இந்தியா

கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2022-08-10 05:27 GMT   |   Update On 2022-08-10 05:27 GMT
  • கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
  • அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணை, முல்லை பெரியாறு, இடை மலையாறு, பாணாசுர சாகர், கக்கி, பம்பா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள், ஆறுகளில் உபரி நீர் பாய்ந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு அணைகளும் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒடிசா கடற்கரை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை (11-ந் தேதி) வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். இதனால் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த 31-ம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை என்றும். 58 வீடுகள் முழுமையாகவும், 412 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News