இந்தியா

பிரபல கேங்ஸ்டர் கொலை: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி முதல்வர் உத்தரவு

Published On 2023-04-16 06:28 IST   |   Update On 2023-04-16 06:28:00 IST
  • மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்.
  • உ.பியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

முன்னாள் எம்.பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் எதிரொலியால், உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News