ஆரோக்கியம் தரும் கோடைகால உணவுகள் - கேழ்வரகு தரும் உடல் வலிமை
- நொய்யரிசியை அல்லது வேறு சிறுதானிய அரிசியை உடன் சேர்த்து கெட்டிக் கூழாகக் காய்ச்சலாம்.
- கேழ்வரகினை தானியமாகவே ஊறவைத்து அரைத்து வடித்துப் பாலெடுத்து அதைக் காய்ச்சி ஊட்டினால் மெலிந்த குழந்தைகள் நல்ல சதையூட்டம் பெறுவார்கள்.
கூழ்களின் தலைவன் யாரென்றால் கேழ்வரகுக் கூழ் என்றே சொல்லலாம். சிறுதானியங்களில் உறைந்துள்ள வெப்பத் தன்மையையும், பெருந்தானியங்களுக்குரிய உடல் உறுதித் தன்மையை வழங்கும் கனிமச் சத்துக்களையும், காய்கறிகளுக்குரிய நார்த் தன்மையையும் ஒன்றாகக் குவித்து வைத்திருப்பது கேழ்வரகு. இதனை வட தமிழகத்தில் கேவுறு என்றும், தென் மாவட்டங்களில் கேப்பை என்றும், கொங்குப் பகுதியில் ஆரியம் என்றும் அழைப்பர். ராகி என்பது கிட்டத்தட்ட பொதுப்பெயராக எங்கும் விளங்கி வருகிறது.
இன்று எந்திரத்தில் இட்டு அரைப்பது போல் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி திருகையில் இட்டு மாவாக அரைக்கும்பொழுது அதன் சத்துக்கள் சிதையாமல் முழுமையாகக் கிடைக்கும். கையால் சுற்றும் கல் திருகையின் மேல்பாகத்தில் கெட்டியான துணியை ஒட்டிக் காய வைப்பார்கள். அப்பொழுது கேழ்வரகுத் தானியம் மென்மையாக அரைபடும். சூடு ஏறாமல் மாவாக்கப்படுவதால் நுண்சத்துக்கள் சிதைக்கப்படுவதில்லை.
எப்பொழுது அரைபடும் பொருளின் மீது செயற்கையான சூடேற்றப்படுகிறதோ அப்பொழுது அதன் இயல்பான சத்துக்கள் சிதைக்கப்பட்டு விடும். அதனால் தான் சட்னியாகட்டும், இறைச்சி மசாலாவாகட்டும் அம்மியில் அரைத்து சமைக்கப்படும் பொழுது அதன் சுவை மிகுதியாக தென்படுகிறது. மிக்சியில் அரைக்கப்படும் சட்னி ஒருமணி நேரத்தில் நுரைகட்டத் தொடங்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு பொருளிலும் அதன் மூலப்பண்பு சிதைக்கப்படுகிற பொழுது மிகவேகமாக வீரியமும், சத்துக்களும், சுவையும் இழந்து மக்கிப்போகத் தொடங்கும். அதனால்தான் கைத்திருகையில் அரைக்கும் பொழுதுகூட சூடு ஏறக்கூடாதென்று கல்லின் ஒருபாகத்தில் துணியை ஒட்டிவைத்து அரைத்தார்கள் நம் முன்னோர்கள்.
கேழ்வரகினை சூடேற்றாமல் அரைத்துப் பதமாகச் சற்றுக் கெட்டியாகக் காய்ச்சிய கூழ், கைப்படாமல் எடுத்துக் கரைக்கக் கரைக்க நான்கைந்து நாட்கள் வரைக் கெடாமல் இருக்கும். சில நேரங்களில் தாழியில் உள்ள கெட்டிக் கூழின் மேல்பாகத்தில் நூலாம்படை போலப் பூஞ்சை படிந்து இருக்கும். அதனை மேலேடு எடுத்து அகற்றி விட்டுக் கீழ்ப்பகுதியைப் பார்த்தால் கெடாமல் இருக்கும். அந்த அளவிற்குக் கெட்டுப்போகாத வீரியம் உடையது கேழ்வரகு.
மற்றெல்லாத் தானியங்களும் எவ்வளவு பக்குவமாகப் பாதுகாத்தாலும் அதிகபட்சம் ஓராண்டிற்கு மேல் பாதுகாக்க முடியாது. நெல்லை அரிசி ஆக்காமல் இருந்தால் ஓரிரு ஆண்டுகள் பாதுகாக்கலாம். ஆனால் உமி நீக்கிய தானியம் யாவும் வெகு சீக்கிரத்தில் அதன் இயல்பை இழந்து விடும். ஆனால் கேழ்வரகினை தாளோடு அறுத்து அப்படியே மூன்று மாதம், ஆறுமாதம் வைத்திருந்து பின்னர் கதிரில் இருந்து மணியை நீக்குவார்கள். கேழ்வரகினைத் தானியமாக்கிய பின்னரும் மிகச் சாதாரணமாக நான்கைந்தாண்டுகள் வைத்திருக்க முடியும். நம்மக்கள் பஞ்ச காலத்திற்காகப் பாதுகாத்து சேமித்து வைக்கும் தானியம் கேழ்வரகு தான்.
நன்றாக விளையும் காலத்தில் பத்துப் பதினைந்து குடும்பங்கள் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை மரக்காலில் அளந்து சுண்ணாம்புக் கோடுகள் இட்டு சுவற்றில் குறித்து வைத்துக் கொள்வார்கள். ஈரத்தன்மை குறைவாக உள்ள மேட்டுப்பாங்கான நிலத்தில் 10,12 அடி ஆழ, அகலத்திற்குக் குழிவெட்டி அதில் அகலகலமான பலகைக் கல் பதித்து ஒன்று கூட்டிய கேழ்வரகினைக் கொட்டி மேலே தாளை இரண்டு மூன்று அடுக்காக அடுக்கி, அதன் மீது புறவெப்பம் குளிர்ச்சி பாதிக்காத வண்ணம் மண்சேறு, சாணி கொண்டு பூசிக் காயவிட்டு அதன் மீது பலகைக் கல்லினை வைத்து அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி விடுவார்கள். சேமித்த நிலத்தடிக் கிடங்கினை அடையாளத்திற்குக் கல் நட்டு வைப்பார்கள். தொடர்ந்து மழை பெய்யாத பஞ்ச காலங்களில் உணவுக்கும், விதைக்காகவும் மேற்படி தானியத்தை அவரவர்க்கு உரிய அளவில் பிரித்துக் கொள்வார்கள். நம்மக்கள் தானியக் கணக்கு, பால் கணக்கு அளவினைக் குறிக்கப் பயன்படுத்திய முறையில் தான் இன்றைய சினிமாவில் திரைக்கலைஞர் சூரி அவர்களின் பரோட்டா பந்தயத்திற்கு கரும்பலகையில் கோடு கிழித்து குறித்து வைத்ததைப் பார்த்திருப்பீர்கள்.
போப்பு, 96293 45938
அக்காலத்தில் குறுநில மன்னர்களுக்குள் போர் நடக்கும் பொழுது எதிரிகளைக் கொல்வது மட்டுமில்லாமல் அவர்களது சொத்துக்களை நிர்மூலமாக்கி விடுவார்கள். அப்பொழுது தான் மறுபடியும் அவர்களது குலம் தழைத்து தம்மைப் பழிவாங்க முடியாது என்பது அவர்களது திட்டம். சொத்துக்களை அபகரிப்பதோடு இன்னும் ஒருபடி மேலேறி முன்பத்தியில் சொன்னவாறு தானியக் கிடங்குகளையும் கொள்ளையடிப்பார்கள். அல்லது மேல் கல்லை அகற்றி விட்டு உள்ளே நெருப்பைப் போட்டு விட்டுப் போய்விடுவார்கள்.
நம் முன்னோர்களில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்கள் இருந்தார்களோ அவ்வளவு கொடூர மனம் படைத்தவர்களும் இருந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. சரி இப்பொழுது கூழ்க் கதைக்கு வருவோம். கேழ்வரகுத் தானியம் எப்படி நீண்ட வருடங்களுக்குக் கெடாமல் நீடித்திருக்குமோ கெட்டியாகக் காய்ச்சி வைத்த கூழும் மூன்று நான்கு நாட்களுக்கும் கெடாது இருக்கும்.
நல்ல உழைப்பாளிகளுக்கு உழைப்பதற்குரிய ஆற்றலை வழங்குவதோடு வியர்வையாக வெளியேறும் நீரினை உடனுக்குடன் ஈடுசெய்வது கூழே ஆகும். கடந்த வாரங்களில் பார்த்ததைப் போல செரிமான மண்டலத்தில், இரைப்பையில், சிறு, பெருங்குடல்களில் நன்மை தரும் நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்குத் துணைசெய்வது கேழ்வரகுக் கூழ். இத்தானியத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்தும், மாவுச்சத்தும் நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனால் தான் நம் மக்கள் உழைக்கிற நாட்களில் தம்மிடம் என்னென்ன தானியங்கள் இருந்தாலும் கேழ்வரகுக் கூழிற்கே முதன்மையிடம் கொடுப்பார்கள். கூழ்வார்த்தல் சடங்கில் இடம்பெறும் கூழ் கேழ்வரகுக் கூழேயாகும்.
கெட்டியாகக் காய்ச்சி கரைத்துக் கரைத்துக் குடிக்க பொருத்தமானது கேழ்வரகுக் கூழ் எனினும் இம்மாவு பலவகைகளிலும் நமது உடலுக்கு நலம் பயக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
நொய்யரிசியை அல்லது வேறு சிறுதானிய அரிசியை உடன் சேர்த்து கெட்டிக் கூழாகக் காய்ச்சலாம். அவ்வாறு காய்ச்சும் போது கேழ்வரகு மாவு தானும் கெடாததுடன் தன்னுடன் கூட்டுச் சேர்த்த தானியத்தையும் கெடாமல் வைத்திருக்கும். மண்ணும், சிமண்ட்டும் சேர்த்த கலவையுடன் ஜல்லியோ, உடைத்த செங்கல்லோ சேர்க்கும்போது அது கட்டிடத்திற்கு வலிமை சேர்ப்பது போல துணை தானியம் சேர்க்கும் பொழுது கேழ்வரகு மாவு அபார சக்தியை வழங்கும்.
வெயில் காலத்திற்குக் காய்ச்சி ஆறிய கூழ் என்றால் குளிர் காலத்திற்கு துணை தானியம் சேர்த்து கெட்டியாகக் கிண்டி எடுக்கும் கேழ்வரகுக் களியாகும். கடின உழைப்பாளிகள் என்றால் கேழ்வரகுக் களியோடு கருவாட்டுக் குழம்பு அல்லது பருப்புடன் கூடிய கீரைக்குழம்பு போன்றவை மிகவும் பொருத்தமாக இருக்கும். உடல் உழைப்புக் குறைவானவர்கள், குழந்தைகள் என்றால் நல்ல சூடான களியோடு எள்ளெண்ணையும், கருப்பட்டி (பனைவெல்லத்) தூளும் மிகவும் பொருத்தமாக இருக்கும் மட்டுமல்ல, குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சதைப்பற்றுப் பெருக சூடான களி மிகவும் நல்லது. போக கேழ்வரகின் வறல் பண்பினை நல்லெண்ணை ஈடுசெய்யும். தோளுக்கு மினுமினுப்பு கொடுக்கும். சிலருக்கு கேழ்வரகுக் களி சாப்பிட்டால் மலம் இறுகி விடும். அவர்களுக்கு நல்லெண்ணை, வெல்லம் காம்பினேசன் உதவிகரமாக இருக்கும். மலத்தை இளக்கும். ஒருவாரம், 10 நாட்கள் காய்ச்சலில் விழுந்து மீண்டவர்கள், உடலில் நீரும், சதையும் வற்றித் துவண்டு போய் இருப்பார்கள். இந்த நிலையில் உள்ளோர் உடனடியாக சக்திபெற சுடச்சுடக் காய்ச்சிய கூழில் வெல்லப்பொடி தூவி தேக்கரண்டியில் எடுத்துக் குடிக்கலாம். தொடர்ந்து சளி, இருமல் இருக்குமானால் சுடு கூழ் நீர்க்கக் காய்ச்சும்போது அதில் நான்கைந்து சிட்டிகை சுக்குத் தூளும், மிளகுத் தூளும் போட்டுக் காய்ச்சிக் குடிக்க கபாலத்தில் உறைந்த சளி இளகி இறங்கும். நெஞ்சுஞ்சளி கட்டாது.
அடிக்கடி சளித்தொல்லைக்கு உள்ளாவோர், மூச்சிரைப்புப் பிரச்சினை இருப்பவர்கள் இப்படி சுடு கூழும் சாப்பிடலாம், களியும் சாப்பிடலாம். அதை விட அதிகப் பொருத்தமானது கேழ்வரகுப் புட்டு. மார்புப் பகுதியில் சளி இறுகித் தொல்லைக்கு உள்ளாவோர், எலும்புருக்கி (டி.பி) நோய்க்கு ஆட்பட்டோருக்கு கேழ்வரகு அரிய மருந்தாகும். இந்நோய்ப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் மேலே சொன்னபடி நல்லெண்ணையோ, நெய்யோ பொருத்தமான விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகினை தானியமாகவே ஊறவைத்து அரைத்து வடித்துப் பாலெடுத்து அதைக் காய்ச்சி ஊட்டினால் மெலிந்த குழந்தைகள் நல்ல சதையூட்டம் பெறுவார்கள். பால்மாவு, வணிகச் சத்துப் பால்மாவுகள் குழந்தைகளுக்கு பொதபொதவென்று பிராய்லர் கோழி போலச் சதையைப் பெருக்குமே ஒழிய சத்திருக்காது. அடிக்கடி நோய்க்கு உள்ளாவார்கள். எந்த நேரமும் மருந்தும், ஊசியும், ஆண்டி பயாடிக்குமாக மருத்துவமனையும் வீடுமாக இருக்க நேரிடும். ஆனால் மேற்படி முறையில் கேழ்வரகினை அரைத்துக் காய்ச்சிய கூழ் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும். வளரும் போதே தசைநார்கள், நரம்பு மண்டலம் வலுப்பெற்று ஊக்கமுடன் வளர்வார்கள்.
ஐயாம் ஏ கேழ்வரகுப் பாய், ஐ ஆம் ஏ கேழ்வரகுக் கேர்ள் என்று முழக்கமிடலாம்.
நரம்பு மண்டலம் வலுப்பெற்றால் எலும்பு மண்டலமும் வலுப்பெறும். இது பிற்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.
கேழ்வரகு மாவரைக்கும் திருகையை இன்று நாம் அருங்காட்சியகத்தில் கூடப் பார்க்க முடியாது. அந்தளவிற்கு அந்நியமாகி விட்டது நம்மிடம். கேழ்வரகு மாவினை அரவை எந்திரத்தில் அரைத்தாலும் பாதகமில்லை, மாவினைப் புளிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தல் அதிக நன்மை பயக்கும். இன்று பரவலாக தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் கூழும் கூட பிற நவீன உணவுகளை விட எவ்வளவோ நன்மை செய்யும் உணவாகும்.
ராகியின் பயன்பாடு குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம்.