இந்தியா

என்னை சுற்றிலும் சடலங்களாக கிடந்ததை பார்த்து பயந்து ஓடினேன் - விமான விபத்தில் உயிர் தப்பிய வாலிபர் பேட்டி

Published On 2025-06-13 13:19 IST   |   Update On 2025-06-13 13:19:00 IST
  • பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ் குமார், 20 ஆண்டுகளாக லண்டனில் இருந்து வருகிறார்.
  • விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 241 பயணிகள் பலியாகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற வாலிபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விமானம் வெடித்து சிதறியதால் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், விஷ்வாஸ் குமார் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

விஷ்வாஸ் குமார் அமர்ந்திருந்த இருக்கை விமானத்தில் இருந்து உடைந்து விழுந்ததால் அவர் உயிர் தப்பி உள்ளார். அவருக்கு முகம், கால்கள், மார்பு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ் குமார், 20 ஆண்டுகளாக லண்டனில் இருந்து வருகிறார். இந்தநிலையில் இந்தியாவுக்கு வந்திருந்த அவர், தனது சகோதரர் அஜய்குமார் ரமேசுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா வந்திருக்கிறார்.

பின்பு இருவரும் லண்டன் திரும்பியபோது விமான விபத்தில் சிக்கிக் கொண்டனர். விமான விபத்து குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது. பலத்த சத்தத்துடன் விமானம் வெடித்து சிதறியது. நான் எழுந்து பார்த்தபோது என்னை சுற்றி இறந்த உடல்கள் கிடந்தன. அதனைப்பார்த்து நான் மிகவும் பயந்தேன். இதையடுத்து நான் எழுந்து ஓடினேன்.

விபத்து நடந்த இடம் முழுவதும் விமானத்தின் இடிபாடுகளாக கிடந்தன. பின்னர் யாரோ ஒருவர் என்னை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடன் பயணித்த எனது சகோதரர் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News