புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த திட்டம்- கல்வித்துறை நடவடிக்கை
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
- இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வும் எழுதியுள்ளனர். திடீரென சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாடம் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஆங்கிலப் புலமை இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மிஷன் இங்கிலிஷ்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் ரூ.22 லட்சம் செலவில் பெங்களூருவில் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புத்தகம் வழங்குவதோடு மட்டுமன்றி தினசரி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடவேளை இந்த 'மிஷன் இங்கிலிஷ்' புத்தகத்தை நடத்தவும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.