சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்

Published On 2024-09-09 14:38 IST   |   Update On 2024-09-09 14:38:00 IST
  • வெற்றியின் உச்சிக்கு சென்றவர்களுக்கு நிதானம் வேண்டும்.
  • உண்மை பக்தியே உயர்த்தும் உன்னை, பக்தி செலுத்தினால் பாவங்கள் பொடியாகும்.

அதிகாரம்: வெக்காமை

இந்த அதிகாரத்தில்,

நடுவின்றி நன்பொருள் வெஃகாமை குடியொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

என்ற குறளில் தொடங்கி

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ்ச் செருக்கு.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

வெக்காமை என்பது, நம்முடைய தகுதிக்கு மீறிய ஒன்றை செய்வதும் அல்லது தனக்கு மீறிய பெரிய பொருள்களை விரும்புவதும் ஆகும். இவ்வாறு விரும்புவது முறையல்ல. அதனால் கேடுகள் உண்டாகும். அதிக விலைமதிப்புள்ள ஓர் பொருளை பொருளுக்குரியவனின், சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அவனை வஞ்சித்து அந்தப் பொருளை பெறுவது பாவம் ஆகும்.

பொருளுக்குரியவன் மனம் வெதும்பினால் ஏமாற்றியவன் பெரும் பழியை ஏற்பான். எளியவர்களின் பொருளை தன்னுடைய செல்வ பலத்தாலோ, அதிகார பலத்தாலோ அவனை அச்சுறுத்தி பொருளை கைப்பற்றுவது தவறானது.

ஒரே வீட்டுமனையை பலரிடம் காட்டி அதனை விற்று பொருள் ஈட்டுவது நீதிக்குப் புறம்பான செயலாகும். தன் தகுதிக்கு மீறி அழகுடனும் பொருளுடனும் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் இளைஞர்களுக்கு உண்டு. அத்தகைய மனப்பான்மை தவறானதே.

அத்தகைய எண்ணங்களால் ஏமாற்றங்களும் பல பிரச்சினைகளும் உண்டாகி விரும்புகின்றவனின் தாய், தந்தையருக்கும் குடும்பத்தினருக்கும் தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும்.

சிலருக்கு நல்ல அறிவு நுட்பம் இருக்கும். ஆனால் பிறர் பொருளை ஏமாற்றி கைப்பற்றும் குணம் இருக்கும்.

எத்தகைய திறமை அவர்களிடத்தில் இருந்தாலும் அவையாவும் பயன் இல்லாதவையே. ஏமாற்றி பொருள் பறிக்கும் தன்மையில்லாத பண்பே உயர்ந்தபண்பு, அதுவே நல்லறிவு.

கடவுளைப் பற்றி அறிந்தவன் உண்மையை அறிந்திருப்பான். உலக நீதியை அறிந்திருப்பான். அத்தகையவன் பிறர் பொருளை அபகரிக்க மாட்டான். பிறர் பொருளை விரும்புகின்றவனிடம் அறம் இல்லை.

தலைவனைப் பற்றி அறிந்தவன் அறத்தைப் பற்றி அறிந்தவனாக இருப்பான். தூய்மையாக வாழ்பவனிடம் செல்வம் சேரும். அவ்வாறு சேர்ந்த பொருளை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துவான்.

பல இடங்களில் அரசாங்கத்தை ஏமாற்றி கள்ள நோட்டு, கள்ள நாணயம் செய்து வெளியிடுகின்றார்கள். இத்தகைய பேராசையால் வாழ்க்கை அழிந்து அதனால் குடும்பமும் அழியும்.

தன்னுடைய தேவைக்கும் பொருளை பயன்படுத்தாமல், பிறருக்கும் அதனை கொடுக்காமல் சேர்த்து வைக்கின்ற பொருள் எதிர்காலத்தில் பாதுகாப்பும் உரிமையும் இல்லாமல் தவறான வழிக்குப் பயன்படும்.

 

தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

சமுதாயத்தில் பொருளாதாரம் என்பது பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் அது சாவாமைக்கு மருந்தல்ல. சிறப்பறிவு உள்ளவர்கள் புண்ணியத்தை செய்தும் உண்மைப் பொருள் அறிந்தவர்களின் திருவடியை பூஜை செய்தும் சாகாவரத்தைப் பெறுவார்கள்.

வெற்றியின் உச்சிக்கு சென்றவர்களுக்கு நிதானம் வேண்டும். பொருளாதாரத்தைக் கண்டு மயங்கக் கூடாது. பொருளாதாரத்தை கண்டு மயங்காதவன், யாருக்கும் தலைவணங்காத வீரனாக இருப்பான் அன்பிறகு மட்டுமே தலைவணங்குவான்.

அவனே மாபெரும் பேரறிவாளன். அவன் தலைவனின் ஆசியையும் அருளையும் பெற்றிருப்பான்.

பொருளாதாரத்தைக் கண்டு மயங்குபவன் சுயநலம் உள்ளவனாக இருப்பான். பிறருக்குப் பசியாற்றுபவன், ஜீவகாருண்யத்தை கடைப்பிடிப்பவன், தலைவனை உருகி பூஜை செய்பவன் எத்தகைய சூழ்நிலையிலும் பிறர் பொருளைக் சுவரமாட்டான்.

துறவு மேற்கொள்பவர்கள் பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டால் அவர்களின் தவம் கெட்டு பாவச்சுமை அதிகமாகும். பூஜையும் புண்ணியமும் செய்த மக்கள் பிறருக்கு உதவி செய்வதால் தங்களுடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

பூஜையும் புண்ணியமுமே ஒரு மனிதனுக்கு சாகா மருந்து, மரணத்தை வென்றவர்களின் திருவடியைப் பற்றிக் கொள்வோம்; சாகாவரத்தை பெறுவோம்.

உண்மை பக்தியே உயர்த்தும் உன்னை, பக்தி செலுத்தினால் பாவங்கள் பொடியாகும். பண்புகள் ஓங்கும். பண்பு ஈதென்று அறியலாம். பகைமையை நீக்கலாம். பக்குவம் உண்டாகும். மன்னிக்கும் குணம் உண்டாகும்.

அதிகாரம்: இன்னா செய்யாமை

இந்த அதிகாரத்தில்,

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள்.

என்ற குறளில் தொடங்கி

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

இன்னா செய்யாமை என்பது பிறருக்குத் துன்பமும், இடையூறும் செய்யாதிருத்தல் ஆகும். தூய்மையானவர்களின் திருவடிகளைப் பற்றி பூஜை செய்தால் அன்றி மனதிற்குத் தூய்மை வராது.

நாம் முன்செய்த பாவமே, பகை வருவதற்கு காரணமாக இருக்கும். இதை உணர்ந்து பிறர் நமக்கு இடையூறு செய்தாலும் அதனை மறந்து விட வேண்டும். மீண்டும் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

பிறரை இடரிப்பேசுதல் மற்றும் செய்கையால் பிறருக்குத் துன்பம் தருதல் கூடாது. அது மீண்டும் பிறவிக்கு காரணமாக அமைந்து அதனை நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பிறர் நமக்குத் துன்பம் செய்தாலும் அவருக்குத் நாம் துன்பம் செய்யாதிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பிறவியிலிருந்து விடுபடலாம்.

தவத்தில் உள்ளவர்கள், தம்மிடம் உள்ள பொருள் பலத்தின் காரணமாகவோ படைபலம் இருக்கின்ற காரணத்தினாலோ பிறருக்குத் துன்பம் செய்தால் அவர்கள் பலநாட்கள் செய்த தவம் கெட்டுவிடும்.

பெரிய செல்வம் வந்த போதும் சிறப்பான வாழ்வும் அதிகாரமும் இருந்த போதும், பிறருக்குத் துன்பம் செய்யாது இருப்பவர்களை மாசற்றவர்கள் என்று கூறுவார்கள்.

அவர்கள் தனக்கு யாரேனும் துன்பம் செய்தாலும் அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். பலருக்குத் துன்பம் செய்பவன் பல ஆண்டு நோய்வாய்ப்பட்டுச் சாகாமல் நரகத்தை அனுபவிப்பான்.

இதனைக்கண்டு, நாம் பிறருக்குத் துன்பம் செய்தால் நமக்கும் இந்நிலை வரும் என தெரிந்து பிறருக்குத் துன்பம் செய்யாதிருக்க வேண்டும்.

எந்த அளவுக்கு நாம் புண்ணியம் செய்கின்றோமோ அது நம்மையே வந்து சாரும். எந்த அளவு பாவம் செய்கின்றோமோ அதனையும் நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

சான்றோர்கள் துன்பம் செய்தவரை மன்னித்து மறந்து விடுவர். அவ்வாறு இல்லையெனில், அவர்களைச் சான்றோர் எனக் கூற தகுதி இல்லாதவர்கள்.

துன்பம் செய்கின்றவர்களுக்கு அவர்கள் நாணும்படியாக நல்லது செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். மனித வர்க்கத்திற்கு இந்த காலத்தில் இவ்வாறு செய்ய முடியுமா? முடியும்.

மாசற்றவர்களைப் பூஜை செய்தால் அவர்களின் ஆசி கிட்டும். அப்போது மன்னிக்கும் மனப்பான்மை ஏற்படும்.

துன்பம் செய்தவருக்கும் அவர்கள் வெட்கித் தலைகுனியும்படி நன்மை செய்யலாம். குற்றமற்றவர்களை, மாசு நீங்கியவர்களை பூஜை செய்ய வேண்டும்.

மாசு என்பது உடம்புக்குரிய சொல். உடம்பில் மாசு இருந்தால் சிந்தனையில் அழுக்கு இருக்கும். உடம்பு இருட்டாக இருந்தால் சிந்தனை இருட்டாக இருக்கும்.

உடம்பின் மாசு நீங்கினால் உள்ளத்தின் மாசும் நீங்கும். உள்ளத்தின் மாசு நீங்கினால் அங்கு சங்கல்பவிகற்பமில்லை.

சிறப்பான அறிவு, சிறப்பான செயல் என்பது அழியக்கூடிய செல்வத்தை கண்டு மயங்காமல் இருத்தல் என்பதாகும். அழியாத ஒன்றை விரும்புவதே குற்றமற்றவரின் செயலாக இருக்கும்.

நாம் பிறரை துன்பப்படுத்தாமல் இருந்தால் நமக்கு நல்ல சாவு வரும். பிறரை துன்பப்படுத்துபவன் நோய்வாய்ப்பட்டு, பிறரால் அவமானப்படுத்தப்பட்டு மனம் நொந்து சாவான். அதிக வட்டி வாங்குவது, வேலை செய்தவனுக்கு கூலி தராமல் இருப்பது போன்றவையும் பாவமே.

இவர்களுக்கு மனம் கருங்கல் போன்று இறுக்கமாக இருக்கும். இவர்கள் இதயத்தில் தலைவன் தங்கமாட்டான். வன்மனம் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவார்கள், பிறவிகள் தொடரும். பாவங்கள் செய்தால் மீண்டும் கருப்பைக்குள் சென்று அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டும்.

மலரை நெருங்க நெருங்க எவ்வாறு நறுமணம் உள்ளதோ, அதுபோல் இறைவனை நெருங்க நெருங்க குணக்கேடுகள் நீங்கி சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு பெற்றால் ஆன்மாவைப் பற்றி அறியலாம், உடலைப் பற்றி அறியலாம்.

இயற்கையின் கூறு பற்றி அறியலாம். ஆன்ம இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கம். ஆன்ம இயக்கமே மனதின் இயக்கம் மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்து புருவ மத்தியில் செலுத்தினால் உடல் மாசு நீங்கும். உடல் மாசு நீங்கினால் உள்ளம் உயர்ந்த உள்ளமாக இருக்கும். உள்ளம் உயர்ந்திருந்தால் மீண்டும் பாவம் செய்ய மாட்டான். மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். அவன் மரணமில்லா பெருவாழ்வை அடைவான். அத்தகையவன் மாசற்றவன், குற்றமில்லாதவன். அவன் திருவடிகளைப் பற்றி பூஜை செய்தால் நாம் பிறருக்கு தீங்கு செய்யாத குணப்பண்பு உண்டாகும். கெடுதல் செய்தவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பு உண்டாகும்.

எனவே, புண்ணியம் செய்வோம்! பூஜை செய்வோம்! மாசற்றவனாக வாழ வழி கிடைக்கும்.

Tags:    

Similar News