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றுள்ளனர்.
- மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் 2 சிறுமிகளுக்கும் பள்ளியில் வைத்து இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெண்கள்...
பல நூறாண்டு போராட்டத்துக்கு பின்னர் இன்று கல்வி, வேலைகளில் குறிப்பிடத்தக்க வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பவே தயங்கிய கிராமப்புற பெற்றோர்களும், தங்களது பெண் குழந்தைகளை தைரியமாக வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். அதுபோல்தான் வேலைக்கும் பெண் பிள்ளைகள் வெளியிடங்களுக்கு செல்கிறார்கள்.
இதனால் பெண் குழந்தைகளின் கல்வித்தரமும், வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.
பல தடைகளை கடந்து பெண்கள் இத்தகைய சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றுள்ளர்.
மகிழ்ச்சி அடைகிறோம்...
ஆனால்... இன்று நாட்டில் நடைபெறும் சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.
நிர்பயா
ஆம்!... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற இளம்பெண் ஓடும் பஸ்சில், கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அந்த பெண்ணுக்கு 'நிர்பயா' என்று அடையாளப் பெயர் வைக்கப்பட்டது. இதற்கு அச்சமற்றவர் என்று அர்த்தம். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள், தங்களை தற்காத்துக்கொள்ள, தைரியத்துடன் போராட வேண்டும். அதற்கு அவர்கள் அச்சமற்றவர்களாக மாறவேண்டும் என்பதே இந்த பெயரின் நோக்கம்.
இனி ஒரு பெண், இதுபோன்ற பாதிப்பை சந்திக்கக்கூடாது என்பதற்காக, பாலியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா சட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்தகைய கடுமையான சட்டங்கள் இருந்தும்... பாலியல் குற்றங்கள் குறைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
பெண் குழந்தைகளையும் தொடர்கிறது
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பாலியல் வக்கிரத்தில் பாதிக்கப்படுவது இளம் பெண்கள் மட்டுமல்ல. சின்னஞ்சிறு பிஞ்சுகளும் தான். வீட்டில், பள்ளியில், விளையாட செல்லும் இடத்தில் இப்படி பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்கள் நடக்கின்றன. இதில் பல பிஞ்சுக்குழந்தைகள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.இத்தனைக்கும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்காக போக்சோ என்னும் சட்டமும் உள்ளது. இருந்தபோதும் கொடுமைகள் குறைந்தபாடு இல்லை.
கொல்கத்தா சம்பவம்
சமீபத்தில் நாட்டையே உலுக்கிக்கொண்டு இருக்கும் சம்பவம், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதுதான்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அந்த பெண், மருத்துவம் படித்துவிட்டு, முதுகலை மருத்துவம் படிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
வழக்கம்போல் நள்ளிரவில் பணி முடிந்த பின்னர், அவர் அங்குள்ள ஒரு அறையில் சக டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் இரவு உணவை சாப்பிட்டு உள்ளார். அதன்பிறகு அதே அறையில் படுத்து தூங்கினார்.
மறுநாள் காலை (அதாவது கடந்த 9-ம் தேதி) அவர் பிணமாகத்தான் கிடந்தார். அவர் கிடந்த நிலையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
இதை கேள்விப்பட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.
கொல்கத்தா ஐகோர்ட்டு இந்த வழக்கை கையில் எடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உள்ளது. அது ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது.
கிருஷ்ணகிரி கொடூரம்
நாடு முழுவதும் கொந்தளிப்பு ஒரு புறம் நடந்து கொண்டு இருந்த வேளையில் தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் சிறுமி பாலியல் வக்கிரத்துக்கு உள்ளக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பேரிடியாக வந்தது.
விசாரணையில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, அதில் கலந்து கொண்ட அந்த சிறுமிகளுக்கு இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரின்பேரில் அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தப்பி ஓடும்போது, கால் முறிவு ஏற்பட்டு 'மாவுக்கட்டு' போடப்பட்டுள்ள செய்தியும் வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் 2 சிறுமிகளுக்கும் பள்ளியில் வைத்து இந்த கொடூரம் நடந்துள்ளது. இப்போது அந்த பகுதி மக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பச்சிளம் குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த பாலியல் வக்கிரங்களை பார்க்கும்போது நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்று கேட்கத்தோன்றுகிறது.
நெஞ்சை உலுக்கியது
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்த குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது அதுபற்றி பரபரப்பாக பேசுகிறோம். அதன்பின்னர் அதை கடந்து சென்று விடுகிறோம். நமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றவழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது வெளியான வீடியோ மற்றும் ஆடியோவில் வந்த 'அண்ணா... வலிக்குது அண்ணா... அடிக்காதே...' என்ற குரல்... கேட்ட அனைவரின் மனச்சாட்சியை உலுக்கி எடுத்தது.
அது தொடர்பான வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது அதுபற்றி நாம் பேசுவதில்லை. மறந்து விடுகிறோம்.
இந்த குரல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் இன்னமும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு
வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. பிரச்சினைகள் ஓயவில்லை. பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் பெண் போலீசாரே, அந்த வக்கிரக் கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்களும் நடப்பது அதைவிட கொடுமை.
பொது இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுகிறோம். அத்துடன் வேலை முடிந்துவிட்டதா?
இதுபோன்றவற்றுக்கு தீர்வு நம் எல்லோர் கைகளிலும் இருக்கிறது. பொறுப்பும், கடமையும் அரசுக்கு மட்டுமே இல்லை நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது.
வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள். அவர்களது வலி, வேதனைகளை உணர்த்துங்கள். அடுத்து வரும் தலைமுறையாவது இதில் இருந்து விடுபடும்.
அடுத்து இதுபோன்ற குற்றங்களுக்கு, இப்போது விரைவில் தீர்ப்பு வருகிறது. ஆனால் புலனாய்வு விசாரணை காலதாமதமாகிறது. அதையும் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதவாறு 'இனி ஒரு விதி செய்வோம்'.