- பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர்களான கதைகள் நமக்குத்தெரியும்.
- மற்ற செயற்கைக்கோள்களைப்போல பூமியைச்சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக்கண்காணித்து தகவல்கள் தந்து ஆராய உதவும்.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா கண்ட பல வெற்றிகளைப் பார்த்தோம். அவை வெறும் பண விரயம் அல்ல என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இஸ்ரோ சேர்மன் ஒரு முறை சொன்னார் இஸ்ரோவின் ஆராய்ச்சிகள் ஏதோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது மட்டுமில்லை. அவர்களால் மிகத்துல்லியமாக சீதோஷ்ண நிலைமைகளையும் வரப்போகும் புயல் எச்சரிக்கைகளையும் முன் கூட்டியே அறிந்து வானிலை மையங்களுக்கு தெரியப்படுத்தி மீனவர்களை தக்க சமயத்தில் உஷார்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த 100 வருடங்களுக்குத்தேவையான விஷயங்களின் முதல்கட்ட ஆராய்ச்சி களை இப்போதிருந்தே தொடங்குவதற்கான அளவில் திட்டங்கள் போடப்படுகின்றன. இப்போது செலுத்தப்பட்ட சந்திரயான் வெற்றிப்பயணம் உலகத்தையே நம்மை திரும்பி பார்க்கச்செய்திருக்கிறது..
விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் சரித்திரம் பொன்னேட்டில்…. ஆம் அதேதான்! இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் புவி நோக்கு செயற்கைக்கோள் ஐ.ஆர்.எஸ். 1ஏ –அனுப்பப்பட்டது. அதன் பிறகு இது வரை 10 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுவிட்டன. அவற்றில் ஆறு இன்னும் திருப்திகரமாக செயல்பட்டு நமக்கு வேண்டிய விண்வெளித்தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறன.
ஒரு காலத்தில் இந்த இஸ்ரோ அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்களை கொண்டே ஆராய்ச்சிகள் செய்து வந்த நிலை மாறி, இன்று இந்தியாவே பல வெளிநாடுகளுக்கு விண்வெளித்தகவல்கள் தரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது நிச்சயம் இஸ்ரோவின் மறுக்க முடியாத சாதனையே. இதுவும் அவ்வளவு சுலபமாகக்கிடைத்த வெற்றியல்ல. பல வருடங்களாக இந்த இஸ்விரோவின் அலுவலர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையிலும் பேசி மீட்டிங் போட்டு அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று பெரிய லிஸ்ட் எடுத்து பேயாய் உழைத்திருக்கிறார்கள். இஸ்ரோ செயற்கைக்கோள் அனுப்ப தயாராகியவுடன் அதிலிருந்து கிடைக்கப்போகும் தகவல்களை எடுத்துக்கொள்ள இந்த அரசு கிளைகள் ரெடியாக போட்டிபோட்டுக்கொண்டு வர, அப்புறம் என்ன, வெற்றிதான்.
இந்த செயற்கைக்கோள்களின் உறங்கா விழிகள் நமக்குத்தரும் தகவல்களின் விஸ்தீரணமும் பயன்பாடுகளும் அடர்த்தியும் சொல்லிமாளாது.
துல்லியமான பயிர் வளர்ப்பு ஏக்கரா, சாகுபடி அளவு, வறட்சி அல்லது வெள்ளத்தின் நஷ்ட கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பல்லுயிர் கண்காணிப்பு, நீர் மேலாண்மை, பனிப்பாறை ஆய்வு, தாது மற்றும் உலோக ஆய்வு, கடலியல் ஆராய்ச்சி என்று செயற்கைக்கோள் தரும் தகவல்களின் பயன்பாடு ஒரு நாட்டின் வாழ்வாதாரத்துக்கே மிக அத்தியாவசியமானதாகபோய்விட்டது.
கார்டோசாட் 2ஏ என்னும் செயற்கைக் கோளை 2007-ல் செலுத்தினார்கள். இதில் பல நிறங்களையும் தனித்தனியாகப் பகுத்துணரும் பான்-குரோமேடிக் கேமராவைப்பொருத்தியதால் பூமியின் சின்னச்சின்ன வித்தியாசங்களையும் துல்லியமாக கண்டறியமுடியும்.
ஏன், தெருவில் போகும் ஒவ்வொரு வாகனத்தைக்கூட கவனிக்க முடியும்! இப்படிப்பட்ட கேமிராவினால் நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளையும் கூர்மையாக கண்காணித்து, திட்டமிட்டு செயல்படுத்தமுடியும்.
இதற்கு முன் செலுத்தப்பட்ட காடோசாட் ஒன்றுடன் சேர்ந்து இவை இரண்டும் இன்னும் அதிக நிலப்பரப்பைக்கண்காணிக்க இயலும். கார்டோசாட் 2 இ வரை செலுத்திவிட்டோம். இனி 2எப் வருடக்கடைசியில் போகப்போகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த செயற்கைக்கோள்கள் மூலம் நாம் அறியக்கூடிய தகவல்களின் முக்கியத்துவம் மிக அதிகம்.
மெகா-டிரோபிகியுஸ் என்னும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் பிரான்சும் இணைந்து செயல்பட்டு அனுப்பும் செயற்கைக்கோள் மிகப்பயனுள்ள ஆராய்ச்சிக்கான தகவல்கள் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை கோளின் ஜியோ ஸ்டேஷனரி தன்மை ஒரு வித்தியாசமான அம்சம். மற்ற செயற்கைக்கோள்களைப்போல பூமியைச்சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக்கண்காணித்து தகவல்கள் தந்து ஆராய உதவும். இந்தத்தகவல்கள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு மட்டுமன்றி பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்ட தகவல்களைத்தரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இன்றைய விஞ்ஞான முன்னேற்ற காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் தங்கள் நாட்டின் வளங்களைப்பற்றி நுட்பமாக ஆராய்ந்து அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகை செய்யமுடியும் என்பதைக்கையில் எடுத்துவிட்டன. சாதாரண சிறிய நாடுகள் கூட தங்கள் பட்ஜெட்டில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கென கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் அந்தச்சிறிய நாடுகளால் செயற்கைக்கோள்கள் செலுத்தும் தொழில்நுட்பத்திலோ அல்லது அதற்கான முதலீடுகளிலோ தாக்குப்பிடிக்க இயலாது. ஆகவே அவை அமெரிக்கா, இந்தியா போன்ற செயற்கைக்கோள் இயலில் மிக முன்னேறிவிட்ட நாடுகளிடம் காசு கொடுத்து தங்கள் நாட்டுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வேலையைத்தருகின்றன. இது நம் நாட்டுக்கும் இஸ்ரோவுக்கும் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சேவையாகும்.
உலக விண்வெளி வர்த்தகத்தில் நம் இஸ்ரோவின் திறமையும் நம்பகத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இனி வரும் விண்வெளி வர்த்தக வருமானத்தில் கணிசமான பங்கை இந்தியாவுக்குக்கொண்டு வருவதில் இஸ்ரோ அரும்பணி ஆற்றப்போகிறது.
உலகமெங்கும் விண்வெளி என்பது ஆராய்ச்சியைத்தாண்டி வர்த்தகத்தினுள் நுழைய ஆரம்பித்துவிட்டது. விண்வெளி வர்த்தகம் என்பது இன்று கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் இந்த விண் வெளி இயல் வர்த்தகத்தில் உருவாகிச்செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய வென்ச்சர் பண்ட் என்னும் துணிகர நிதி நிறுவனங்கள் இந்தமாதிரியான விண்வெளி வர்த்தகம்தொடங்கும் கம்பெனிகளுக்கு முதலீடுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருவது இந்த விண்வெளி வர்த்தகம் இன்னும் இன்னும் விரிவடையப்போவதின் முன்னோட்டமே. ஏன் இந்தியாவிலேயே இன்று பல விண்வெளி வர்த்தக கம்பெனிகள் உருவாகி செயல்பட்டு வருகின்றதை பார்க்கிறோம்.
தனியார் மயமாக்குதலின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதாரண மனிதனும் செல்வந்தனாக முடிவதே. பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர் களான கதைகள் நமக்குத்தெரியும்.
"என்னப்பா, ஒரு மாசமா ஆளையே காணலை?"
"அதா, ஒரு டிரிப் சுவிட்சர்லாந்துக்கு போயிருந்தேன் குடும்பத்தோட!"
" என்னது சுவிட்சர்லாந்தா…?"
"வாயைப்பொளக்காத! போன வருஷம் இஸ்ரோ ஷேர் வாங்கியிருந்தேன். இப்ப மார்க்கெட் விலை எங்கயோ போயிடுத்தே! அதான் 100 ஷேர்களை வித்து வந்த லாபத்துல பாரின் டூர்! இன்னொரு 100 வித்து பொண்ணு கல்யாணதையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்!"
பாரத ரத்தினங்கள் என்று வெற்றிகரமான அரசு நிறுவனங்களின் பங்குகளை நாட்டு மக்களுக்கு விற்கும் நாள் வந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த சம்பாஷணையையும் நாம் கேட்க முடியும்!