- நமது வாழ்வியலில் அவ்வப்போது வரக்கூடிய இக்கட்டுகள் எல்லாம் சிறுசிறு இடையூறுகளேயொழிய நிரந்தரத் துன்பங்கள் அல்ல.
- வருகிற சிறுசிறு தடைகளையும் தடங்கல்களையும் உடனுக்குடன் அகற்ற முயலாமல் விட்டுவிட்டால்தான் அது நாள்பட்ட புண்ணாய் புரையோடி, நிரந்தரத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
தடைகளைத் தகர்க்கும் தைரிய எண்ணம் கொண்ட வாசகர்களே!
வணக்கம்.
வாழ்க்கை ஒரு பயணம் என்றால், வழிநெடுகப் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலைகள் மட்டுமே நிறைந்திருக்கும் என்பது கிடையாது!; வறண்ட பாலைவனங்களும் எதிர்ப்படலாம்; எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
வாழ்க்கை ஒரு நெடுஞ்சாலை என்றால் பாதை முழுவதும் நேரான வழுவழு தார்ச்சாலைகள் மட்டுமே இருக்கும் என்பதில்லை; மேடுகளும் பள்ளங்களும், வளைவுகளும் நெளிவுகளும், எதிர்பாராத குண்டுகளும் குழிகளும் நிறைந்து கலந்தேதான் இருக்கும்.
வாழ்க்கை என்பது ஓர் இன்பியல் நாடகமாகவே அமையவேண்டும் என்பது நம்மில் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது இன்பமும் துன்பமும் கலந்து, எப்போது எது நிகழும் என்று கணிக்கமுடியாத சூழலில் நம்மைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அனுபவமாகவே இருக்கிறது.
வாழத் துடிக்கும் எல்லா உயிர்களிலும் மேவிக்கிடக்கும் நோக்கம் 'இன்பமாக வாழ வேண்டும்' என்பதே ஆகும். இன்பத்தை நோக்கிப் பயணிக்கும் நமது வாழ்வியலில் அவ்வப்போது வரக்கூடிய இக்கட்டுகள் எல்லாம் சிறுசிறு இடையூறுகளேயொழிய நிரந்தரத் துன்பங்கள் அல்ல. இதை உளப்பூர்வமாக உணர்ந்து, வருகின்ற இடையூறுகளை அவ்வப்போது நீக்கிவிடுகிற வகையில் செயல்பட்டால் இன்பத்திற்கு எந்தவிதமான குறைவும் ஏற்படாது. வருகிற சிறுசிறு தடைகளையும் தடங்கல்களையும் உடனுக்குடன் அகற்ற முயலாமல் விட்டுவிட்டால்தான் அது நாள்பட்ட புண்ணாய் புரையோடி, நிரந்தரத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
நமக்கு வருகிற துன்பத்தை விரட்ட மிகச் சிறந்த வழி, வந்த துன்பத்திற்கு வருத்தப்படாமல் இருப்பதே ஆகும். வள்ளுவரும்,
'இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படா தவர்'
'இடும்பை' என்றால் 'துன்பம்'. நீங்கள் உங்களுக்கு வருகிற துன்பத்தைத் துன்புறுத்தி விரட்ட வேண்டுமென்றால், அந்தத் துன்பத்திற்குத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளுவ ஆலோசனை. தமக்கு ஏற்படுகிற இடையூறுகளை வைத்தே நல்வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜான் செப்பர்டு பேர்ரன் என்பவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இன்று உலகில் சாலையோரங்களிலும் ஊரின் சந்து பொந்துகளிலும், எங்கு பார்த்தாலும் நிறைந்து காணப்படுகிற பணம்தாங்கி/ பணம் வழங்கும் இயந்திரமான ஏ.டி.எம். மெஷினை 1967-ம் ஆண்டு கண்டுபிடித்தவர் இவர் தான். இவர் இந்தியாவில் மேகாலயாவில் பிறந்த ஆங்கிலேயர்.
செப்பர்டு பேர்ரன் லண்டனில் பர்க்லேயில் வசித்துக் கொண்டிருந்த போது, தன்னுடைய மனைவியின் பிறந்த நாளுக்கு ஓர் அழகிய பரிசுப்பொருள் வாங்கி வழங்க ஆசைப்பட்டார். பிறந்த நாளுக்கு முந்தினநாள் மாலை தனது கணக்குள்ள வங்கிக்குச் சென்று தனது பணத்தை எடுப்பதற்காகக் காசாளர் முன், வரிசையில் நின்றார். ஆனால் இவரது முறை வரும்போது வங்கி நேரம் முடிந்து விட்டதால் காசாளர் பணம் வழங்க முடியாதென மறுத்துச் சிறு கதவை மூடிவிட்டார்.
ஏமாற்றத்தோடு வங்கிக்கு வெளியே வந்த பேர்ரன், நினைத்த பொருளை வாங்கி மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கத் தேவையான பணம் இல்லையே என வருந்தினார். சரி, இருக்கும் பணத்தை வைத்து என்ன வாங்கித் தரலாம்?.. அந்தச் சிறிய தொகைக்குப், பிறந்த நாள் பரிசாகச் சாக்லேட்டுகள் மட்டுமே வாங்கித் தர முடியும்.
பக்கத்தில் சாலையோரத்தில் ஒரு கடை வாசலில் சாக்லேட் வழங்கும் இயந்திரம் ஒன்று இருந்தது. அந்த இயந்திரத்தின் மேலே உள்ள ஓட்டையில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அதற்குப் பெறுமானமுள்ள எண்ணிக்கையிலான சாக்லேட்டுகளைக் கீழே உள்ள ஓட்டையின் வழியே வழங்கி விடும். பேர்ரன் தான் பணம் போட்டுப் பெற்றுக்கொண்ட அந்தச் சாக்லேட்டுகளை வைத்து ஒருவாறு மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடி முடித்தார். இருந்தாலும் தன் மனைவியின் பிறந்த நாளைத் தான் நினைத்தவண்ணம் பரிசு வாங்கி கொண்டாட முடியாமல் போனதற்கு வங்கியில் நேரத்திற்குப் பணம் எடுக்க முடியாமல் ஏற்பட்ட இடையூறே காரணம் என யோசிக்கத் தொடங்கினார். தன்னுடைய சொந்தப் பணத்தையே தன்னால் விரும்பிய நேரத்தில் எடுக்க முடியவில்லையே என வருந்தினார். வங்கி திறந்திருக்கும் நேரத்தில் மட்டும்தான் பணம் எடுக்கமுடியும் என்றால் வங்கி மூடியிருக்கும் நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் சொந்தப் பணத்தை கூடப் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட நேருமே எனத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.
அவருக்குச் சட்டெனச் சாக்லேட் வழங்கும் இயந்திரம் நினைவுக்கு வந்தது. அடடே ஆங்காங்கே இயந்திரங்கள் சாக்லேட்டுகள் வழங்குவது போல, வங்கிப் பணத்தை வழங்க வங்கிகள் சார்பில் ஆங்காங்கே பணம் வழங்கும் இயந்திரங்களை வைத்தால் என்ன?. நேர்முறையாக யோசித்தார் ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டே பிடித்துவிட்டார்.
ஒவ்வொருவரும் பணம் எடுப்பதற்கு ஒரு 'பின்'(PIN) எண்ணை உருவாக்க வேண்டும். பேர்ரன் முதலில் ஆறு இலக்க 'பின்'னைத்தான் உருவாக்கினார். ஆறு இலக்க 'பின்' நினைவில் வைத்துக்கொள்வது சிரமம் என்பதைத் தன் மனைவி மூலம் பின் கண்டுபிடித்து, ஏ.டி.எம். 'பின்'னை நாலு இலக்கத்திற்கு மாற்றினார்.
தன் அன்பான மனைவியின் பிறந்த நாளைத் தான் எண்ணியவாறு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தடையை எப்படிச் சாதனையாக மாற்றினார் பார்த்தீர்களா?. இனி வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பேர்ரனுக்கு ஏற்பட்ட இக்கட்டும், அவர் சாதனையாக்கிய திறமும் நினைவுக்கு வருமல்லவா?.
ஒவ்வொரு தடையையும் நேருகிற ஒவ்வொரு இக்கட்டையும் நமக்கு வந்திருக்கிற துன்பமாக உணராமல், நமக்கு வந்திருக்கிற புதிய சவாலாகக் கருதத் தொடங்கினால் அவையெல்லாம் வாழ்வின் முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக மாறிப்போகும். வருகிற துன்பத்தைச் சவாலாக எண்ணத் தொடங்கும்போது உடம்பிலும் மனத்திலும் அதை எதிர்கொள்வதற்கான புது ரத்தமும் புது ஊக்கமும் பாய்ந்து புறப்படும்.
சிலர் துன்பம் வரும்போது தத்துவக் கண்ணோட்டத்தோடு வாழ்க்கை என்று இருந்தால் துன்பம் என்பதும் இருக்கும் என்று ஏற்றுக் கொள்வார்கள். துன்பத்தை ஏற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் அதிலேயே எதிர்மறை அணுகுமுறையோடு உழலத் தொடங்கிவிடக் கூடாது. துன்பம் இயல்பானது என நேர்முறைச் சிந்தனையோடு ஒத்துக்கொள்வது முதல்நிலை என்றால், தொடர்ந்து வீரியத்தோடும் நம்பிக்கையோடும் எதிர்த்துப் போராடுவதே இரண்டாவது மற்றும் இறுதி வழியாகவும் இருக்க வேண்டும்.
இடும்பை இந்த உடம்புக்கு இயல்பு என்றாலும், வழியில் வந்துள்ள பெரும் பாறையாகத் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடை என்னும் பாறையைச் சிறுசிறு சல்லிக் கற்களாக உடைத்து, அந்தச் சல்லிகளாலேயே புதிய பாதையை அமைத்துத் தடையைக் கடந்துவிடக் கற்றுக் கொள்ளவேண்டும்.
நமக்கு இடையூறுகளும் துன்பங்களும் எந்த நேரத்திலும் வரலாம்; சிறியது பெரியது மிகப் பெரியது என எந்த அளவிலும் வரலாம்; யார் மூலமும் வரலாம். அவற்றை ஏற்பது! எதிர் கொள்வது! ஆகியவற்றோடு அவை குறித்த தன்மைகளை நண்பர்கள், குடும்ப உறவினர் ஆகியோரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றிப் பேசும்போது நம்பிக்கை உணர்வோடு பேச வேண்டும். எந்தத் துன்பமும் மனத்துக்குள்ளேயே கிடக்குமானால் மன அழுத்தம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுப் போகும்.
இடையூறுகளை எதிர்கொள்ளும்போது முழுமையும் வெற்றிதான் என்கிற நேர்முறைச் சிந்தனையோடு எதிர் கொண்டாலும், தோல்வி வந்து விட்டால் அதன் மூலமும் புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். துன்பங்கள் நிகழ்வுகளாக வரலாம்; மனிதர்கள் வடிவிலும் வரலாம். எதிரிகளால் தான் நமக்கு ஒரு விஷயத்தில் வெற்றி என்பது கிடைக்கிறது.
ஜப்பானில் ஒரு கராத்தே மையம். ஆன்மீக அடிப்படையில் அங்கே கராத்தே கற்றுக் கொடுக்கப்படுவதால், கற்றுக் கொடுப்பவர்கள் துறவிகளாக இருந்தனர். அவர்களிடத்தில் ஒரு போர் வீரன் கராத்தே கற்று கொள்ள வந்தான். 'ஓரளவு முழுமையாகக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்?' என்று தலைமைத் துறவியைக் கேட்டான். 'அது உனது மனப் பக்குவத்தைப் பொறுத்தது' என்ற துறவி, 'இப்போது நீ வீரனாக இருக்கிறாய்! இப்போதைக்கு நீ ஒருவனாக எத்தனைபேரை அடித்து வீழ்த்த முடியும்?' என்று கேட்டார். 'என்னால் நூறு பேரை வீழ்த்த முடியும்!' என்றான் வீரன் பெருமையாக.
கராத்தேப் பயிற்சியில் சேர்க்கப் பட்டான். ஆறு மாதம் கழிந்தது; தலைமைத் துறவி அழைத்தார், ' பயிற்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? இப்போது உன்னால் எத்தனை பேரோடு சண்டைபோட்டு வீழ்த்தமுடியும்?' கேட்டார். கொஞ்சம் தயக்கத்தோடு வீரன் சொன்னான், 'இப்போதைக்கு என்னால் ஒரு ஐம்பதுபேரை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்!' என்றான். குரு சிரித்துக்கொண்டே இன்னும் ஆறு மாதம் பயிற்சி எடு! பிறகு சந்திப்போம்!' என்று கூறி அனுப்பி வைத்தார்.
அடுத்த ஆறுமாதம் கழித்து வீரனை அழைத்தார் தலைமைத் துறவி. இப்போது முன் எப்போதுமில்லாத முகத்தெளிவோடும் நிதானித்த நடையோடும் வந்து நின்றான் வீரன். 'பயிற்சி எப்படி? இப்போது உன்னால் எத்தனை பேரோடு சண்டையிட்டு ஜெயிக்க முடியும் என்று கருதுகிறாய்?' கேட்டார் குருநாதர். மிகுந்த பணிவோடு வீரன் சொன்னான், 'குருவே நான் எத்தனை பேரை வெல்லும் பலசாலி என்பதை என்னால் எப்படித் தீர்மானிக்க முடியும்? என்பலத்தை என் எதிரிகளே தீர்மானிப்பார்கள். என்னால் முடியாது; மன்னித்து விடுங்கள்' என்றான். 'பலே! உனக்குக் கராத்தேப் பயிற்சி முடிந்து விட்டது! இனி உன்னை வெல்ல யாராலும் முடியாது! ஏனென்றால் நீ இப்போது உன்னையே வெல்லும் உபாயம் கற்று விட்டாய்!' என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
ஆம்! நமக்கு வருகிற இக்கட்டுகளே நம்மை அறிந்துகொள்ளும் உபாயங்களைக் கற்றுத் தருகின்றன!. நம்மை வாட்டி வதைக்கும் துன்பங்களே நம்மைப் புடம்போடுகின்றன. எல்லாத் துன்பங்களையும்
ஏற்றுக்கொள்வோம்!
எதிர்கொள்வோம்!
வெற்றி கொள்வோம்!
ஏற்றம் பெறுவோம்!
தொடர்புக்கு 94431 90098