புதுச்சேரி

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்- புதுச்சேரி அரசு எச்சரிக்கை

Published On 2025-04-18 11:18 IST   |   Update On 2025-04-18 11:18:00 IST
  • கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.
  • அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு கடந்த 10-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி கடல்சார் மீன்வளங்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி கனக செட்டிகுளம் முதல் மூர்த்தி குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமம் வரை இழுவலை கொண்டு விசைப்படகு, எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை விதிகப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட சில மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மற்ற மீனவ கிராமங்களிடையே பதற்றம் நிலவுகின்ற சூழல் ஏற்படலாம்.

எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் தடைக்கால நிவாரண தொகை நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News