அடுத்தது என்ன?.. முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- கடந்த 3 நாட்களாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லை மாநில பகுதிகளில் தாக்குதல் நடந்தது.
- மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மோடியிடம் விவரங்களை எடுத்துக்கூறினர்.
இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடனான உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 3 நாட்களாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லை மாநில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இந்தநிலையில், இரு நாடுகளிலும் அமைதி ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட உலக சக்திகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இன்று மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இந்தியா ஏற்ற நிலையில் மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையும் மீறி பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.