சிறப்புக் கட்டுரைகள்

சிங்கத்தின் மேல் வந்த கவிச்சிங்கம்!

Published On 2023-11-23 15:29 IST   |   Update On 2023-11-23 15:29:00 IST
  • குமரகுருபரர் நாவிலிருந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் புறப்பட்டது.
  • குமரகுருபரர் காசியில் சைவத்தையும் தமிழையும் எவ்விதம் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தார்.

திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சிவகாமசுந்தரி.

மணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும் இறைவன் குழந்தை பாக்கியத்தை அவர்களுக்கு அருளவில்லை. திருச்செந்தூர் முருகனிடம் நம் குறையைத் தெரிவிப்போம், வா என்றார் கவிராயர். இருவரும் செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்தக் கடவுள் தான் என்ன அழகு! எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு போகலாம் போல் எத்தனை தத்ரூபமான உயிர்ச்சிலை! குழந்தை கொடுப்பாய் வேலா! என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

வேலை வணங்குபவர்களின் குறையைத் தீர்ப்பது தானே அவன் வேலை! அவன் கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் என்பதால் அல்லவா அவன் மனைவியைக் கூட வள்ளலின் மனைவி என்பதால் வள்ளி என்கிறோம்!

காலப்போக்கில் சிவகாமசுந்தரி கருவுற்றாள். குழந்தை பிறந்ததும் குமரகுருபரன் என்று பெயர் சூட்டினார்கள்.

வயது ஏறிக்கொண்டே இருந்தது குழந்தைக்கு. ஆனால் ஐந்து வயதாகியும் குழந்தை வாய்திறந்து எந்தச் சொல்லும் சொல்லவில்லை. கவிராயர் தம்பதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒருநாள் சிவகாமசுந்தரி, குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு திருச்செந்தூர் புறப்பட்டாள். கவிராயரும் உடன் நடந்தார்.

`குழந்தையைத் தந்த கடவுளிடம் இவனுக்குப் பேசும் சக்தியைத் தரப்போகிறானா இல்லையா என்று கேட்போம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கடல்!`

சிவகாமசுந்தரி ஒரு முடிவோடு மேலே நடந்தாள்.

`நம் குழந்தை பேசுவான். அதுமட்டுமல்ல. நம் குழந்தையைப் பற்றி உலகமெல்லாம் பேசும்!` என்றவாறே நம்பிக்கையோடு நடந்தார் கவிராயர்.

திருச்செந்தூரில் அவர்கள் தவமிருக்கலானார்கள். நாற்பத்து நான்கு நாட்கள் கடந்தன. நாற்பத்தைந்தாம் நாள். யாரோ மெல்ல மெல்ல ஏதோ பேச முயலும் குரல் கேட்டாற்போல் இருந்தது.

கவிராயரும் மனைவியும் வியப்போடு குழந்தையைப் பார்த்தார்கள். குமரகுருபரன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். அவன் நாக்கு ஒலி அலைகளைத் தேடித் தேடிப் புரண்டு கொண்டிருந்தது.

சில கணங்கள் தவித்த குமரகுருபரக் குழந்தை திடீரென மடைதிறந்தாற் போல் பேச முற்பட்டான். பேச்சா அது? அல்ல. எல்லாமே கவிதைகள். குமரனைத் துதித்துக் கந்தர் கலிவெண்பா பாடலானான் அவன்.

அவனை இனி அவன் என்று சொல்லலாமோ? அவர் என்றல்லவா சொல்ல வேண்டும்? மாபெரும் கவிஞராகிவிட்டார் குமரகுருபரர். தமிழ்க் கடவுள் கந்தனைப் பற்றி எண்ணற்ற பாடல்கள் பாடினார்.

வளர்ந்து இளைஞரானபோது அவர் சிந்தை துறவு நெறியில் நாட்டம் கொண்டது. பெற்றோரிடம் விடைபெற்று திருத்தல யாத்திரை மேற்கொண்டார்.

மதுரைக்கு வந்து சேர்ந்தார். மீனாட்சியின் தெய்வீகப் பொலிவு ததும்பும் சிலையையே பார்த்தவாறிருந்தார். உயிருள்ள சிலை அல்லவா அங்கே உயிரை மறைத்துக் கொண்டு நின்றிருக்கிறது!

குமரகுருபரர் நாவிலிருந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் புறப்பட்டது. அன்னையைப் பத்துப் பருவங்கள் உடையவளாய் அமைத்து தாலாட்டு உள்பட எல்லாப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களையும் பாடினார்.

அப்போது மதுரையை ஆண்டு கொண்டிருந்தான் திருமலை நாயக்கன். அவனது கனவில் வந்தாள் மீனாட்சி.

`என் பக்தனின் சொக்க வைக்கும் சொக்கத் தங்கமான தமிழைப் பருகாமல் உறங்குகிறாயே?` என்று கேட்டாள். திடுக்கிட்டு விழித்த திருமலை நாயக்கன் திகைத்தான்.

குமரகுருபரரைத் தேடிச் சென்றான். அவர் தரிசனத்தால் பரவசம் அடைந்தான். கோவிலில் மீனாட்சியின் சன்னிதியில் மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழ் நூலைக் குமரகுருபரர் பாடப்பாட அவனும் அமர்ந்து கேட்கலானான்.

அந்தப் பாடல்களின் தமிழ்ச் சுவையைக் கேட்டு, மீனாட்சியின் சிலை அருட்கனிவோடு முறுவல் பூத்தது. அன்னை தன் கணவர் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் போலத் தானும் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளம் கொண்டாள்.

அடுத்த கணம் கோவில் வாயிலில் இருந்து ஓர் அழகிய சிறுமி புறப்பட்டாள். அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னன் திருமலை நாயக்கனின் மடியில் போய் சொந்தத்தோடு அமர்ந்து கொண்டாள்.

செதுக்கி வைத்த சிலைபோல் இருந்தாள் அவள். அது சரி. செதுக்கி வைத்த சிலையில் இருந்து தானே அவள் வெளிப்பட்டிருக்கிறாள்!

`தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!` என்று கனிந்துருகிப் பாடிக் கொண்டிருந்தார் குமரகுருபரர். `ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!` என்று அவர் பாடியபோது சிறுமி சிரித்துக் கொண்டாள்.

நாயக்கரின் மார்பில் இருந்த முத்துமாலையை விளையாட்டாகக் கழற்றினாள்.

மறுகணம் சிறுமி மன்னரின் மடியை விட்டு எழுந்தாள். குமரகுருபரரின் அருகே வந்தாள். மன்னரது முத்துமாலையை அவர் கழுத்தில் அணிவித்துச் சிரித்துக் கொண்டே கர்ப்பகிரகத்தை நோக்கி நடந்தாள்.

சிறுமி நடந்த நடை ஒரு நாட்டியம் போல் தோன்றியது! அவள் நாட்டியத்தில் கணவனுடன் போட்டியிட்டு ஆற்றல் குறைவால் அல்ல, நாண மிகுதியால் அல்லவா தோற்றாள்!

சிறுமி சிலையோடு சிலையாய்க் கலந்து மறைந்தாள். சிலையின் முகமும் வந்த சிறுமியின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது அப்போது தான் திருமலை நாயக்கருக்கு உறைத்தது. தெய்வ தரிசனத்தைச் சாத்தியப்படுத்திய குமரகுருபரரின் பாதங்களில் விழுந்து பணிந்தான் நாயக்கன்.

சிறிதுகாலம் மதுரையில் தங்கிய குமரகுருபரர் காசி சென்று சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். காசிநோக்கிப் பயணப்பட்டார்.

அங்கு தான் சகலகலாவல்லி மாலை என்ற கலைவாணியைப் பற்றிய தோத்திர நூலைப் புனைந்தார். அங்கே மிகச் சுலபமாக இந்துஸ்தானி மொழியைக் கற்றறிந்தார்.

குமரகுருபரர் காசியில் சைவத்தையும் தமிழையும் எவ்விதம் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்தார். காசியில் ஒரு மடம் நிறுவுவதே நல்லதென முடிவு செய்தார். மடம் நிறுவ முடிந்தால் வட இந்தியாவில் சைவமும் தமிழும் வழிவழியாய்த் தழைக்கும்.

தமிழர் ஒருவர் வட இந்தியாவில் மடம் நிறுவுவதென்பது சாமானியமான செயலா? அதற்கு நிலம் வேண்டும். ஒரு தமிழருக்கு நிலத்தை யார் நன்கொடையாக வழங்குவார்கள்?

அக்காலத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த சுல்தான் ஒருவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது காசி மாநகரம். சுல்தான் நினைத்தால் நிலம் வழங்குவது அவனுக்கு ஒரு பெரிய காரியமே அல்ல.

மாற்று மதத்தைச் சேர்ந்தவன், அவன் சைவத்தின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உணருமாறு செய்ய இயலுமா?

தனக்கு இந்துஸ்தானி மொழி தெரியும். சுல்தானிடம் பேசுவதில் சிரமம் இருக்காது. ஆனாலும் போகும்போதே தம் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் அவைக்குப் போக வேண்டும். அப்போது தான் செயலில் வெற்றி ஏற்படும்.

அதை எவ்விதம் நிகழ்த்துவது? ஒன்றும் புரியாமல் தாயே மீனாட்சி என்றவாறே உறங்கலானார்.

மீனாட்சி கனவில் வந்தாள். திருமலை நாயக்கர் மார்பிலிருந்து மாலையைக் கழற்றி அவர் கழுத்தில் பரிசாய் அணிவித்த அதே மீனாட்சி. ஆனால் இப்போது அவள் ஏன் பராசக்தி சொரூபத்தில் வந்திருக்கிறாள்?

சிங்க வாகனத்தில் வந்த அவள் `நான் உனக்கு ஒரு பரிசளிக்க வந்துள்ளேன். இந்தப் பரிசுப்பொருளின் மேல் அமர்ந்து சுல்தானைச் சந்திப்பாய்!` என்றாள். பின் கனவிலிருந்து மறைந்தாள்.

சிம்ம சொப்பனம் என்கிறார்களே, அது இதுதான் போலும்! கண்விழித்து எழுந்தார் குமரகுருபரர். அருகே ஏதோ உறுமும் சத்தம். அவர் அருகில் அவர் கட்டளையை எதிர்பார்த்து வாலை ஆட்டியவாறு நாய்போல் நின்று கொண்டிருந்தது பிரம்மாண்டமான ஒரு சிங்கம்! 

திருப்பூர் கிருஷ்ணன்

சிங்கத்தின் முதுகைத் தடவிக் கொடுத்த அவர், தன்பொருட்டாகத் தனது வாகனத்தையே அன்னை அனுப்பிய அருளை எண்ணி நெகிழ்ந்தார். நம்பிக்கையோடு சுல்தானைச் சந்திக்கப் புறப்பட்டார்.

சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அவர் வீதிகளில் சென்றபோது காசி மாநகரம் முழுதுமே அச்சம் கலந்த வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. சுல்தானின் அரண்மனையை நோக்கி மிடுக்கோடு நடந்து சென்றது சிங்கம். அதன் முதுகில் கம்பீரத்தோடு அமர்ந்து சென்றது கவிச்சிங்கம்.

அரண்மனை வாயில் காவலர்கள் பதறிப்போய் விலகி வழிவிட்டார்கள். சிங்கத்தின் முதுகில் இருந்து இறங்காமலே சுல்தானின் அரசவைக்குள் பிரவேசித்தார் குமரகுருபரர்.

சுல்தான் அவர் வந்த வாகனத்தின் பெருமையாலும் அவர் முகத்தில் பொங்கிய அருள் வெள்ளத்தின் ஆற்றலாலும் கவரப்பட்டான். குமரகுருபரர் இந்துஸ்தானியில் தன் வேண்டுகோளைச் சொல்லலானார்.

இந்து மதமும் இஸ்லாம் மதமும் வேறுபட்டாலும் ஆன்மீகத்தால் இரண்டும் ஒன்றுபட்டவை தானே? ஒருநெறி சார்ந்து வாழ்பவர் இன்னொரு நெறி சார்ந்து வாழ்பவருக்கு உதவ எண்ணுவதில் எந்தத் தவறும் இல்லையே?

நாம் நிச்சயம் இந்த இந்து மகானுக்கு நிலம் கொடுத்து உதவ வேண்டும். இப்படி எண்ணம் ஓடியது சுல்தானின் மனதில்.

சுல்தான் எந்த நிலம் வேண்டும் எனப் பணிவோடு கேட்டான். உடன் வா என அவரை அழைத்துக் கொண்டு போனார் குமரகுருபரர்.

மேலே ஒரு கருடன் வட்டமிட்டது. அது வட்டமிட்டுக் காட்டிய நிலப்பரப்பு முழுவதையும் குமரகுருபரருக்கே வழங்கினான் சுல்தான்.

தமிழர் ஒருவர் வட இந்தியாவில் காசியில் சைவமடம் நிறுவிய வரலாறு இது. பன்னெடுங்காலம் காசி மடத்தில் வாழ்ந்தார் குமரகுருபரர். இப்போதும் சூட்சும உடலில் அடியவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் அவர்.

தொடர்புக்கு:

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News