மலரும் நினைவுகள் மீனா: மனதை மாற்றிய பாடல்...
- எந்த பொண்ணுக்கும் தன்னை புகழ்ந்தால் மெய்சிலிர்த்து போகாதா என்ன! இந்த மீனா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?
- நேரத்தை கடைபிடிப்பதில் எவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறார்? என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
அடி மீனா பொண்ணு... மீனா பொண்ணு. மாசியில் போட்டா மாராப்பொண்ணு...
இப்படி ஒரு பாடல் முதல்முதலில் என் காதில் வந்து விழுந்ததும் எப்படி இருந்திருக்கும்...?
கிறங்கித்தான் போனேன்... அதனால்தான் நாட்டாமைக்கு ஜோடியானேன்...
1994-ல் நான் தெலுங்கு பட உலகில் முன்னணி நட்சத்திரம். ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்தேன். அப்போது தான் நாட்டாமை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி.
அது மட்டுமல்ல. படத்தில் கதாநாயகன் சரத்குமார். அவருக்கு இரட்டை வேடம். நாட்டாமையாக வரும் சரத்குமாருக்கு குஷ்பு ஜோடி. அவரது தம்பி சரத்குமாருக்கு நான் ஜோடி.
அந்த காலக்கட்டத்தில் தமிழில் குஷ்பு மிகப்பெரிய நட்சத்திரம். எனவே இவ்வளவு பெரிய ஜோடியுடன் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா? என்ற தயக்கத்தில் அந்த வாய்ப்பை ஏற்கும் எண்ணம் இல்லாமல் இருந்தேன்.
படம் வெளியான பிறகு அய்யய்யோ இப்படி ஆகிவிட்டதே! இந்த பாத்திரத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாமே! என்று வருத்தப்படுவதில் பிரயோஜனம் இல்லை. எனவே கொஞ்சம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தோன்றியது.
இன்னொரு பக்கம் படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நினைத்து பார்த்தேன். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். புகழ்பெற்ற நிறுவனம். நேரத்தை வீணடிக்கமாட்டார்கள்.
இப்படி பல எண்ணங்களால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் படக்குழுவினர் என்னை மீண்டும் சந்திக்க வந்துள்ளார்கள். 'நல்ல படம் மேடம். நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்' என்றார்கள்.
பேசிக் கொண்டிருந்த போதே படத்தின் பாடல்களை கேட்டுப் பாருங்களேன்... நிச்சயமாக நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றபடி டேப் ரெக்கார்டரில் பாடலை போட்டார்கள் (அந்த காலத்தில் சி.டி., பென்டிரைவ் என்பதெல்லாம் கிடையாது.)
பாடல் ஒலிக்க தொடங்கியது. 'மீனா பொண்ணு... மீனா பொண்ணு' என்று பாடல் ஒலித்ததும் என்னையே குறிப்பிட்டு புகழ்ந்து பாடியது போல் இருந்தது.
எந்த பொண்ணுக்கும் தன்னை புகழ்ந்தால் மெய்சிலிர்த்து போகாதா என்ன! இந்த மீனா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?
அந்த பாடல் என் மனதை மாற்றிவிட்டது. உடனே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
24 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தேன். குறித்த நாட்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும். கூடுதலாக ஒருநாள் தாருங்கள்... இரண்டு நாள் தாருங்கள் என்று கடைசி நேரத்தில் வந்து நிற்க கூடாது. ஓய்வு கிடைத்தால் வேறு ஷூட்டிங் சென்று வரவும் அனுமதிக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளையும் போட்டேன். எல்லாவற்றுக்கும் ஓ.கே. சொன்னதால் நானும் ஓ.கே. சொன்னேன்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார்.
அவரை முதல் முதலில் சந்தித்தது இந்த படத்தில்தான். அதேபோல் சரத்குமார் சார், குஷ்பு மேடம் ஆகியோரை சந்தித்ததும் இந்த படத்தில்தான்.
இவர்கள் மூன்று பேரை பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் யாரையும் அதுவரை நேரில் சந்தித்தது கிடையாது.
ரவிக்குமார் சார் ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். நேரம் தவறாமையை கடைபிடிப்பார். சின்ன தவறு சொய்தால்கூட கன்னா பின்னா என்று திட்டுவார் என்றெல்லாம் கூறினார்கள்.
எனவே என்னதான் பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் அவரிடம் திட்டு வாங்கிவிட கூடாதே என்ற பயத்துடனேயே ஷூட்டிங் கிளம்பி செல்வேன்.
படப்பிடிப்பு தொடங்கியது. 'மீனா பொண்ணு... மீனா பொண்ணு...' அந்த பாடல் காட்சிகளை எப்போது எடுப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.
அந்த காட்சி கடைசியில்தான் படமாக்கப்பட்டது. ஒருநாள் ஷூட்டிங் முடிந்து 12 மணிக்கு மதிய உணவு இடைவேளை விட்டார்கள். மீண்டும் மதியம் 2.15 மணிக்கு ஷூட்டிங் என்றார்கள். சென்னையில்தான் ஷூட்டிங் நடந்தது. எனவே 2 மணி நேரம் இருக்கிறதே வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வரலாமே என்று டைரக்டரிடம் அனுமதி கேட்டேன்.
அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் தாராளமா போயிட்டு வாம்மா. ஆனால் 2.15 மணிக்கு வந்துவிடு என்றார்.
சரிசார் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன். சாப்பிட்டு முடித்து 1.45 மணிக்கே ரெடியாகிவிட்டேன்.
2.15 மணிக்குதானே வரச் சொன்னார். எப்படியும் கால் மணிநேரம், அரை மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்குவார்கள். எனவே கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்று சும்மாவே இருந்தேன்.
அம்மா தான் சொன்னார், 'ரெடியாகி விட்டால் கிளம்பி போ... கொஞ்ச நேரம் முன்கூட்டி சென்றால் என்னவாகும்? என்றார்.
சரி, கிளம்புறேம்மா என்று அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டு சென்றேன். மூன்று நிமிடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சேர்ந்தேன்.
அங்கு பார்த்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனேன். டிராலி, லைட் உள்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடும் தயார் செய்யப்பட்டு ரெடியாக இருந்தது. 'கிளாப்' சொல்ல வேண்டியதுதான் மிச்சம்.
நேரத்தை கடைபிடிப்பதில் எவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறார்? என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவர் லெவலே வேறு என்று முடிவு செய்தேன். அதன்பிறகு அவர் படத்தில் நடித்தால் ஒருநாள் கூட தாமதமாக செல்லமாட்டேன். படப்பிடிப்பு நிறைவடைந்தது. தினமும் சரியான நேரத்தில் ஆஜர் ஆகிவிடுவேன். அதைபார்த்து ரவிக்குமார் சார் வாழ்த்துவார்.
அவரை போன்றவர்களின் வாழ்த்தும், ஊக்கமும்தான் என்னை தொடர்ந்து உயர வைத்தது. அதே போல் அந்த படமும் தமிழில் என்னை மேலும் ஒருபடி மேலே கொண்டு சென்றது. 175 நாட்கள் ஓடியது.
பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படமாக்கப்பட்டது.
அடுத்த வாரம் மற்றுமொரு தகவலுடன் வருகிறேன்...
தைப்பொங்கல் நெருங்குகிறது.
அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
(தொடரும்...)