சிறப்புக் கட்டுரைகள்
null

மீனா மலரும் நினைவுகள்.... நடிப்புக்கும் ஒத்திகை உண்டு

Published On 2024-09-09 14:55 IST   |   Update On 2024-09-09 14:59:00 IST
  • நடிப்பதை விட கூடுதல் திறமையுடன் டப்பிங் பேச வேண்டும் என்பதே உண்மை.
  • பாடல் காட்சிகளில் தான் அதிகமாக மேக் அப் போட்டுக் கொள்ள முடியும்.

நடிப்பு...

திரையில் பார்ப்பது மட்டுமல்ல. அந்த திரைக்குப்பின்னால் எத்த னையோ விஷயங்கள் இருக்கின்றன.

படங்களில் வசனம் பேசுகிறோம். குடும்ப பாங்கான காட்சிகள், காதல் காட்சிகள் என்று பலவிதமான காட்சிகளில் நடிக்கிறோம்.

அந்த அந்த காட்சிக்கு ஏற்ப முகபாவனைகளும் இருந்தால் தான் காட்சி உயிரோட்டமாக இருக்கும். சிரிப்பு, அழுகை, சோகம், புன்முறுவல், வருத்தம், காதல் மோதல், கோபம், பயம் என்று எத்தனையோ விதமான முகபாவனைகள். அதற்கு ஏற்ப உடல் அசைவுகள் என்று எல்லாமும் நடிப்பில் இணைந்து வர வேண்டும்.

சும்மா சொல்லக்கூடாது மீனா அந்த காட்சியில் கலக்கி இருக்காங்க... இந்த காட்சியில் சொதப்பி புட்டாங்க... கொஞ்சம் இப்படி செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லலாம்.

காஸ்ட்டியூம், மேக்-அப் எல்லாம் ரெடி... கேமராவுக்கு முன்னால் போய் நின்றதும் காட்சி படமாகி விடுவதில்லை.

காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு ஒத்திகை நடக்கும். ஒத்திகையில் முழு திருப்தி ஆன பிறகு தான் படப்பிடிப்பு நடக்கும்.

ஒத்திகை என்பது எளிதானதல்ல. ஒரு காட்சியில் எப்படி நடக்க வேண்டும், எங்கே திரும்ப வேண்டும். எப்படி நிற்க வேண்டும். முகபாவனை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் பார்ப்பார்கள்.

நாங்களும் நடப்போம்... எங்களோடு கேமரா டிராலியும் நகர்ந்து வரும். சில நேரங்களில் முதல் முறை சரியாக வராது. இரண்டாவது முறைகூட சரியாக வராமல் போகலாம். எவ்வளவு கஷ்டப்பட்டாவது காட்சிக்கு ஏற்ற வகையில் நடித்து காட்டினால் தான் ஓ.கே. ஆகும்.

முக்கியமாக ஒரு காட்சியில் நடிக்கும்போது எதுவரை செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் அடையாள மார்க் போட்டு இருப்பார்கள். சரியாக அந்த இடத்தில் போய் நிற்க வேண்டும்.

இல்லாவிட்டால் கேமரா ஆங்கிள் மற்றும் 'போக்கஸ்' கிடைக்காது.

சரியாக அந்த இடத்தில் போய் நிற்பதும் எளிதானதல்ல. ஏனெனில் நடிக்கும்போது அந்த இடத்தை பார்க்க முடியாது. கேமராவையே பார்த்தபடி ஆடுவது, பாடுவது, டயலாக் பேசுவது, அதற்கு ஏற்ப முகபாவனைகள் வைப்பது போன்றவற்றில் கவனமாக இருக்கும்போது அடையாள இடத்தை பார்க்க முடியாது. அதற்காக அந்த இடத்தில் தடுத்து நிறுத்த நாற்காலி, ஸ்டூல் எதையாவது போட்டிருப்பார்கள்.

ஆனால் நான் எதுவும் வேண்டாம் சரியாக அடையாளத்தில் நின்று விடுவேன் என்பேன். அதைப்போலவே நின்று விடுவேன்.

எல்லோரும் ஆச்சரியமாக கேட்பார்கள். 'மேடம், எப்படி உங்களால் சரியாக வந்து நிற்க முடிகிறது' என்பார்கள்.

எனக்கும் இதுவரை அது எப்படி முடிகிறது என்பது புரியவில்லை. எல்லாம் கடவுள் செயல் தான். சின்ன வயதில் நடிப்புன்னா என்ன என்றே தெரியாது. அங்குபோய் நில்லு. இங்கு போய் நில்லு. அப்படி திரும்பு.

அங்கே ஓடு என்பார்கள். அவர்கள் சொல்வதை செய்வேன் அவ்வளவு தான். ஆனால் அதனால் கிடைத்த பயிற்சியால் தான் கதாநாயகி ஆனபிறகு ஒரு காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று என்னால் முடிவு செய்ய முடிந்தது.

பாடல் காட்சிகளை பொறுத்தவரை மூவ்மென்ட்ஸ் ஒத்திகை பார்க்க வேண்டும். இப்படி கஷ்டங்களையும், சிரமங்களையும் சந்தித்து நடித்து தான் ஒரு காட்சி உருவாகிறது.

இவை எல்லாவற்றையும் விட சவாலானது டப்பிங் பேசுவது. காட்சிகளை மெருகேற்றும் வலிமை டப்பிங்கில் இருக்கிறது. கேமரா முன்பு எல்லா விதமான உணர்ச்சிகளையும் கொண்டு வந்து நடித்து விடுவோம். ஆனால் டப்பிங் என்பது அப்படி அல்ல. ஒரு அறையில் நான் தனியாக இருந்து பேசுவது.

கேமரா முன்பு எந்த காட்சிக்கு எந்த விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினோமோ அதே உணர்ச்சிகளை அப்போதும் வரவழைத்து அதற்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு பேச வேண்டும். சில காட்சிகளில் கிடைக்காத திருப்தியை டப்பிங் பேச்சு மூலம் மாற்றி அமைத்து விட முடியும்.

நடிப்பதை விட கூடுதல் திறமையுடன் டப்பிங் பேச வேண்டும் என்பதே உண்மை. ஆரம்பத்தில் என் குரல் மிகவும் மெல்லியதாக 'கீச்' குரலாக இருந்தது. எனவே டப்பிங் பேசமாட்டேன்.

 

ராஜகுமாரன் படத்தில் முதல் முதலாக டப்பிங் பேச தொடங்கினேன். அதன் பிறகு என் சொந்த குரலிலேயே பேசி வருகிறேன்.

அப்படியும் பிசியாக இருந்த கால கட்டங்களில் சில படங்களில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்தும் என்னால் பண்ண முடியாமலும் போனது.

காஸ்ட்டியூமை பொறுத்தவரை என்ன மாதிரி உடை. கலர் எப்படி இருக்க வேண்டும்? டிசைன் எப்படி இருக்க வேண்டும் அதற்கேற்ப நகைகள் எப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை நானே பெரும்பாலும் தேர்வு செய்து விடுவேன்.

'தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா...' என்ற பாடலுக்கு தருண் மாஸ்டர் தான் நடன பயிற்சி அளித்தார். அவரை பொறுத்தவரை அழகாக காஸ்ட்டியூமை தேர்வு செய்து விட்டார்.

அதேபோல் மேக்-அப் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றையும் நானே பெரும்பாலும் தேர்வு செய்து கொள்வேன்.

பாடல் காட்சிகளில் தான் அதிகமாக மேக் அப் போட்டுக் கொள்ள முடியும். பல மாடல்களில் ஸ்டிக்கர் பொட்டு அதன் மீது கற்கள் இருக்கும். அது அறிமுகமான கால கட்டம். வில்லன் படத்தில் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அந்த மாதிரி பொட்டை நெற்றி மட்டுமில்லாமல் முகத்தில் பல இடங்களில் ஒட்டி வித்தியாசமாக ஒரு மேக்-அப் செய்து இருந்தேன்.

ஏய் இது என்ன மேக் அப்?

நல்லாவா இருக்கு என்றார்கள். ஆனால் படத்தில் பார்த்தபோது நன்றாக இருந்தது.

வெளிநாடுகளுக்கு செல்லும்போது பொட்டுகள், நகைகள் என்று மேக்-அப் பொருட்கள் புதுமையாக இருந்தால் அதை வாங்கி விடுவேன். அந்த காலங்களில் மேக்-அப் சாதனங்கள் அவ்வளவாக நம் நாட்டில் கிடைப்பதில்லை பான் ஸ்டிக், பான்கேக் வகைகள் தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லா மாடல்களும் நம் நாட்டிலும் கிடைக்கிறது.

அப்பல்லாம் எனது சருமத்துக்கு பொருந்தும் வகையில் மஞ்சள் பின்னணியில் முகத்துக்கு மேக்-அப் போடுவேன். அது எடுப்பாக இருக்கும். இப்போது எல்லாமே மாறிவிட்டது. ரசிகர்கள் டேஸ்டும் அதற்கேற்ப மாறிவிட்டது. கேமராக்கள் டிஜிட்டல் மயமாகி விட்டது.

ஒரு சிறு கடுகளவு பரு இருந்தாலும் தெரிந்துவிடும். அதேபோல் விதவிதமான மேக்-அப் சாதனங்களை ஆன்-லைனிலேயே தேடி வாங்கி விடவும் முடிகிறது.

கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? இதை விட ஆச்சரியமெல்லாம் இருக்கிறது. அது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்...)

முகத்துக்கு மெருகேற்ற பப்பாளியும், வாழைப்பழமும் போதுமோ...

பெண்கள் எல்லோருமே முக அழகை விரும்புவார்கள். அதிலும் என்னைப் போன்ற நடிகைகளுக்கு முக வசீகரம் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே முக அழகை பராமரிப்பதில் கவனமாக இருப்போம்.

அந்த காலத்தில் மேக்கப் போட பான் ஸ்டிக்தான் இருந்தது. அது குளிர்நேரத்தில் கட்டியாகி விடும். அதன்பிறகு சூடுபடுத்தி முகத்தில் போடுவேன். அப்போதே வெளிநாடுகளில் பல நவீன மேக்கப் சாதனங்கள் புழக்கத்தில் இருந்தன. அவ்வப்போது வெளிநாடு செல்லும் போது வாங்குவேன். 'ஐலேஷ்' வாங்கி வந்து புருவத்தில் போடுவேன். அதற்காகவே குளோசப் ஷாட் கேட்டதும் உண்டு. நான் பொதுவாகவே ரசாயனம் கலந்த செயற்கையான தயாரிப்புகளை முகப்பூச்சுக்கு பயன்படுத்த மாட்டேன். பிளீச்சிங், பேசியல் கூட செய்ததில்லை. கொரியன் கண்ணாடி ஸ்கின்.. இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறார்கள். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பப்பாளி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், மாம்பழம், பால் போன்றவற்றைத்தான் போடுவேன். கடலை மாவை பாலில் குலைத்தும் போடுவேன். இவைகளால் முகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது. முகப்பொலிவு கூடும்.

ஆனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி இன்றைய இளம்பெண்கள் அதை நாடுகிறார்கள். அதை தவிருங்கள் என்பதே எனது வேண்டுகோள். என் மகள் நைனிகாவிடமும், இந்த ஆலோசனைகளை சொல்வேன். ஆனால் அவளோ 'மம்மி... ரிவியூ' நல்லா போட்டிருக்காங்க என்கிறார்.

அப்போ யாரோ போட்ட ரிவியூவை நம்புகிறாய். அம்மா சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா என்பேன். அவளால் எந்த பதிலும் சொல்ல முடிவதில்லை. பெரும்பாலான இளம்பெண்கள் இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News