- தமிழில் குஷ்பு-பிரபு ஜோடியின் மிகப்பெரும் வெற்றிப்படமான சின்னத்தம்பி படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் ‘சாண்டி’.
- ஒரே நேரத்தில் பாட்டு, நடிப்பு, உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கேமரா முன் கொண்டு வர வேண்டியிருந்தது.
ஏம்மா...
அழுது நடிக்கத்தானம்மா சொன்னேன்...! அதற்காக இப்படியா... ஒரேயடியாக அழுவது? என்று கேட்ட டைரக்டர் எனது அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தார்.
உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த என்னாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இருந்து பெருகி வந்த கண்ணீர் கன்னங்களில் பெருக்கெடுத்து ஓடியது.
ஷூட், கட்... டைரக்டர் உள்பட எல்லோரும் என் அருகில் வந்து ஜூஸ் வாங்கி தந்து குடிக்க வைத்து மீனா... ரிலாக்ஸ்... நீ சினிமா காட்சிக்காகத்தான் நடிக்கிறாய்... என்று தட்டிக் கொடுத்தும் அழுகை நிற்க அரைமணி நேரத்துக்கும் மேலாகி விட்டது.
அதன்பிறகு டைரக்டர் சொன்னார். 'எமோஷன் தேவைதான். கூடவே நடிக்கவும் செய்யணும்' அதை மறக்கலாமா? என்று அவர் சொன்னதும் எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.
அப்படி காட்சிகளோடு நான் ஒன்றிப்போய் நடித்த படம் தெலுங்கில் 'சாண்டி'. அதாவது தமிழில் குஷ்பு-பிரபு ஜோடியின் மிகப்பெரும் வெற்றிப்படமான சின்னத்தம்பி படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் 'சாண்டி'.
தெலுங்கிலும் குஷ்புவைத்தான் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தமிழில் குஷ்பு ரொம்ப பிசியாக இருந்ததால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.
அடுத்து யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்த போது தயாரிப்பாளர் கே.எஸ்.ராமாராவ் 'சீதா ராமையாவின் பேத்தி' என்ற படத்தில் எனது நடிப்பை பார்த்துதான் என்னை தேர்வு செய்து இருக்கிறார்.
டைரக்டர் ரவிராஜ் தெலுங்கில் மிகப்பெரிய டைரக்டர். அதேபோல் கே.எஸ்.ராமாராவ் தயாரிப்பு நிறுவனமும் பெரிய நிறுவனம். எனவே இந்த வாய்ப்பு எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு எனது உழைப்பும் அதிகம் தேவைப்பட்டது.
சின்னத்தம்பி படத்தின் கதை, காட்சி அமைப்பு எல்லாமே அந்த காலகட்டத்தில் புதுமையாக இருந்தது. அதில் குஷ்பு-பிரபு ஜோடியின் பிரமாண்ட நடிப்பு படத்துக்கு உயிரூட்டி இருந்தது. அதனால்தான் மிகப்பெரிய ஹிட்டானது.
அதே கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது மிகப்பெரிய சவால்தான். சவாலை ஏற்றாச்சு. சந்தித்துதானே ஆக வேண்டும்? ஆந்திராவில் படப்பிடிப்பு. சின்னத்தம்பி மெல்ல மெல்ல வளர்ந்தான். கூடவே என் மனதுக்குள் பயமும் வளர்ந்தது. ஏனெனில் தமிழில் குஷ்பு ஏற்று நடித்த கதாபாத்திரம். எனவே படம் வெளியானதும் அவருடன் ஒப்பிட்டு பார்ப்பார்களே... அவரை விட நன்றாக நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் அளவுக்காவது நடிக்க வேண்டுமே என்ற பயம்தான்.
என்னைப்போலவே நடிகர் வெங்கடேசுக்கும் பயம் இருந்திருக்கிறது. அவர் என்னிடம், 'மீனா, பிரபு சாரின் முகம் வித்தியாசமானது. எல்லா பாவங்களுக்கும் ஒத்து வரும்' என்றார்.
அழுத்தமான கதை. ஒரே நேரத்தில் பாட்டு, நடிப்பு, உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கேமரா முன் கொண்டு வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் குஷ்புவை நான் நேரில் சந்தித்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது.
படத்தில் பார்த்துதான் எவ்வளவு அற்புதமாக நடித்து இருக்கிறார். என நினைத்து வியந்தேன். அப்போதெல்லாம் யூடியூப், இணைய தள வசதி எல்லாம் கிடையாது.
'வீடியோ கேசட்' இருந்தது. அதை டெக்கில் போட்டுத்தான் பார்க்க வேண்டும்.
நான் சின்னத்தம்பி வீடியோ கேசட் ஒன்று வாங்கி வைத்து இருந்தேன். ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியதும் படத்தை போட்டு பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் குஷ்பு எப்படி நடித்திருக்கிறார் என்பதை உன்னிப்பாக பார்ப்பேன். சில காட்சிகளை மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன். ரொமான்ஸ் பண்ணும் போது எப்படி முகத்தை வைத்துள்ளார்? சீரியசான காட்சிகளில் எப்படி நடித்துள்ளார்? என்று திரும்ப திரும்ப பார்ப்பேன். அப்படி பார்த்துதான் பல காட்சிகளில் சிறப்பாக நடித்தேன்.
கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் சோகம், ஆவேசம், எதிர்பார்ப்பு, ஏக்கம், தவிப்பு... அப்பப்பா... எத்தனை எத்தனை பாவனைகள்...? சான்சே இல்லை குஷ்பு பிரமாதமாக நடித்து இருந்தார். அந்த காட்சியில்தான் அப்படியே மூழ்கி உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டேன். அதை பார்த்துதான் டைரக்டர் என்னை ஆறுதல்படுத்தியது.
படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கிலும் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது.
அப்போதெல்லாம் படத்தை போலவே பாடல் கேசட் விற்பனையும் பிரபலம். கேசட்டுகள் விற்பனையை பொறுத்து பிளாட்டினம், டபுள் பிளாட்டினம் என்று விழா எடுத்து பாராட்டுவார்கள்.
சாண்டி பட பாடல்கள் விற்பனையில் டபுள் பிளாட்டினம் பெற்றது. படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் நூறு நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது. எனக்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து வெற்றி விழாவில் கவுர வத்தையும் பெற்றுத்தந்தான் சின்னத்தம்பி...
இதில் இன்னும் சில மறக்க முடியாத சுவாரஸ்யங்கள் உள்ளன. அந்த தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...
(தொடரும்...)