மகளிர் மருத்துவம் - பருவம் அடையும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- பெண்களுக்கு உடல் அளவில் 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறது.
- ஆண்களை பொருத்தவரைக்கும் உயிரணுக்கள் உருவாகி வெளியே வருவது என்பது அவர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றமாகும்.
குழந்தைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... 11 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களை டீன்ஏஜ் வயதினர் அல்லது பதின்ம வயதினர் என்று அழைப்போம். அதாவது இவர்கள் வளர் இளம் பருவத்தினர் ஆவார்கள். இந்த வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்து மாறி சிறுவர், சிறுமி என்கிற பருவத்தை அடையும் அவர்கள் டீன்ஏஜ் வயது முடியும் வரை அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஏராளமான மாற்றங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள். இந்த காலகட்டம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தை வெற்றிகரமாக கடப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும்.
ஆனால் இந்த பருவ வயது காலகட்டத்தில் மனதளவில் தடுமாறி திசைமாறி செல்பவர்களின் வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. இந்த பதின்ம வயது காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் காணலாம்.
பெரும்பாலான வீடுகளில் பதின்ம வயதினர் இருப்பார்கள் என்பதால் அவர் களை எப்படி வழிநடத்துவது என்பதை அவர்களின் பெற்றோர்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பதின்ம வயதில் உடல், மனம் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்:
பெண்களுக்கு உடல் அளவில் 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சில குழந்தைகளுக்கு உடல் ரீதியிலான மாற்றங்கள் அதற்கு முன்பே வரக்கூடும் என்பதால் வளர் இளம் பருவம் என்பதை நாம் 11 வயது என்று வைத்துக் கொள்கிறோம்.
பொதுவாக இந்த வளர் இளம் பருவத்தில் ஏற்படுகிற மாற்றங்கள் வெளித்தோற்றத்திலும் பெண்களுக்கு பல பிரச்சினைகளாக உருவெடுக்கிறது. அதாவது உடல் ரீதியாக, மன ரீதியாக, குடும்ப ரீதியாக, சமுதாய ரீதியாக இந்த மாற்றங்கள் நிகழ்வது குறிப்பாக 13 வயதில் இருந்து 19 வயது வரைக்கும் தான்.
இந்த பதின்ம வயது கால கட்டத்தை ஒவ்வொரு பெண் குழந்தைகளும் கடந்து வருகிறார்கள். இன்று நாம் எல்லோருமே இந்த கால கட்டத்தை கடந்து தான் வந்திருக்கிறோம். எல்லோருமே இந்த காலகட்டத்தில் ஏற்படுகிற பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் உடல் ரீதியான பலவிதமான மாற்றங்களை நமக்கு கொடுக்கிறது. உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல, மன ரீதியான பல மாற்றங்களும் ஏற்படுகிறது.
அதாவது இவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகளில் உடல் ரீதியான மாற்றம் இருக்கும். மன ரீதியான மாற்றம் இருக்கும். உளவியல் ரீதியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும். அதனுடன் அவர்கள் இந்த காலகட்டத்தை எதிர்நோக்குகிற தன்மைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வரும் காலகட்டம்:
ஒரு பெண், குழந்தை பருவத்தில் இருந்து வளர் இளம் பருவத்துக்கு போகும்போது இவர்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள், ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் ஆகியவை அனைத்தும் ஏற்படுகிறது. வளர் இளம் பருவம் என்பதை எதை வைத்து குறிக்கிறோம் என்றால் ஒரு பெண்ணை பொருத்தவரைக்கும் அவருக்கு மாதவிலக்கு வரும் காலகட்டம் ஆகும்.
ஆண்களை பொருத்தவரைக்கும் உயிரணுக்கள் உருவாகி வெளியே வருவது என்பது அவர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றமாகும். அதாவது அவர்களின் வாழ்க்கையில் இதுவரை நடைபெறாத ஒரு விஷயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆண் குழந்தையாக இருந்தால் அவர்களுக்குரிய மாற்றங்கள் அனைத்தும் ஏற்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால் உடல் அளவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டுமோ அவை அனைத்தும் நிகழ்கிறது. இதுதான் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் ஆகும்.
இன்றைக்கும் உலக அளவில் அதிக அளவு மக்கள்தொகை கொண்டவர்களாக வளர் இளம் பருவத்தினர் தான் இருக்கிறார்கள். அவர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் மிகமிக அதிகம். இதில் பல நேரங்களில் குடும்பங்களில் வரும் பிரச்சினைகளும் இந்த வளர் இளம் பருவத்தினரை வைத்துதான் ஏற்படுகிறது.
இவர்களை எப்படி கையாளுவது, இவர்களை எப்படி வழிநடத்துவது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே அவர்களை பற்றி பல நேரங்களில் தெரிவது இல்லை. இந்த வளர் இளம் பருவத்தில்தான் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வருகிறது. பருவ வயதை அடைந்து விட்டோம் என்கிற சிக்னல் ஆரம்பித்தவுடன் அவர்களுக்கான பிரச்சினைகளும் தொடங்குகிறது.
உடல் எடை, உயரம் கூடுதல், தோற்றங்களில் மாற்றம் ஏற்படுதல்:
இவர்களுக்கு பருவ வயதுக்கான மாற்றங்களை கொடுக்கும் நாளமில்லா சுரப்பிகள் வேலை செய்ய தொடங்கியவுடனே கூடவே இந்த பிரச்சினைகளும் ஆரம்பிக்கிறது. இவர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? ஹார்மோன் தூண்டுதல் காரணமாக உடல் எடை கூடுகிறது. உயரம் கூடுகிறது. தோற்றங்களில் மாற்றம் ஏற்படுகிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு முழுமையான பெண்ணுக்குரிய எல்லா மாற்றங்களும் உடலில் நிகழ்கிறது.
ஆண்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கும் உயரம், எடை கூடுகிறது. குரலில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கும் உடல் அளவில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஒரு பெண் குழந்தைக்கு மாதவிடாய் வந்து விட்டது என்றால் அவர்கள் பருவம் அடைந்து விட்டார்கள் என்று அர்த்தம். ஒரு பெண் பூப்பெய்துவது நல்ல அறிகுறி என்று நினைக்கிறோம். ஆனால் அதன்பிறகு அந்த குழந்தைகள் எதிர்நோக்கும் மாற்றங்களை நாம் யாரும் உணருவது இல்லை. அதனால் தான் பெரிய பிரச்சினையே வருகிறது.
உடல் ரீதியாக மாற்றம் வந்து விட்டதால் அந்த பெண் குழந்தைகள் திருமணத்துக்கு தயாராகலாம், குழந்தை பேறு பெறுவதற்கு தயாராகலாம். ஏனென்றால் அவர்களுக்கு முட்டைகள் வெளிவர ஆரம்பித்து விடுகிறது.
எனவே இந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெற்றோர்களின் ஒரே பயம், குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், தவறான முறையில் கர்ப்பம் தரித்து விடக்கூடாது என்கிற எண்ணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் குறித்து உங்கள் பெண் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி அவர்களை எந்த வகையில் அதுபற்றி அறிந்து கொள்ளக் கூடியவர்களாக ஆக்குகிறீர்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பாலியல் உறவு பற்றி பேச தயங்கும் பெற்றோர்கள்:
பள்ளிக்கூடங்களில் கூட இதுபற்றி யாரும் தெளிவான வகையில் பேசுவதும் இல்லை, சொல்வதும் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த குழந்தைகளுக்கு இதைப்பற்றி தெளிவான ஒரு விழிப்புணர்வு இல்லை. இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு ஏற்கனவே உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் ஒரு மனக்குழப்பம் இருக்கும்.
நாம் இதுவரை குழந்தைகளாக இருந்தோம். தற்போது இந்த மாதிரி திடீரென்று வளர்ந்து விட்டோமே, இதுபற்றி உயிரியல் ஆசிரியரிடம் கேட்டால் என்னவென்று தெரியும் என்று நினைத்து அவர்களிடம் கேட்டால் உனக்கு மாத விடாய் வந்து விட்டது, உன்னுடைய இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சி ஆகிறது. உனக்கு முட்டைகள் வெளிவர ஆரம்பித்து விட்டது என்று சொல்வார்கள்.
ஆனால் இதில் முக்கியமான இன்னொரு விஷயம், அந்த சிறுமிகளுக்கு முட்டைகள் வெளிவரும் போது, ஒரு ஆணுடைய உயிரணு சேர்ந்தால் குழந்தை உருவாகும் என்பதை நிறைய நேரங்களில் யாரும் அவர்களுக்கு புரியும் படியாக சொல்வது இல்லை. அப்படி சொல்வதற்கு பெற்றோர்கள் பலரும் தயக்கம் காட்டுவார்கள்.
ஏனென்றால் குழந்தை எப்படி உருவாகும்? பாலியல் உறவு கொள்ளும்போது தான் உருவாகும். ஆனால் அந்த பாலியல் உறவுகளை பற்றி சிறுமிகளுக்கு நாம் யாரும் சொல்லித் தருவதில்லை. அதனுடைய மாற்றங்களால் என்ன நிகழும் என்பதை நாம் அவர்களுக்கு சொல்வ தில்லை.
ஆனால் இந்த காலகட்டத்தில் ஹார்மோன் களால் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே முக்கியமான விஷயம் நிகழ்கிறது. அதாவது அவரவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.
அந்த மாற்றங்கள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக அடுத்தடுத்து அவர்களுக்கு நிகழப்போவது என்ன...? அடுத்த வாரம் பார்க்கலாம்.