சிறப்புக் கட்டுரைகள்

சிங்கத்திடம் சிக்கிய மான்... மீனா மலரும் நினைவுகள்

Published On 2024-10-07 14:51 IST   |   Update On 2024-10-07 14:51:00 IST
  • பிரகாஷ்ராஜ் எல்லோரையும் எளிதில் ஏமாற்றும் கேரக்டர். ஆனால் நான் மட்டும் அவரிடம் ஏமாற மாட்டேன்.
  • இந்த படத்தில் நான் நடித்து கொண்டிருந்தபோது ஜப்பான் ரசிகர்கள் சிலர் என்னை தேடி வந்திருந்தார்கள்.

இரண்டு வில்லன்களிடம் ஒரு பெண் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்?

பிரகாஷ்ராஜ், ரகுவரன்... இந்த இருவரது மிரட்டலான வில்லன் தோற்றத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

அப்படிப்பட்ட அவர்கள் இருவருக்கிடையேயும் சிக்கி கொண்ட அனுபவம் எனக்கு உண்டு.

'தயா'

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடி நான். அது மட்டுமா... பிரகாஷ்ராஜுக்கும் எனக்கும் ஒரு டூயட் பாட்டும் உண்டு. படத்தின் தொடக்கத்தில் வில்லன் போல் வருவார். பின்னர் ரொமான்டிக் நாயகனாக மாறுவார்.

வில்லத்தனமாக சந்தித்து பழக்கப்பட்ட நாயகனுடன் நான் ரொமான்டிக்காக நடிப்பது... அதே போல் வில்லன் பாத்திரத்தில் அதிகமாக கலக்கியவர் நாயகனாக நடித்து இருப்பது... எங்கள் இரு வருக்குமே அந்த படம் ஒரு மாறுபட்ட அனுபவம்.

எங்களுக்குள் நடக்கும் டூயட் பாடலான

"ஆணழகா... ஆணழகா...

என்னை கவ்வ வந்த நீ பேரழகா

நீ அழகா... நீ அழகா...

பொய் சொல்ல சொல்ல தமிழ் அழகா?" என்ற பாடல் நான் ரசித்த பாடல். எல்லோரையும் கவர்ந்த பாடல்.

தயா படத்தில் காநாயகனும் நானும் எலியும் பூனையும் போல்தான் இருப்போம். வழக்கமான கேரக்டர் கிடையாது. ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

பிரகாஷ்ராஜ் எல்லோரையும் எளிதில் ஏமாற்றும் கேரக்டர். ஆனால் நான் மட்டும் அவரிடம் ஏமாற மாட்டேன்.

காட்சிக்கு காட்சி ரொம்பவே திரில்லிங்காக இருக்கும். இந்த மாறுபட்ட கேரக்டர், கதை எனக்கு ரொம்பவே பிடித்தது. எனவேதான் இந்த படத்தில் நடிக்கவும் ஒத்துக்கொண்டேன். எதிர்பார்த்தது போலவே பிரகாஷ்ராஜ், ரகுவரன் சாரோடு நடித்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பிரகாஷ்ராஜ் அப்போது தனது முதல் மனைவி லலிதாகுமாரியை பிரியவில்லை. லலிதாகுமாரி என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார். ஷூட்டிங்கின்போது அவர் சமைத்து கொடுத்து அனுப்பும் உணவு வகைகள் வித்தியாசமானது. ருசியும் வித்தியாசமாக இருக்கும். அதை ரசித்து ருசித்து சாப்பிட்ட அனுபவம் என்றும் மறக்காது. இந்த படத்தில் லட்சுமி அம்மாவும் உண்டு. அவர் ஆதரவற்றோர் விடுதி நட த்தும் பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மிக மூத்த கலைஞர்களில் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பவர். நிறைய ஆலோசனைகள் வழங்குவார்.

இந்த படத்தில் நான் நடித்து கொண்டிருந்தபோது ஜப்பான் ரசிகர்கள் சிலர் என்னை தேடி வந்திருந்தார்கள். படப்பிடிப்பு தளத்துக்கே அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜப்பானிய மொழி தெரியாது. கை சைகைகளும், புன்னகையும் மட்டுமே நாங்கள் பேசிக்கொள்ளும் மொழியாக இருந்தது. நின்று கும்பிடுவார்கள், சிரிப்பார்கள், கை குலுக்குவார்கள். ஜப்பானில் இருந்து இவ்வளவு தூரம் நம்மை தேடி வந்திருக்கிறார்களே என்று நினைத்தபோது பாவமாக இருந்தது.

எனவே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நானும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். சில பொருட்களை என்னிடம் தந்தும் புகைப்படும் எடுத்து கொண்டார்கள்.

இதை சற்று தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த லட்சுமி அம்மா நான் திரும்பி சென்றதும் என்னை அழைத்தார். ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கணும். அது தப்பில்லை. ஆனால் இவர்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? உன் படத்தை வைத்தே "பிசினஸ்" கூட பண்ணுவார்கள். அந்த பொருட்களை நீதான் அறிமுகப்படுத்தினாய் என்று விளம்பரப்படுத்தி வியாபாரமும் செய்வார்கள். ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

அதுவரை இப்படியெல்லாம் பண்ண முடியும் என்று எனக்கு தெரியாது. இதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கு என்பதை அவர் சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

அதன் பிறகு கொஞ்சம் உஷாராகி கொண்டேன். ஜப்பானில் எனக்கு ரசிகர் மன்றங்களும் வைத்திருந்தார்கள்.

இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பல தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

(தொடரும்...)

 

செல்போன் 'கெத்து...'

கேரவன் வந்ததை போலவே செல்போன் அறிமுகமான காலமும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எண்களை சுழற்றி மட்டுமே போன் செய்து கொண்டிருந்தோம். கொஞ்சம் அட்வான்ஸ் என்றால் 'காட்லெஸ் போன்' அவ்வளவு தான் இருந்தது.

செல்போன் வந்ததும் அதிலும் எண்களை அழுத்தி யாரையும் அழைக்க முடியும் போன் போல் பேச முடியும் என்றதும், ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது செல்போன் வைத்திருந்ததையே ஒரு கெத்தாக நினைப்போம்.

ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு எடுத்து செல்வேன். அங்கிருந்து அம்மாவுக்கு போன் செய்து 'அம்மா... இதை சமைத்து கொடு... அதை சமைத்து கொடு' என்று சொல்வேன்.

அதன்பிறகு அதிலும் 3ஜி, 4ஜி, 5ஜி என்று செல்போனுக்குள் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் அன்றே வந்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்...? என்று இப்போது நினைக்க தோன்றுகிறது. காலப்போக்கில் இன்னும் என்னென்ன மாற்றங்களை சந்திக்க போகிறோமோ? மாற்றம் ஒன்றுதானே மாறாதது?

Tags:    

Similar News