சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்: சென்னை ரசிகர்களின் ரங்கநாயகி கோஷம்

Published On 2023-12-18 14:57 IST   |   Update On 2023-12-18 14:57:00 IST
  • நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்க சென்றது உற்சாகமாக இருந்தது.
  • நான் அந்த டிரஸ்சில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு மின்னல் வேகத்தில் ஆடிய படி செல்வேன்.

8 டிசம்பர் 2023...

மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த சென்னை நகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நேரம்...

மழை வெள்ள பாதிப்பை நேரில் அனுபவிப்பவர்களில் நானும் ஒருத்தி. எனவே அதன் வேதனையும், வலியும் எனக்கு புரியும்.

2015 மழை வெள்ளத்தில் எங்கள் வீட்டின் தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போனது. குடும்பமே மேல் தளத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம்.

விலை உயர்ந்த பொருட்கள், அரிய பொருட்கள் என அத்தனையும் வெள்ளத்தில் வீணாகி போனது. நாங்கள் அன்று அனுபவித்த வேதனை இன்று வரை எங்கள் மனதில் மாறாத வடுவாக உள்ளது.

துயரத்தில் ஒரு ரிலாக்சுக்காக 28 வருடங்களுக்கு முன்பு ரஜினி சார் ஜோடியாக நான் நடித்து வெளிவந்த 'முத்து' படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்ததால் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தேன். நான், கே.எஸ்.ரவிக்குமார் சார், அவரது குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்க சென்றது உற்சாகமாக இருந்தது. அதிலும் இந்த 28 வருஷத்தில் இப்போது தான் 'முத்து' படத்தை முழுமையாக பார்க்க போகிறேன்...

அதெப்படி... நெசமாகவா...? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

அட, நெசமாகத்தான் சொல்கிறேன். முத்து படத்தை இதுவரை முழுமையாக பார்த்தது கிடையாது. அப்ப.. அப்ப.. சில சீன்கள், பாடல்கள் கேட்டிருக்கிறேன் அவ்வளவு தான்.

அந்த படம் வெளியான காலக்கட்டத்தில் நான் பிசியான நடிகை. உட்கார நேரமில்லாமலும், தூங்க நேரமில்லாமலும், சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமலும் ஓடி, ஓடி உழைத்துக்கொண்டு இருந்த காலக்கட்டம். இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.

அதற்குள் தற்காலத்துக்கு வந்து விட்டீர்களே கடந்த காலம் இன்னும் நிறைய இருக்கே..? என்று ரசிகர்களும், வாசகர்களும் நினைக்கலாம். உண்மை தான்.

ஆனால் இது இப்போது நடந்தது. எனவே சூட்டோடு சூடாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வரும் வாரங்களில் விட்டதில் இருந்து தொடர்கிறேன்.

பட ஒளி வெண்திரையில் விழுந்தது. படத்தை பார்ப்ப தில் ரசிகர்களை விட எனக்கு அதிக ஆர்வமாக இருந்தது.

ஒருவன் ஒருவன் முத லாளி... என்ற பாடலை பாடிக்கொண்டு ரஜினிசார் குதிரை வண்டியில் என்ட்ரி ஆனதும். தியேட்டரில் விசில் பறந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தில் திரையரங்கமே அதிர்ந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் தெரிந்த போது வாவ். இவ்வளவு அருமையாக நாம் நடித்திருக்கிறோமா. இந்த காட்சி இந்த இடத்தில் வைத்து படப்பிடிப்பு நடந்ததல்லவா? இந்த காட்சி படமாக்கப்பட்ட போது இந்த, இந்த சம்பவங்கள் நிகழ்ந்த தல்லவா? என்று பல நினைவுகள் என் கண் முன்னே வந்து போனது. நானே மறந்து போன பல நினைவுகளை முத்து எனக்கு நினைவூட்டியது.

படம் பார்க்க, பார்க்க ஆசை, ஆனந்தம். எல்லாவற்றிக்கும் மேலாக தியேட்டருக்கு நான் வந்திருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள்... ரங்க நாயகி.. ரங்க நாயகி... என்று உற்சாக குரல் எழுப்பியதும் மனதுக்குள் எழுந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 28 ஆண்டு களுக்கு பிறகும் அதே உற்சாகம் தரைபுரள ரசிகர்கள் என்னை கொண்டாடியதை நேரில் பார்த்ததும் மனதுக்குள் மிகப்பெரிய பூரிப்பு.

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

இதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா. முத்து படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போது நான் தெலுங்கு படத்தில் பிசியாக இருந்தேன். ஆனாலும் ரஜினி சாருடன் ஜோடி, கே.எஸ்.ரவிக்குமார் சார் டைரக்ஷன் என்றது படத்தை விட மனதில்லை. கதை என்ன, எனது பாத்திரம் என்ன என்று எதுவும் கேட்டகவில்லை. மொத்தத்தில் 20 அல்லது 22 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்து இருந்தேன். முதல் நாள் படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. முதல் காட்சி யே கிளைமாக்ஸ் காட்சியை தான் படமாக்கினார்கள்.

அன்றைய தினம் நான் மைசூர் சென்று சேர்வதற்கு முன்பு ஒருவன் ஒருவன் முதலாளி... என்ற பாடல் காட்சியை ரஜினி சாரை வைத்து ஹூட்டிங் முடித்திருந்தார்கள். நான் போனதும் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கினார்கள்.

படப்பிடிப்பு கேரள மாநிலம் சொரனூர் மற்றும் மைசூரில் நடந்தது. 'தில்லானா... தில்லானா... நீ தித்திக்கின்றதேனா...'

பாடல் காட்சியை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். அந்த ஒரே பாடலுக்கு 6 வித மான காஸ்ட்யூம்கள்.

எந்த நிற உடையில் வருகிறேனோ அதே நிறத்தில் செட் அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் ஷுட்டிங் முடிந்து மறுநாள் என்னகலர் உடையில் ஷுட்டிங் நடக்குமோ அதே கலர் பெயின்ட் செட்டிற்கும் அடிக்கப்படும். இப்படி தொடர்ந்து 6 நாள் அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தான் செட் அமைத்து இருந்தார்கள்.

சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், இளம்பச்சை, கோல்டன் கலரில் ஆடைகள் இருந்தது. கோல்டன் கலர் காஸ்ட்யூமை இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.

உடல் முழுவதும் ஜிகு.. ஜிகு... என்று தங்கத்தை போல் மின்னும். அதுவும் பளிச்சென்று லைட் வெளிச்சத்தில் என்னை பார்த்தாலே கண்ணை பறிக்கும்.

நான் அந்த டிரஸ்சில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு மின்னல் வேகத்தில் ஆடிய படி செல்வேன். ரஜினிசார் ஸ்டெப் எடுத்து வைப்பார்... அதற்குள் கண்ணை பறிக்கும் எனது ஆடை யால் ஸ்டெப் சரி வராது! என்னப்பா... அந்த பொண்ணு மின்னல் போல் வருகிறது. திரும்பி பார்ப்பதற்குள் சென்று விடுகிறது என்பார். அந்த ஒரு டேக்கை மட்டும் நாலுமுறை எடுக்க வேண்டிய தாயிற்று...

இப்படி இன்னும் பல சுவாரஸ்யங்கள் முத்துவிடம் உள்ளது. அடுத்த வாரம் சுவா ரஸ்யங்களை பகிர வருகிறேன்.

(தொடரும்...)

Tags:    

Similar News