சிறப்புக் கட்டுரைகள்

சகோதரி நிவேதிதா தேவி

Published On 2024-12-14 14:45 IST   |   Update On 2024-12-14 14:45:00 IST
  • நிவேதிதா பெண்களுக்காக பணியாற்ற முன்வந்ததை வெகுவாக விவேகானந்தர் பாராட்டினார்.
  • இந்தியக் கலைகளின் உன்னதத்தைக் கண்டு வியந்த நிவேதிதா அவை உரிய விதத்தில் போற்றப்படவில்லையே என்று எண்ணி வருந்தினார்.

இந்தியப் பெண்களுக்கு உத்வேகமூட்டி அவர்களை எழச் செய்ததோடு, இந்திய கலை, விஞ்ஞானம் ஆகியவற்றின் சிறப்பை உலகறியச் செய்து, இந்தியாவில் சுதந்திர விழிப்புணர்ச்சியை ஊட்டிய மகத்தான ஒரு பெண்மணி சகோதரி நிவேதிதை ஆவார்.

பிறப்பும் இளமையும்: மார்கரெட் எலிசபத் நோபிள் 1867-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதியன்று வட அயர்லாந்தில் டங்கனான் என்ற நகரில் மேரி இசபலுக்கும் சாமுவேல் ரிச்மாண்ட் நோபிளுக்கும் மகளாக ஒரு ஸ்காட் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு வயதாகும்போது குடும்பம் இங்கிலாந்தில் மான்செஸ்டருக்கு இடம் பெயர்ந்தது. அவருக்கு பத்து வயது ஆகும்போது அவரது தந்தை இறக்கவே அவர் தனது தாயாருடனும் கூடப்பிறந்த ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி ஆகிய இருவருடனும் அயர்லாந்திற்கு தனது தாத்தாவின் வீட்டிற்குத் திரும்பினார். பதினேழாம் வயதில் அவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிய ஆரம்பித்தார். தனது 24ம் வயதில் அவர் லண்டனுக்கு வந்து ஒரு பள்ளியைத் துவக்கினார். அப்போதில் இருந்தே அவருக்குள் ஒரு ஆன்மீக தாகம் ஏற்பட்டது.

1895-ம் ஆண்டில் அவரது 28-ம் வயதில் சுவாமி விவேகானந்தரை அவர் சந்தித்தார்; அதில் இருந்து அவர் வாழ்க்கைப் போக்கே மாறிப் போனது.

விவேகானந்தருடன் சந்திப்பு: 1895-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்குப் பயணமானார். அங்கு 14 வாரங்கள் தங்கி இருந்தார். நவம்பர் மாதத்தில் ஒரு நாள் லேடி மாரிசன் என்பவரது வீட்டின் வரவேற்பறையில் முதல் முறையாக அவரைச் சந்தித்தார் மார்கரெட் எலிசபெத் நோபிள். முதல் சந்திப்பின்போதே சுவாமிஜியால் கவரப்பட்டார் நோபிள். அவர் சொற்பொழிவு ஆற்றும்போதே இடைமறித்துப் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவரை மறுத்துப் பேசினார். ஆனால் நோபிளின் போக்காலோ அல்லது கேள்விகளாலோ சுவாமிஜி கலங்கவில்லை.

"இப்படித்தான் கேள்விகள் கேட்டும் மறுத்துப் பேசியும் என் குருதேவருடன் ஆறு நீண்ட வருடங்கள் நான் போராடினேன். அதன் விளைவாகத்தான் பாதையின் ஒவ்வொரு பகுதியும் இன்று எனக்குத் தெரிந்திருக்கிறது" என்று கூறிய அவர் நோபிளின் ஆராயும் மனத்தைத் தூண்டினார். படிப்படியாக சுவாமிஜியின் கருத்துக்களால் கவரப்பட்டு முற்றிலுமாக அவரை ஏற்றுக்கொண்டு சிஷ்யையாக ஆனார் நோபிள்.

1898ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் நாளன்று அவர் கொல்கத்தாவை அடைந்தார். நிவேதிதா பெண்களுக்காக பணியாற்ற முன்வந்ததை வெகுவாக விவேகானந்தர் பாராட்டினார்.

அவர் நிவேதிதைக்கு எழுதினார் இப்படி: "உன்னிடம் மூட நம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்கவல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள், அவற்றை விட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை."

1898ம் ஆண்டு மார்ச் மாதம் சுவாமி விவேகானந்தர் மிஸ் நோபிளை அன்னை சாரதாமணி தேவியாரிடம் அழைத்துச் சென்று ஆசி பெறச் செய்தார். மார்ச் 25ம் நாள் அவருக்கு பிரம்மசரிய தீட்சை அளித்ததோடு சகோதரி நிவேதிதை என்ற பெயரையும் சூட்டினார். அன்றிலிருந்து நோபிள், சகோதரி நிவேதிதா தேவி ஆனார்.

1898 நவம்பர் 13-ம் நாள் அன்னை சாரதாமணி தேவியாராலேயே நிவேதிதை வீட்டிலேயே பள்ளி துவங்கப்பட்டது. பெண்கள் அந்தப் பள்ளியில் சேரத் துவங்கினர்.

1899 மார்ச்சில் கல்கத்தாவில் ஏற்பட்ட பிளேக் நோய் கடுமையாக மக்களைத் தாக்கியது. குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் நிவேதிதா சுத்தம் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். யாரும் அவர் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. பார்த்தார் அவர், தானே ஒரு நாள் காலையில் கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு குடிசைப் பகுதிகளில் தெருத்தெருவாக சுத்தம் செய்ய ஆரம்பித்தார். நோயாளிகளுக்கும் உதவினார். இதைப் பார்த்த மக்கள் மனதில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி அவருடன் சேர்ந்து பணியாற்றத் துவங்கினர்.

1902 ஜூன் இறுதியில் விவேகானந்தர் கொல்கத்தா சென்று நிவேதிதா வாங்கி வைத்திருந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தார். பள்ளிக்காக நிவேதிதா வாங்கி வைத்திருந்த நுண்ணோக்கி, கேமரா ஆகியவற்றைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். பள்ளியை விட ஒரு பல்கலைக் கழகத்தையே தான் ஆரம்பிக்க விரும்புவதாக நிவேதிதா தெரிவிக்க, 'நல்லது' என்று அதை ஆமோதித்தார் சுவாமிஜி.

1902, ஜூலை 2ம் நாள் ஏகாதசி தினத்தன்று சுவாமிஜி விரதம் இருந்தார். அங்கு வந்த நிவேதிதைக்கு எல்லாவித உணவு வகைகளையும் தானே பரிமாறி உபசரித்தார். சாப்பிட்டு முடிந்தவுடன் நிவேதிதையின் கையைக் கழுவ அவரே நீர் வார்த்தார்.

இதனால் மனம் உருகிய நிவேதிதை, "சுவாமி! இதெல்லாம் நான் அல்லவா உங்களுக்குச் செய்யவேண்டும். நீங்கள் எனக்குச் செய்யலாமா?" என்று கேட்டபோது பதிலாக சுவாமிஜி கூறினார்: "ஏன், ஏசுநாதர் தம் சீடர்களின் கால்களையே கழுவினாரே!" "ஆனால் அது அவரது கடைசி நாளாயிற்றே" என்ற வார்த்தைகள் நிவேதிதையின் தொண்டையில் சுழன்றன.

இரு நாட்கள் கழித்து ஜூலை நான்காம் நாள் சுவாமிஜி சமாதியானார். செய்தி கேட்டு ஓடோடி வந்த நிவேதிதை சுவாமியின் உடல் அருகே அமர்ந்து அவருக்கு விசிறிக் கொண்டே இருந்தார். சுவாமிஜி தனக்கு காவி உடை தரவில்லையே என்ற ஏக்கம் நிவேதிதைக்கு இருந்தது. சுவாமிஜியின் திருமேனி சிதையில் எரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று சுவாமிஜியின் காவி உடையில் இருந்து ஒரு துண்டு காற்றில் மிதந்து வந்து நிவேதிதையின் மடியில் விழுந்தது. மனம் உருகி அழுதார் நிவேதிதை.

ஜகதீஷ் சந்திர போசுக்கு தந்த ஆதரவு: 1899-ம் ஆண்டில் பாரிசில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்தபோது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார். ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை உணர்ந்து கொண்ட நிவேதிதா தேவி அவரை நன்கு ஊக்குவித்ததோடு அவருக்குப் பண உதவி செய்தார். தங்க இடம் தந்தார். ஆய்வு லாபரட்டரியை அமைக்கவும் உதவி செய்தார்.

போசும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900-ம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயில் இருந்து குணமடையும் வரை செய்தார்.

பாரதியாருக்கு உத்வேகமூட்டல்: 1905ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மகாசபை காசியில் கூடியது. அதில் கலந்து கொண்ட மகாகவி பாரதியார் திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்றார். அங்கு டம்டம் என்ற இடத்தில் வசித்து வந்த சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார்.

அவரிடம் நிவேதிதா, "உன் மன பேதங்களைக் களைந்து விடு. சாதி மதம் பிறப்பு ஆகியவை காரணமாக ஏற்படும் வேற்றுமைகளை மறந்து விடு. உன் இதயத்தில் அன்பு குடி கொள்ளட்டும். வரலாற்றில் நீ ஒரு தெய்வப் பிறவியாக விளங்குவாய்" என்று ஆசி கூறினார்.

ஏன் மனைவியை அழைத்து வரவில்லை' என்று நிவேதிதா கேட்க, " எங்கள் குடும்பங்களில் பொது இடங்களுக்கு மனைவியரை அழைத்துச் செல்வதில்லை" என்றார் பாரதியார்.

இதனால் வெகுண்ட நிவேதிதா, "சமூகத்தில் ஒரு பாதியை அடிமைப்படுத்தி வைக்கும்போது மறு பாதி எப்படி சுதந்திரம் பெற முடியும்?" என்று கூறி பெண் விடுதலைக்கான வித்தை பாரதியார் மனதில் ஊன்றினார். அத்தோடு இமயமலைப் பகுதியில் மட்டுமே கிடைக்கும் கிடைத்தற்கரிய சருகு ஒன்றை பாரதியாரிடம் அளித்தார்.

அவர் கொடுத்த சருகை தன்னுடன் நெடுங்காலம் அவர் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். நிவேதிதையால் ஊக்கமூட்டப்பட்ட பாரதியார் பெண் விடுதலைக்கான எழுச்சி மிகும் பாடல்களைப் பாடியதோடு சமூகத்தில் தானே பெண்களுக்குச் சரிசமமாக உரிமைகளைத் தந்து வாழ்ந்து காண்பித்தார்.

நிவேதிதையைத் தன் ஞான குருவாக பாவித்த பாரதியார் அவரைப் பற்றி கீழ்க்கண்ட ஒரு கவிதையையே புனைந்துள்ளார்.

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்

கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா

டாம் பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்

நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

அத்துடன் மட்டுமல்லாது அவருக்கு 1909ம் ஆண்டு தனது ஜன்ம பூமி என்ற நூலை சமர்ப்பித்து "எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதினார்...

பெண்களுக்குக் கல்வி: ஒரு வங்காளப் பெண்மணிக்கு பிரெஞ்சு மொழியையும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொடுப்பதும் என்ன பயனை இந்தியாவுக்குத் தரும் என்று வினவினார் அவர். அவர்கள் இந்திய சரித்திரத்தையும் இந்திய பிரதேசங்களையும் அல்லவா நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் நமது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், தேசிய சரித்திரம், நமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பெண்களுக்கு உணர்த்தலானார். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்பதால், "படங்கள், படங்கள், படங்கள் – இவையே ஒருவருக்கு எண்ணங்களை ஆழ்ந்து பதியச் செய்யும் என்றார் அவர். 'எந்த ஒரு பெண்மணிக்கு எல்லையற்ற தயை இருக்கிறதோ, எவளுக்கு தேச சரித்திரம் நன்கு தெரிந்திருக்கிறதோ, எந்தப் பெண்மணி நல்ல தீர்த்தங்களை உருவாக்குகிறாரோ அந்தப் பெண்மணிகள் வாழும் நாடே உண்மையான கல்வி அறிவைக் கொண்ட நாடாகும்' என்று கூறிய அவர் இந்திய சரித்திரத்தை நன்கு அனைத்துப் பெண்களுக்கும் கற்பிக்க ஆரம்பித்தார்.

இந்தியக் கலைகளுக்கு ஆதரவு: இந்தியக் கலைகளின் உன்னதத்தைக் கண்டு வியந்த நிவேதிதா அவை உரிய விதத்தில் போற்றப்படவில்லையே என்று எண்ணி வருந்தினார். அதைப் பற்றிய சிறப்புகளை எல்லாம் அவ்வப்பொழுது அனைவருக்கும் உணர்த்தலானார்.

அஜந்தா, எல்லோரா குகைகளுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பார்க்க பல குழுக்களையும் அவர் அனுப்பினார். அது மட்டுமின்றி கலைகள் மற்றும் அதன் சிறப்புகளைத் தொகுத்து ஏராளமான கட்டுரைகளை எழுதலானார்.

மறைவு: 1911-ம் ஆண்டு சகோதரி நிவேதிதா ஜகதீஷ் சந்திர போசுடன் டார்ஜிலிங் சென்றார். அங்கு அவருக்கு ரத்த பேதி வரவே அக்டோபர் 13-ந் தேதி உயிர் துறந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இந்து முறைப்படி நடைபெற்றன. அவரது நினைவாக டார்ஜிலிங்கில் அவர் எரிக்கப்பட்ட இடத்தில் "இந்தியாவிற்காக அனைத்தையும் அளித்த சகோதரி நிவேதிதா இங்கு இளைப்பாறுகிறார்" என்ற அருமையான வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News