சிறப்புக் கட்டுரைகள்

இதழியல் அறிஞர் மா.ரா.அரசு

Published On 2025-04-10 16:46 IST   |   Update On 2025-04-10 16:46:00 IST
  • மா.ரா. அரசு பச்சையப்பன் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • கடந்த கால இதழ்கள் தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான சொத்து என்றும் அவர் குறிப்பிடுவதுண்டு.

*தமிழறிஞரான காலஞ்சென்ற மா.ரா. அரசுவைப் பார்த்தவர்கள் இப்போதும் அவரது வசீகரமான தோற்றத்தை மனத்தில் நினைத்து மகிழ்வார்கள். கம்பீரமாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் போல் இருப்பார் அவர். மாநிறம். சுருள் முடி. களையான முகம். நல்ல உயரம்.

ராஜாவுக்கேற்ற உடைகளை உடுத்தச் சொல்லிக் கையில் ஒரு வாளையும் கொடுத்துவிட்டால் அவர் ராஜாவே தான். மா.ரா. அரசு அல்ல, மாறா அரசர் என்று தோன்றும். எல்லோரிடமும் பிரியம் செலுத்தி, அன்பு மயமாக வாழ்ந்த உண்மையான தமிழறிஞர் அவர். அவர் யாரையும் வெறுத்ததில்லை. அவரையும் யாரும் வெறுத்ததில்லை.

அவரது மாணவர்கள் பலர் அவரை உயிருக்குயிராக நேசித்தார்கள். அவர் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னாலும், அவரைச் சுற்றி அவர்மேல் அன்பு செலுத்தும் மாணவர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்தது. பல மாணவர்கள் அவரை தெய்வம்போல் கருதினார்கள்.

மா.ரா. அரசு பச்சையப்பன் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடக்கத்தில் தம் தந்தையாரான தமிழறிஞர் மா. இராசமாணிக்கனாரைப் போல் வரலாற்றுத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தார். மா.ரா.அரசுவின் அண்ணன் மா.ரா. இளங்கோவன் இதழியலில் ஆர்வம் கொண்டவர். இளங்கோவன் காலமான பிறகு அரசுவுக்கு இதழியலில் ஆர்வம் கூடியது.

பின்னர் வரலாற்றுத் துறையை விட்டுவிட்டு முழுமையாகத் தம்மை இதழியல் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள் என்பன போன்ற தலைப்புகளில் பத்துக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தினார்.

முக்கியமான பல அறிஞர்களை அழைத்து அந்தக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கச் செய்தார்.

அப்படி வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றைக் கூட விட்டுவிடாமல் தொகுத்து நூல்களாக ஆக்கி வெளியிட்ட பெருமையும் அவருக்கு உண்டு. அவர் வெளியிட்ட இதழியல் சார்ந்த தொகுப்புகள் ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆய்வுத் தகவல்களைத் தாங்கிய தமிழின் காகிதப் புதையல்கள்.

அந்த ஆய்வு நூல்களைக் கொண்டு வருவதற்காக அவர் உழைத்த உழைப்பு நினைக்க நினைக்க பிரமிப்பைத் தருவது. ஒவ்வொரு தொகுப்பு நூலையும் உருவாக்க இரவு பகல் பாராமல் உழைத்தார்.

தம் உடல் நலனைக் கூடப் புறந்தள்ளிக் கருமமே கண்ணாக அவர் உழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்துப் பிழை இல்லாமல் நூல்கள் வெளிவர வேண்டும் என்பதில் தனிப்பட்ட அக்கறை காட்டினார்.

தமிழுக்கு அவரின் இதழியல் தொடர்பான தொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றும் பெரும் கொடையாக அமைந்துவிட்டன. இனியொருவர் நினைத்தாலும் அத்தகைய சாதனையைச் செய்ய முடியாது என்று சொல்லுமளவு அவரது இதழியல் ஆய்வுச் சாதனை சிகரத்தைத் தொட்டுவிட்டது.

அந்தத் தொகுப்புகள் இல்லாவிட்டால் மறைந்துபோன பல பழைய தமிழ் இதழ்களைப் பற்றிய வரலாறே நமக்குக் கிட்டாமல் போயிருக்கும். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய மாபெரும் பணியைத் தனியொரு மனிதராக இருந்து வெற்றிகரமாகச் செய்து முடித்தார் மா.ரா. அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விடுதலை உணர்ச்சியைத் தோற்றுவிக்கும் வகையில் வெளிவந்த இதழ்கள் மீது மா.ரா. அரசுக்கு மட்டற்ற மதிப்பிருந்தது. சமரசம் செய்து கொள்ளாமல் அத்தகைய இதழ்களை நடத்திய அன்றைய இதழாசிரியர்களை அவர் மனமாரப் போற்றினார்.

விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னரும் வெளிவந்த இதழ்களே அந்தந்தக் காலத்துத் தமிழ் மக்களின் உண்மையான மனப்போக்கை நாம் புரிந்துகொள்ள உதவும் காலக் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன என்று அவர் சொல்வதுண்டு. கடந்த கால இதழ்கள் தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான சொத்து என்றும் அவர் குறிப்பிடுவதுண்டு.

இன்றைய இதழ்கள் அன்றைய இதழ்கள் காட்டிய அதே பாணியிலேயே சமரசம் செய்து கொள்ளாமல் நாட்டு நலன், மொழி நலன் போன்றவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் பணியைத் தொடர வேண்டும் என அவர் விரும்பினார். மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் என்று தம் தந்தை பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் இதழாளர் இராஜாஜி என்னும் ஆய்வு நூலை வெளியிட்டார். தவிர மாணவர்களுக்கான இதழ் ஒன்றையும் வெளியிட்டுவந்தார்.

தொடர்ந்து பல இலக்கியக் கூட்டங்களை நடத்திவந்தார். அவர் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பிரசண்ட விகடன் ஆசிரியரான முதுபெரும் எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன், இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரெல்லாம் வருகை தந்தார்கள்.

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சமகால தமிழ் இலக்கிய ஆய்வுகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. வ.உ.சி. பற்றிய ஆய்வே அவருக்கு முனைவர் பட்டம் பெற்றுத் தந்தது. அவரது ஆய்வேட்டில், ஆய்வைப் போலவே அதற்கு அவர் ஆதாரமாகக் காட்டும் அடிக் குறிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மா.ரா.அரசு, வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வ.உ.சி. பற்றிய நூலை எழுதியவரும் இவர்தான்.

ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் அவருக்கிருந்தது. தமது வருமானத்தை மீறி அவர் நூல்களை வாங்கினார்.

வெறுமே புத்தக சேகரிப்புக்காக வாங்கும் புத்தகங்கள் அல்ல அவை. ஒவ்வொன்றையும் படித்துக் குறிப்பெடுப்பார். முக்கியமான வரிகளைத் தாம் படித்த புத்தகங்களில் கோடிட்டு வைத்திருப்பார். இதெல்லாம் தம் தந்தை மா. இராச மாணிக்கனாரிட மிருந்து தாம் கற்றுக் கொண்ட பழக்கம் என்று அவர் சொல்வதுண்டு.

பேராசிரியராகப் பணிபுரிந்து அதன் மூலம் பற்பல தமிழ் அறிஞர்களை உருவாக்கிய பெருமையும் உள்ளவர். அவ்வை நடராசன், இ. சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல முதல்நிலைத் தமிழறிஞர்களின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர்.

அவரிடம் பத்திரிகைக்காகவோ தொகுப்பு நூல்களுக்காகவோ யாரேனும் கட்டுரை கேட்டால் சிரத்தையுடன் எழுதிக் கொடுப்பார். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கென்று பல நாட்கள் உழைப்பார். கட்டுரைக்கான சான்றாதாரப் படங்களையும் கட்டுரையுடன் இணைத்து அனுப்புவார்.

அந்தக் கட்டுரை எந்தப் பத்திரிகையில் வெளிவந்தாலும் எந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றாலும் தனித்த கம்பீரத்துடன் காட்சி தரும்.

அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. நல்ல தயாரிப்புடன் வந்து மேடையில் சொற்பொழிவாற்றக் கூடியவர். கையில் குறிப்பேதும் இல்லாமல் ஒருமணி நேரத்திற்கும் மேல் பேசும் ஆற்றல் பெற்றவர்.

அவருடைய மேடைப் பேச்சிலும் உரையாடலிலும் நாகரிகமான மெல்லிய நகைச்சுவை இழையோடும். பகட்டான அலங்கார வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக அருகே அமர்ந்து உரையாடுவதுபோல் மேடையில் பேசக் கூடியவர். எண்ணற்ற இலக்கிய மேடைகள் அவர் பேச்சால் பெருமை பெற்றிருக்கின்றன.

மாபெரும் தமிழறிஞர் என்றாலும் இலக்கியக் கட்டுரைகளை விடவும் அதிகம் இதழியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினார். மா.ரா.அரசுவின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

அவரது குடும்பத்தில் அவர் தமிழ் அறிஞராக இருந்ததில் வியப்பேதும் இல்லை. அவர் குடும்பம் முழுவதுமே தமிழ் அறிஞர்களைக் கொண்ட குடும்பம்.

தந்தை மா. இராசமாணிக்கனார் பற்றித் தமிழுலகில் அறியாதவர்கள் இல்லை. மா.ரா. அரசுவின் சகோதரர் இரா. கலைக்கோவன் தொல்லியல் ஆய்வில் தடம் பதித்த மருத்துவர்.

இன்னொரு சகோதரரான காலஞ்சென்ற இளங்கோவன் இதழியல் ஆய்வில் நாட்டமுடையவர். அவரிடமிருந்தே இவருக்கும் இதழியல் நாட்டம் தோன்றியது. இளங்கோவனின் மனைவி திருமதி புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்.

தமது தெய்வத்துள் தெய்வம் என்ற மகாசுவாமிகள் பற்றிய நாடகத்தின் மூலம் தமிழ் நாடகத் துறையில் தடம் பதித்திருக்கும் இளங்கோ குமணன், மற்றும் பிரபல திரைப்பட நடிகர் குமரவேல் இருவரும் புனிதவதி இளங்கோவனின் புதல்வர்கள்.

மா.ரா. அரசுவின் மனைவி திருமதி திரிபுரசுந்தரி, ராஜாஜியின் இதழியல் பணிகளை ஆய்வு செய்த ஆய்வாளர். ராஜாஜி ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினார் என்பது போன்ற யாரும் அதிகம் அறியாத அரிய செய்திகளெல்லாம் அவர் ஆய்வின் மூலம் வெளிப்பட்டன.

ராஜாஜி நடத்திய விமோசனம் என்ற பத்திரிகை முழுமையாகத் தன்னை மதுவிலக்குக் கொள்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை. விமோசனம் பத்திரிகை குறித்து ஆய்வு செய்ததோடல்லாமல், அதன் பழைய இதழ்களைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கிறார் திருமதி திரிபுரசுந்தரி. மா.ரா. அரசு எத்தனையோ மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தாலும் வாழ்நாள் முழுதும் தம்மை ஒரு மாணவராகவே கருதி வந்தார். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எதையேனும் கற்றுக்கொள்ள அவர் தயங்கியதே இல்லை. மாபெரும் சாதனையாளராக அவர் விளங்கியதற்கு அவரின் இந்தப் பண்பு ஒரு முக்கியக் காரணம். தாம் வாழ்ந்த காலத்தில் தாம் செய்த இதழியல் ஆய்வுப் பணிகள் மூலம் தமிழில் ஒரு நிலைத்த முத்திரையைப் பதித்துள்ளார் தமிழறிஞர் மா.ரா. அரசு.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

Tags:    

Similar News