மகத்துவம் நிறைந்த தை மாதம் 2024
- உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.
- அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.
உலகில் உயிர்கள் பிறக்க காரணமாக இருப்பது சூரிய ஒளி என்பதால் இந்தியாவில் பெரும்பான்மையான விரதங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் சூரியனின் இயக்கத்தை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படும் தை மாத பண்டிகைகளும் விசேஷங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. தை மாதத்தில் மக்களின் மனதை மகிழ்விக்கும் பண்டிகைகள், காரிய சித்தி தரும் விரத நாட்கள் அதிகம் இருப்பதால் தை மாதம் தனித்தன்மை பெறுகிறது. தை மாதத்தின் சிறப்பு மிக்க விழா, விரத நாட்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
போகிப் பண்டிகை மார்கழி 29 14.1.2024 ஞாயிற்றுக்கிழமை
போகிப் பண்டிகை என்பது தை மாதத்தில் தனது பயணத்தை வடக்கு நோக்கி மாற்றும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் விழா. மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் தேவையற்ற துயரங்களில் இருந்து விடுபட்டு மனதை மகிழ்விக்கும் நல்ல சம்பவங்களை வழங்கும் தை 1-ம் நாளை வரவேற்கும் நாளாகும்.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய குப்பைகளைத் தீயிட்டு கொளுத்த வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் தீய சக்திகள் வெளியேறும். போகியன்று, வீட்டின் வாசலில் பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்ட வேண்டும்.
அத்துடன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தற்காலத்திற்கு ஒத்து வராத கருத்துகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தார்மீகமற்ற மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகியவற்றை உள்ளத்தில் இருந்து வெளியேற்றினால் வாழ்வில் வெளிச்சம் உண்டாகும். இவற்றை மனதில் இருந்து அழித்து ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதை உணர்த்துவது இந்தப் பண்டிகையின் தத்துவமாகும். அதாவது மனதில் இருக்கும் தீய தவறான எண்ணங்களை நீக்கினால் வாழ்வில் இருள் நீங்கும் என்பது இதன் தத்துவமாகும்.
15.1.2024, தை 1 திங்கட்கிழமை தைப்பொங்கல்
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாள் ஒவ்வொரு வருடமும் தை மாதப்பிறப்பன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும் உத்ராயண காலமான தை 1ம் நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், தைத் திருநாள், தமிழர் திருநாள், தை மாதப் பிறப்பு, மகர சங்கராந்தி என பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறது.
உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள். உலக உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து கிடைத்த புது அரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புதிய அடுப்பில் வைத்துப் பொங்கல் செய்து கனிகள், கரும்புடன் சூரியனுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்த பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 6.45- 7.30, 9.00 - 10.30.
16.1.2024, தை 2, செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல்
உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல், கால்நடைகளை சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பொங்கல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். மஞ்சு விரட்டு என்ற பெயருடைய ஜல்லிக்கட்டு வாலிபர்களின் வீர விளையாட்டு. இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும்.
கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை
17.1.2024 தை 3, புதன்கிழமை காணும் பொங்கல்
இது பெண்களுக்கு மிகவும் விசேஷமான நாள். அதிகாலையில் தீர்க்க சுமங்கலி பாக்கி யத்திற்காகவும் உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய நல்ல பலன் கிட்டும்.உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற ஏற்ற நாள். கிராமப்புரங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.
இந்த நாளில் திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.
25.1. 2024 தை 11 வியாக்கிழமை தைப்பூசம். பவுர்ணமி வியாழக்கிழமை குரு வாரம்
குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள் பூசம் சனியின் நட்சத்திரம். ஆக குரு, சனியின் ஆதிக்கம் இணைந்த நாள் என்று கூறலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் பெற குரு, சனியின் ஆதரவு வேண்டும். சனி என்றால் கர்மபலன். குரு என்றால் விருப்பம். ஒருவருடைய விருப்பமும் அவன் அனுபவிக்கப்போகும் கர்ம பலன்களும் ஒன்றாக இருந்து விட்டால் அவன் நினைப்பதுபோல தான் நடக்கும். ஒருவருடைய விருப்பமும் அவன் அனுபவிக்கப்போகும் கர்மபலன்களும் வேறு வேறாக இருந்தால் அவன் நினைப்பது போல் எல்லாம் நடக்காது.
ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம் பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாத குரு, சனி இணைவு தர்மகர்மாதிபதி யோகம். அளவிட முடியாத வெற்றியை தரும் யோகமாகும். அஷ்ட பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறும் குரு,சனி சம்பந்தம் பலவிதமான இன்னல்களை பிரம்மஹத்தி தோஷமாக, சாபமாக தருகிறது.
தர்மகர்மாதிபதி யோகத்தால் மேலும் சாதகமான சுப பலனை அனுபவிக்க தைப்பூச நன்னாளில் இயன்ற தான தர்மங்களைச் செய்ய பலன் இரட்டிப்பாகும்.
பிரம்மஹத்தி தோஷத்தால் மிகுதியான வினைப்பயனை அனுபவிப்பவர்கள் தைப்பூசத்தன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் சென்று அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம். முருகன் மற்றும் சிவ வழிபாட்டிற்கு தைப்பூசம் உகந்த நாள் என்பதால் சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.
ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறையை உணர்ந்து முக்தி அடையலாம் என்பதால் ஜீவ சமாதி அடைந்த மகான்களை ஜோதி வடிவில் வழிபடுவது சிறப்பு.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி தைப்பூ சத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று நடைபெறும் ஜோதி தரிசன விழாவில் கலந்து கொள்வது சிறப்பு.
தை மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடு
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். இதனோடு உத்ராயணத்துக்குரிய சிறப்பும் சேருவதால் தை மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்புடையவையாக கருதப்படுகின்றன.
திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியத்தை அதிகரிக்க செவ்வாய்கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம். தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
ஐ.ஆனந்தி
தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.
ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக்கிழமை நாளில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.
சுக்கர தோஷம் நீங்கும். ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், 8ல் சனி, கேது போன்றவற்றால் மாங்கல்ய பாக்கியம் குறைந்தவர்கள் தை செவ்வாய் கிழமை வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது நலம். கோட்சார ராகு காலபுருஷ பன்னிரெண்டாமிடமான மீனத்தில் பெண் ராசியில் நிற்பது பெண்களுக்கு சுபித்துச் சொல்லக்கூடிய காலம் அல்ல. எனவே பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை, காளி போன்ற உக்ர தெய்வங்களை வழிபட சுப பலன் மிகும்.
9.2.2024 தை 26 வெள்ளிக்கிழமை தை அமாவாசை
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இல்லாதவர்கள் தை அமாவாசை அன்று வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும். முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும். வருடத்தின் அனைத்து அமாவாசை நாட்களிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.
இதுபோன்ற பல்வேறு சிறப்பு நிறைந்த தைமாத விரத நாட்களை பயன்படுத்தி சகல சுப பலன்களும் அடைய நல்வாழ்த்துக்கள்.